28

28

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப் பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சீரற்ற காலநிலையால் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிப்பு !

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கியிருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான அனர்த்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 8 பேர் அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் உலக வங்கி கவனம்!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது.

 

இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

பொருளாதார கொள்கைகள், நிதி, போட்டித்தன்மை, முதலீடு,நிறுவன மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் தற்போதும் உலக வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்து, நீர் முகாமைத்துவம்,பாதுகாப்பு,சுற்றாடல் நிலைத்தன்மை, சமூக மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக, கிராமிய பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி துறையின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும், சுற்றுலாத் துறை, கடல்சார் தொழில்துறை, அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி துறைகளை பலப்படுத்தி அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தல், குறிப்பாக கல்வி, சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, இந்த பகுதிகளில் காணப்படும் தொழிற்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கல்வி மற்றும் தொழில் கல்வித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

2025 ஜூலை 25 ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் 20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய உலக வங்கியின் தலைவர் உலக வங்கிக் குழுமத்தின் கீழ் காணப்படும் மீள் கட்டியெழுப்பல் மற்றும் அவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD), சர்வதேச அபிவிருத்தி வங்கி (IDA), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் பலதரப்பு முதலீட்டு பிணைகளுக்கான முகவர் நிறுவனம் (MIGA) உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் மேற்படி அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை !

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

 

இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார் !

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான சேகு இஸ்ஸதீன் வேதாந்தி என்ற பெயரில் பிரபல கவிஞராக அறியப்பட்டவர். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் உடன் இணைந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாபித்தவர்களில் இவரும் ஒருவர்.

அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இதன் பின்னர் பேரியல் அஷ்ரப் தலைவராக செயற்பட்ட காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்த இவர், ஊடகத்துறை பிரதியமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

 

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் அரச ஊடகத்துறையில் தமிழ், முஸ்லிம் பணியாளர்களை கூடுதலான அளவில் நியமித்தல், அரச தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து போன்றவற்றில் சேகு இஸ்ஸதீன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை அவர் அக்கரைப்பற்றில் காலமாகியுள்ளார்.

தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் விசேட செயலாளரான சட்டத்தரணி ஹஸானா இஸ்ஸதீன், இவரது புதல்விகளில் ஒருவராவார்.

சட்ட விரோத கட்டங்கள் அனைத்தையும் அகற்றுங்கள் – வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு !

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு மாணவர்கள் சடலமாக மீட்பு !

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காணாம்ல்போனோரை தேடும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் இந்நிலையில் முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), பாறுக் முகமது நாஸிக் (வயது 15), சஹ்ரான் (வயது 15), அப்னான் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

 

தஸ்ரிப், யாசீன் ஆகிய மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் (26) செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 13 பேருடன் சென்ற உழவு இயந்திரமே காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற 5 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 6 மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதியும், உதவியாளரும் என 8 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காணாமல்போயிருந்த 8 பேரில் நால்வர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் ஏனைய நால்வரையும் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.

இந்நிலையில் மாணவர்களின் உயிரிழப்பு அம்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?

அரசியல் ஆய்வாளர் – தமிழ் சொலிடாரி முக்கியஸ்தர் சேனனுடனான பரபரப்பான கலந்துரையாடல்..!

 

 

டிசம்பர் 03ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானம் !

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும்.

 

நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும்

 

நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும்

 

நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும்

 

நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும்

 

டிசம்பர் 2ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 30ஆம் திகதியும்

 

டிசம்பர் 3ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

 

பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பரீட்சார்த்திகளுக்குரிய புதிய நேர அட்டவணை டிசம்பர் மாதம் 7ஆம் திகதியளவில் அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

நேற்று(27), இன்று(28) மற்றும் நாளைய தினங்களில்(29) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள இடர் கால உதவித் திட்டங்களை மேற்கொள்ளாமல் ஏமாற்று அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தரப்பினர் !

பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, நாடாளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,”

இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில்  ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர்.

பேரழிவால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பாடுள்ளது.

இயற்கை பேரிடர் ஏற்படும் போது, ​​உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற உடனடி உதவிகளை வழங்குவது அரசின் கடமை.

 

இருப்பினும், பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் இருந்தபோதிலும், வடக்கிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சேவையை செய்வதை விட புகைப்படங்கள் எடுப்பதை தான் அதிகம் செய்கின்றனர்”என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளால் உதவிகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளை நம்பியிருக்கிறார்கள்.

“நாங்கள் இரவும் பகலும் களத்தில் இருந்தோம், முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம் மற்றும் காலநிலை எச்சரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்போம்,” என்று அவர் கூறினார்.

“பொறுப்பான ஆட்சியை எதிர்பார்த்த மக்கள் வடக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனாலும், சில வாரங்களுக்குள்ளேயே, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்பத்துக்குள்ளாகின்றனர். மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரே நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுன தலைவர் பொறுப்பான நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து முடித்தார், “நாட்டிற்குத் தேவை தங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சட்டமியற்றுபவர்கள் தான், பேரழிவு மற்றும் தேவையின் போது தங்கள் கடமைகளை கைவிடுபவர்கள் அல்ல.” என்றார்.

மக்கள் மிகப்பெரிய வெள்ள இடர் ஒன்றில் சிக்கித்தவிக்கின்ற போதும் கூட தங்களுடைய எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கான எதுவிதமான உதவிகளையும் வழங்கத்தயாரில்லை. மாறாக வழமை போல் மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் சிக்கி பாடசாலைகளில் தஞ்சம் கோரியிருக்கும் நிலையில் கூட மாவீரர் தினத்தை வைத்து அரசியல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இதேவேளை இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட ரீதியான அங்கத்தவர்களும் – பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக களத்தில் இறங்கி கள நிலவரங்களை ஆராய்ந்து தேவையான நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருவதை அறிய முடிகிறது. குறிப்பாக கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு வரும் பணிகளையும் – மக்களுக்கான மூன்று வேளை உணவுகளையும் வழங்கி வருவதாகவும் தேசம்நெட்இன் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.