November

November

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்!

இந்நாட்டின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவர் மொரட்டுவை வேல்ஸ் குமரி கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.

தலைநகர் கோட்டையில் சரிந்தது சஜித்பிரேமதாசவின் பலம் !

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.

 

2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

 

அதன்படி, 2020 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.

 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பல கோட்டைகளின் பலத்தை முறியடித்து இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

கொழும்பு வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு போன்ற பல தொகுதிகள் நீண்ட தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த சிறப்பு கோட்டைகளாக இருந்தன.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கோட்டைகளில் வெற்றிப் பெற்றிருந்த போதும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியி குறித்த கோட்டைகளை தம்வசம் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளது.

 

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக இருந்த கொழும்பில் உள்ள பல தொகுதிகளின் அதிகாரமும் இம்முறை சஜித் பிரேமதாசவிடம் இருந்து பறிபோயுள்ளது.

அனைவரையும் இணைத்து செயற்பட அழைக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில்,ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இனப்பிரச்சினை குறித்தும், அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடையங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

 

குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும்.

 

மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல்,எமது நிலங்கள் பரிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல்,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்கிறார் நாமல்ராஜபக்ச !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷவை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை – மகிந்த ராஜபக்ச நம்பிக்கை!

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வுப் பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், தேர்தலில் நாம் எதிர்ப்பார்த்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் எமக்கு எதுவும் பிரச்சினையில்லை. புதியவர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியை தேர்தலில் வெற்றிபெற செய்தவர்கள் இந்த நாட்டு மக்கள். நாங்கள் மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றோம்.

 

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிவருகின்றோம்.

அதேபோல் அரசியலில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கில் நிராகரிக்கப்பட்ட ஒரு லட்சம் வரையிலான வாக்குகள்!

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 1,95,886பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,02,382 பேரில் 15,329பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 2,87,053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3,15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,18,425பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 2,04,888பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை )5,55,432வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,80,523பேர் வாக்களித்த அதேநேரம் 1,74909 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 3,80,523 பேரில் 17,599 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 3,62,924பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது,கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும்,நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும் கட்;டுப்பட்டவனாகாயிருக்கின்றேன் இந்த விடயத்தில் நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன்,

மக்கள் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்திருக்கின்றேன்.

10க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட தமிழ்மக்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல்,ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

 

அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார்.

 

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

 

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், முதன்முறையாக அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

 

அதேபோல்,வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

 

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மலையகத்தில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெண்கள்!

நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.

12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து அம்பிகா சாமுவேல், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஸ்ணன் கலைச்செல்வியும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மலைய பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்புமுனையாக உள்ளது .

அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள்; இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!

 

இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!

சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கடந்து அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவவையாகும். ஒரு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி சுவீகரித்துக்கொண்டுள்ளது. விதிவிலக்காக மட்டக்களப்பில் மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் மண் கவ்வுகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தேசிய மக்கள் சக்தி வாக்குகளைக் குவித்து ஆசனங்களையும் குவித்துள்ளது. தமிழ், முஸ்லீம், மலையகக் கட்சிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய நல்லிணக்கத்தில் நின்று போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா மட்டுமே தமிழர்கள் மத்தியிலிருந்து சென்றும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் வாக்குகளையும் பெற்று மூவின மக்களின் செல்வாக்கோடும் பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழ் வேட்பாளராக உள்ளார். திருகோணமலையில் என்பிபி திசைகாட்டி இரு ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி ஒரு ஆசனத்தையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது இதுவே முதற் தடவையாகும். இந்நிலை யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களிலும் கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி யாழில் மூன்று ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி வீடு, தமிழ் காங்கிரஸ் சைக்கிள், ஊசி சுயேட்சைக் குழு தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் விதிவிலக்காக இலங்கையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் எம் ஏ சுமந்திரனின் நண்பரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60,000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளளார். அவருக்கு அடுத்த படியாக ஞானமுத்து சிறினேசன் முன்னணி வகிக்கின்றார். வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழரசுக் கட்சி கூடுதல் வாக்குகளையும் கூடுதல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி வீடு மூன்று ஆசனங்களையும் என்பிபி ஒரு ஆசனத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்தேசிய அரசியலானது கிழக்கை நோக்கி நகரத்தப்பட்டுள்ளதையே இது காட்டுவதாக பலரும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய தமிழ் ஊடகங்களால் புனையப்பட்ட தமிழ் தேசியவாதக் கதையாடல்கள் எதற்கும் தமிழ் மக்கள் செவிமடுக்கவில்லை. ஜோதிலிங்கம், நிலாந்தன் போன்ற ஊடகவியலாளர்கள் விமர்சகர்களின் கருத்துக்களை வடக்கு கிழக்கு மக்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதனால் அங்குள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்காத தமிழ் மக்களை அறிவற்றவர்கள், துரோகிகள், கற்பனாவாதிகள் என தமக்கு வாய்க்கு வந்தபடி விமர்சனங்களை வைக்கின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தனது ஊடகத்தை முடுக்கிவிட்ட ஐபிசி பாஸ்கரனின் கருத்துநிலைப்பாட்டை மக்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசு வீடு எம் ஏ சுமந்திரன் அல்லது சிறிதரன் தங்கள் வீட்டுக்கே அனுப்பப்பட்டுள்ளார்க்ள். ஈபிடிபி வீணை டக்ளஸ் தேவானந்தா, ரஎம்விபி பிள்ளையான் ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். சங்கு இத்தேர்தலில் தன்னுடைய அத்தனை பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டும் தன்னுடைய ஆசனத்தை தக்க வைத்துள்ளார். வன்னியில் திசைகாட்டிக்கு இரண்டு ஆசனங்களும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் சங்குக்கு ஒரு ஆசனமும் கங்காருவுக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியேறி சங்கில் போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா ஆகியோர் தங்கள் ஆசனங்களை இழந்தனர். வீட்டிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளிலும் போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் மண் கவ்வினர். வீட்டிலிருந்து பிரிந்து சென்ற சைக்கிளில் சவாரி செய்து அதிலிருந்து பிரிந்து மானில் நின்றவர்கள் யாவரும் தோல்வியடைந்தனர். சைக்கிளில் டபிள்ஸ் போனவர்கள் இப்போது சிங்கிளாகத்தான் போகவேண்டியுள்ளது. இதில் இனி யார் போறது என்ற சண்டை உருவாகி சைக்கிள் திருப்பியும் உடையலாம் எனவும் தகவல்கள் கசிகின்றது. சைக்கிளில் டபிள்ஸ் சென்ற செல்வராஜா கஜேந்திரன் ஆசனங்களை இழந்துள்ளர். தபால் பெட்டி கட்சியில் நின்ற ராமநாதன் அங்கஜன் முகவரியற்றுப்போனார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தலை கிலுகிலுப்பாக சுவாரஸ்யமாக வைத்திருந்த ஊசிக்குழு இத்தேர்தலில் ஒரு ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது. அண்மைய வரலாற்றில் சுயேட்சைக் குழவில் ஒருவர் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகியிருப்பது இதுவே முதற்தடவை. நேற்று மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையத்துக்குச் சென்றும் அர்ச்சுனா பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். ஒரு ‘கொமடிப்பீஸ்’ ஆக மாறிவரும் அர்ச்சுனா தனது சொந்தக் குடும்ப விவகாரங்களையும் சமூக வலைத்தளத்திலேயே பதிவேற்றி வருகின்றார். அவருடைய படுக்கையறையும் கழிவறையும் மட்டுமே இன்னமும் சமூகவலைத் தளங்களில் வரவில்லையெனப் பலரும் நகைக்குமளவுக்கு அவர் ஒரு சமூகவலைத்தளப் பிரியராக உள்ளார். மருத்துவ மாபியாக்களை எல்லாம்விட்டுவிட்டு இப்போது அவர் மாப்பிளை மாபியாவாக பாராளுமன்றம் செல்ல உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறாரோ இல்லையோ அரசியலை சுவாரஸ்யமாக்கி தமிழ் மக்களை முட்டாள்களாக்கிவிடுவரோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழவதும் சராசரியாக மூன்றில் ஒரு மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பதால் சிலர் தங்களுடைய வாக்குகள் அவசியமில்லை எனக் கருதியிருக்கலாம். இன்னும் சிலர் வயோதிபம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு போய்வருவதற்கான வசதிகள் இல்லாததால் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது விட்டுள்ளனர். மேலும் கணிசமான வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க செல்லாத வாக்குகள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் என்பிபி அலையை முடக்கிவிட்டதில் அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்களிப்பு கணிசமானது. ஒரு குறுகியகாலத்தில் தெற்கில் இருந்த என்பிபி அலையை வடக்குக்கும் மடைமாற்றி விட்டவர் இராமலிங்கம் சந்திரசேகர் என்பதை ஜனாதிபதி அனுராவும் யாழ் வந்திருந்த போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ் மற்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த வீதிகளைத் திறப்பது, காணிகளை விடுவிப்பது, மாகாணசபையை அமுல்படுத்துவது போன்ற தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை கட்சியின் மேல்மட்டங்களுக்கு கொண்டு சென்றதில் வடக்கில் ராமலிங்கம் சந்திரசேகரும் கிழக்கில் அருண் ஹேமசந்திராவும் குறிப்பிடத்தக்கவர்கள். இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார். அருண் ஹேமச்சத்திரா திருகோணமலையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருவரும் நவம்பர் 21 இல் கூடும் புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருண் ஹேமச்சந்திரா ஜேவிபி – என்பிபி க்குள் வளர்ந்து வருகின்ற மூவின மக்களாலும் வரவேற்கப்படுகின்ற ஒரு தலைவராக வளர்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சிபீடத்திற்கும் அவர் வரலாம் என சிலர் கட்டியம் கூறுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத் தேர்தல் அது நேற்று முடிவடைந்துவிட்டது. அடுத்து பிரதேச சபைத்தெர்தலுக்கு நாடு தயாராகப் போகின்றது. ”வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் மக்களைச் சேரும்” என்ற களிப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனவரியில் பிரதேச சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலையும் நடாத்த உள்ளது. பாரானுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதால் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கள்ள ஒரே தடை பொருளாதாரமே. ஆனால் அதற்கான மாற்றுவழிகளை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். நவம்பர் 21 முதல் பாரிய முன்னேற்றகரமான மாற்றங்களை நோக்கி நாடு நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசம்நெற் எதிர்வு கூறிய பல்வேறு அம்சங்களும் இத்தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.