November

November

தேசிய மக்கள் சக்தியின் விஸ்வரூப அவையில் சிக்குண்டு காணாமல் போன 150 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

 

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 77 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகை 94 ஆக அதிகரித்துள்ளது.

 

இதில் 70 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனையோர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர்.

 

மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச, நிபுன ரணவக்க, கஞ்சன விஜேசேகர, கலாநிதி மனுச நாணயக்கார, கலாநிதி ரமேஷ் பத்திரன, சம்பத் அத்துகோரள, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சசீந்திர ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, ரொஷான் ரணசிங்க, திலும் அமுனுகம, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, இந்திக்க அநுருத்த, பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜகத் குமார சுமித்ராராச்சி, பியல் நிஷாந்த, கலாநிதி சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, ஹரின் பெர்னாண்டோ, கோகிலா ஹர்சனி, டி.பி.ஹேரத், அனுப பெஸ்குவல் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்.

 

டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரமித்த பண்டார தென்னக்கோன், பந்துலால் பண்டாரிகொட, சரித ஹேரத், சிசிர ஜயக்கொடி, சந்திம வீரக்கொடி, டீ.வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, மஞ்சுளா திசாநாயக்க, ருவன் விஜயவர்தன, நிமல் லன்சா, அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே, லசந்த அழகியவன்ன, வசந்த யாப்பா பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹேர்ல் குணசேகர, ரஞ்சன் ராமநாயக்க, வடிவேல் சுரேஸ், நளின் பெர்னாண்டோ, உபுல் மஹேந்திர, டிலான் ஜயதிலக்க, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இசுரு தொடங்கொட, மொஹான் பிரியதர்சன டி சில்வா, பிரேமலால் ஜயசேகர, சந்திரசிறி முத்துகுமாரன, ராஜிக்கா விக்ரமசிங்க ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

 

தாரக்க பாலசூரிய, நாலக்க பண்டார, முதித்தா பிரியதர்சினி, ஜகத் பிரியங்கர, சுமித் உடுகும்புர, அருந்திக்க பெர்னாண்டோ, விஜித்த பேருகொட, ராஜித்த சேனாரத்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், நிமல் சிறிபால டி சில்வா, புத்திக்க பத்திரன, ஹெரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், ஹிருணிக்கா பிரேமசந்திர, அசோக்க அபேசிங்க, துசார இந்துனில், லலித் எல்லாவெல, லலித் வர்ணகுமார, விஜித் விஜித்தமுனி, நியோமல் பெரேரா, பியசேன கமகே, லசந்த சேனாநாயக்க, ஜயரத்ன ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, வேலு குமார், மயில்வாகனம் உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் தோல்வி பட்டியலில் உள்ளடங்குவர்.

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் – சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன.

 

EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

 

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

 

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

 

நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.

 

நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் – தேசியப்பட்டியலில் சத்தியலிங்கம்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை நடைபெற்றது. இதன்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

மலையக இளைஞர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதில் இருந்த தடைகள் அகன்றுள்ளன – அம்பிகா சாமுவேல்

தான் முதன்முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், மலையக இளைஞர் சமூகம் அரசியலில் பிரவேசிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான புதிய பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.

தோட்டத்தில் திறன் கொண்ட இளைஞர்கள் குழு இருப்பதாகவும் ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

“நான் முதன்முறையாக அரசியலுக்கு வருவதால், எனது சகோதரிகள், சகோதரர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் நல்ல திறன்களைக் கொண்ட பிள்ளைகள். ஜனரஞ்சகவாதிகள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் சிக்கிக்கொண்டிருந்தனர், அவர்கள் ஒருவித கட்டமைப்பிற்குள் சிக்கி இருந்தனர். அந்த கட்டமைப்பு உடைத்தெறியப்பட்டுள்ளது. இனிமேல் சில நல்ல தலைவர்கள் மலையகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருவார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் தலைமையில் மூன்றாண்டு கால ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வரும் – உக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை!

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது.

 

இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தற்போது வரை கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகம் முழுவதும் உள்ள வணிகங்கள் ஸ்தம்பித்து வருகின்றது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல முறை இரு நாடுகளிடம் ஐ.நா பேச்சு வார்த்தை நடத்தியும் அது எடுபடவில்லை.

 

 

இப்படி இருந்து வருகையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் 2-வது முறை தேர்வாகியுள்ளார். அவர் தேர்வான பிறகு உலக நாடுகளில் நடக்கும் போர்களை நான் தொடங்குவேன் என அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் போரைத் தொடங்கமாட்டேன், போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்’ எனப் பேசி இருந்தார்.

 

இது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது. தற்போது இந்த போர் நிறுத்தம் குறித்து டிரம்ப்பிடம் பேசியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “எங்களுடைய நிலைப்பாட்டைப் பற்றி ட்ரம்ப் கேட்டறிந்தார். டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும். விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிப்போம் என ட்ரம்பின் நிர்வாகம் உறுதி கூறியுள்ளது. அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்து வருகிறோம் என்ற உணர்வு ஏற்படாது. போர் நிச்சயமாக முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான தேதியைக் கூற முடியாது”, என அவர் பேசியிருந்தார்.

“மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன்.” – சிறீதரன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது, கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.

திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.

என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.

நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும் – என்றுள்ளது.

வரலாற்றில் பெரும்புரட்சி செய்த என்.பி.பி – சுமார் 19 பெண்கள் பாராளுமன்றத்திற்கு !

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 10வது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், 2 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கலாநிதி ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹசாரா லியனகே, சரோஜா சரோஜா பொல்ராஜ், முத்து ரத்வத்த, கீதா ஹேரத், ஹிருணி விஜேசிங்க, அம்பிகா சாமுவேல், சத்துரி கங்கானி, நிலுஷா கமகே, சாகரிகா அதாவுத, தீப்தி வாசலகே ஆகிய பெண்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்பினூடாக புதிய அரசியலமைப்பு- ரில்வின் சில்வா!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்….

 

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம். ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

 

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்.

 

எவ்வாறாயினும், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலை சுமந்திரனுக்கு வழங்கக் கோரிக்கை!

நொவெம்பர் 16, 2024

மருத்துவர் ப.சத்தியலிங்கம்
பதில் பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
வவுனியா.

தேசியப் பட்டியல் இருக்கையை சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!

வணக்கம் !

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக (இதஅக), அச்சு மற்றும் இலத்திரினியல் ஊடகங்களும் போலித் தேசியம் பேசிய கட்சிகளும் மிகக் கடுமையான பரப்புரையை மேற்கொண்டன. குறிப்பாக எம்.ஏ. சுமந்தின் அவர்களுக்கு எதிராக கீழ்த்தமான பரப்புரையை மேற்கொண்டன. “தமிழரசுக் கட்சிக்குப் போட்டாலும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றும் பரப்புரை செய்யப்பட்டது.
இப்படியான பரப்புரையையும் தாண்டி இதஅக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தும் இதஅக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தனது பிரநித்துவத்தை இழந்துள்ளது. இதனால் இதஅகட்சியின் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இதஅக க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 63,327 ஆகும். மேலதிகமாக 3,000 வாக்குகள் கிடைத்திருந்தால் இன்னுமொரு இடம் கிடைத்திருக்கும். நியமனம் மறுக்கப்பட்டதும் சுயேட்சையாகக் களம் இறங்கிய இருவர் இதற்கு முழுக் காரணம் ஆகும்.
இதஅக இன் அடிப்படை வேட்கையான தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்மக்கள் மட்டுமே எண்பித் துள்ளார்கள். மொத்தம் 96,975 (33.78%) வாக்குகளைப் பெற்று 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நல்லாட்சிக் காலத்தில் (2015 – 2019) வரைவு வடிவில் ஒரு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை அன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க வேறு சில ஆவணங்களுடன் அரசியலமைப்புச் சபையில் சனவரி 11, 2019 அன்று சமர்ப்பித்தார். இந்த ஆவணம் ஒரு விவாதப் பத்திரம் என அழைக்கப்பட்டாலும் – அது ஒரு புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு என்று அழைக்கப்பட்டாலும்- அது கிட்டத்தட்ட விரிவான அரசியலமைப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் தற்போதைய 1978 அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் தன்மையில் இருந்து விலகிக் காணப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை அகற்றப்படுவது அதன் மையப்புள்ளியாகும். இந்த அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் இருவர் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஒருவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றவர் சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆவார்கள்.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் “புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடுஇ அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளது. சனாதிபதி அனுர குமார திசநாயக்க தேர்தல் பரப்புரைக் காலத்தில் நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பினை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்.

எனவே சட்டப் புலமை வாய்ந்த, அரசியலமைப்பு உருவாக்கத்தில் பட்டறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேவைப்படுகிறார். ஏற்கனவே நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியல்யாப்பு வரைவை எழுதியதில் பெரும் பங்காற்றிய சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களே இதற்குப் பொருத்தமானவர் என்பதில் எவருக்கும் எந்த அய்யமும் இருக்காது.

இதஅக க்கு கிடைத்த தேசியப் பட்டியல் இருக்கை ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட முன்னாள் நா.உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்இ நாடாளுமன்றம் செல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார். இருந்தும் கட்சியின் மத்திய குழுவே தேசியப் பட்டியல் இருக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அதற்குத் தான் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் இருக்கையை சுமந்திரன் அவர்களுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க அன்புடன்

வே. தங்கவேலு
தலைவர்

தம்பிராசா வசந்தகுமார்
பொதுச் செயலாளர்

 

“தலைநகரில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம் – மூன்றாக அதிகரித்த முஸ்லீம் பிரதிநிதித்துவம்” – மனோகணேசன்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக செயற்பாடுகளாகும்.

ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை.

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற நான் ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு “வெற்றி பெறாமை” என்ற சூழலை எதிர் கொண்டேன்.

பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்களை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள்!

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்!

எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஏ.ஆர்.வி.லோஷன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.