2024

2024

இஸ்ரேலை பாதுகாப்பதே நமது வெளிவிவகார கொள்கையின் முக்கியமான அம்சம் – ஜேர்மனி

இஸ்ரேலின் பாதுகாப்பே தனது வெளிவிவகார கொள்கையின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜேர்மனி தனது கடந்த கால வரலாறே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

 

எனினும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு உதவுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை ஜேர்மனி நிராகரித்துள்ளது.

 

ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தவேண்டும் என கோரும் வழக்கினை சர்வதேச நீதிமன்றில் நிக்கரகுவா தாக்கல் செய்துள்ளது.

 

இனப்படுகொலையை தடுப்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்படுவது தொடர்பான கடப்பாடுகளை ஜேர்மனி மீறிவிட்டது எனவும் நிக்கரகுவா குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜேர்மனி சர்வதேசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

 

எங்கள் வெளிவிவகார கொள்கையில் இஸ்ரேலின் பாதுகாப்புமிக முக்கியமானதாக காணப்படுவதற்கு காரணம் எங்களின் வரலாறு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலிற்கு ஜேர்மனி ஆயுதங்களையும் இராணுவதளபாடங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் நிக்கரகுவா அதன் அளவையும் நோக்கத்தையும் திரிபுபடுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி தனது கடந்தகாலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது அந்த கடந்தகாலம் மனித குலவரலாற்றில் மிகமோசமான குற்றங்களை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மனி ஒவ்வொரு நாளும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரியொருவர் சர்வதேச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.

காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ஐ.நா. அவையில் நடைபெற்றது.

 

இதன்போது, காஸா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிய, ருச்சிரா காம்போஜ்,

 

1. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

 

2. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.

3. காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காஸா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

 

4. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும் என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறினார்.

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

 

 

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

 

இதனைதொடர்ந்து, அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸா மீது இஸ்ரேலின் படையெடுப்பால் இதுவரை 32,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா்.

 

இஸ்ரேல் – காசா போர் ஆரம்பித்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும், உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

 

மேலும், பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராகும் இஸ்ரேல் !

காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர்.

 

காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

 

எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது ஜேர்மனி – சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.

 

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.

 

நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

 

ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார்.

 

இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார்.

 

ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் !

காசா மீதான போர் தொடங்கி 6 மாதங்களான நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள் திரண்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றே மக்கள் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். மட்டுமின்றி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காசாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரானது இன்றுடன் 7வது மாதத்தில் நுழைகிறது. தலைநகர் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

நெதன்யாகுவும் கூட்டத்தையும் வீட்டுக்கு அனுப்பாதவரை, இந்த நாடு வளர்ச்சி காண வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல் அவிவ் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும், எதிர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த நிலையில் டெல் அவிவ் போராட்டக்காரர்களுடன் காசா பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,170 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடிக்கு இதுவரை 33,137 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றேதெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 250 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் படைகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

 

காசாவில் இன்னும் 129 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று 7 ஆம் திகதி மீண்டும் களமிறங்க உள்ளனர், ஜெருசலேமில் ஒரு பேரணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட-கிழக்கில் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது – ஐ.நா அறிக்கை!

இவ்வாண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறியுள்ளது.

 

அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கிளை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயம் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள், முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அடையப்பட்ட முன்னேற்றங்கள், இவ்வாண்டில் இலங்கை தொடர்பான இலக்குகள் போன்ற பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தேசிய ரீதியில் முன்னுரிமைக்குரிய விடயங்களையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2023 – 2027 வரையான ஐ.நா நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்துக்கு அமைய அடையப்பட்ட முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை வெளிக்கொண்டுவந்திருப்பதாக இலங்கைக்காக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் தெரிவித்துள்ளார்.

 

‘2023 இல் இலங்கைக்கான எமது மனிதாபிமான உதவிகள் மீட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நிலைமாற்றமடைந்தன. அது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும், எமது முகவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வருடமாக அமைந்திருந்தது. சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் வருடத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை நிலைபேறான அபிவிருத்திக்கான தேசிய இலக்கை அடைந்துகொள்வதற்கு நாம் உதவுவோம்’ எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நாவின் வருடாந்த அறிக்கையின்படி 2023 இல் நாடளாவிய ரீதியில் சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதிசார் உதவிகளும், 2 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு உணவுப்பொருள் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

அதேவேளை ‘2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையில் 2023 இல் மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்பட்டன. வெளிநாட்டுப்பணவனுப்பல்கள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட தொடர் அதிகரிப்பு எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தியது. எவ்வாறிருப்பினும் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்தி நிலைவரம் தொடர்ந்தும் சவால் மிக்கதாகவே காணப்பட்டது’ என ஐ.நாவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘2023 மார்ச் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. 2024 இல் தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து 2025 இல் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று பிரதானமாக பொருளாதார கொள்கைத்தீர்மானங்களால் தூண்டப்பட்ட சில ஆர்ப்பாட்டங்கள் சட்ட அமுலாக்கப்பிரிவினரால் மிகக்கடுமையான முறையில் கையாளப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் மக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்ட குழப்பங்கள் என்பன சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்றும் ஐ.நா அதன் அறிக்கையில் விசனம் வெளியிட்டுள்ளது.

 

மேலும் ‘2023 இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ செயற்திட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 2024 இல் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரிவருமானத்தை விரிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் இவை அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான மீட்சிக்கு உதவுதல், நிலையான சமாதானத்தை உறுதிசெய்தல், ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வதற்கும், ஆட்சியியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கல், காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே இவ்வாண்டு தாம் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக இவ்வருடாந்த அறிக்கை ஊடாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

“எனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா”  – சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டமை தொடர்பான தேசம் திரை காணொளி!

சுஜி கூல் என்ற பெண் தாக்கப்பட்டது தமிழ் தேசியவாதிகளின் ஆணாதிக்கத்தையும் – தன்கீழ் உள்ளவர்களை அடக்கும் அவர்களின் மனோநிலையையுமே வெளிப்படுகின்றது.

 

 

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜாவுடன் பரபரப்பான ஓர் கலந்துரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல் !

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 

இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இப்பேரவையில் 28 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 6 நாடுகள் எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.

 

காஸா யுத்தத்தினால் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலை அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்திருந்தது.

பாரிஸ் கவர்ச்சிச் ‘செல்லம்’ சுஜியின் அரசியல் அதிரடி! வீறுகொண்ட லாச்சப்பல் ‘புளி’ முரளி!!!

பாரிஸில் முப்பதினாயிரம் வரையான பெரும்பாலும் ஆண்களைத் தன் ரிக்ரொக் வலைப்பக்கத்தில் வீழ்த்தி தன்னைப் பின்தொடரச் செய்து, ஈழத்தமிழர் மத்தியில் அரசியல் அதிர்வொன்றை ஏற்படுத்தி உள்ளார் சுஜி கூல் என்ற பெயரில் உலாவரும் பெண். மாலை மயக்கம் தரும் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் இட்டு ரிக்ரொக் பதிவிடும் சுஜி இடைக்கிடை அரசியல் பதிவுகளும் இட்டுவருகின்றார். இவருடைய பதிவுகளில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைப் பற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் மிகத் தரக்குறைவாக பதிவுகளை இட்டுவருகின்றார். அவ்வாறு கடைசியாக அவரால் இடப்பட்ட பதிவில் சுஜி தமிழ் தூஷண வார்த்தைகளை தாராளமாகவே வீசி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனை வசைபாடியுள்ளார்.

இதனைக் கண்டு வீறுகொண்டெழுந்த ரிக்ரொக் ‘புளி’கள், இவர்களும் கவர்ச்சிச் செல்லத்தை பின்தொடரும் முப்பதினாயிரத்தில் அடங்குவர். இவ்வாறு வீறுகொண்டெழுந்த கச்சா சிவம் என்ற கனடாப் ‘புளி’, இவளுக்கு (சுஜி க்கு) ஏன் இன்னும் சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்ற தொணியில் பொங்கியெழுந்து ரிக்ரொக் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து உசுப்பேறிய கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கடைக்காரரான, லாச்சப்பல் அக்கா கடை உரிமையாளர் முரளி என்று அறியப்பட்ட பாலசிங்கம் பாலமுரளி செல்லத் தங்கச்சி சுஜீயை பத்து வரையான ஆண்கள் சகிதம் சேர்ந்து தாக்கியுள்ளார். சுஜியின் கையை உரிமையோடு பிடித்து கன்னத்தில் சில தடவைகள் அறைந்தததுடன் அவருடைய சட்டையையும் இழுத்து சேட்டைகள் செய்துள்ளனர். அத்தோடு சுஜியின் மீது முட்டைகளையும் வீசி அடித்துள்ளனர். சுஜி தன்னுடைய ரிக்ரொக்கில் என்னென்ன வசை பாடினாரோ அவ்வளவு வசையையும் பாலசிங்கம் பாலமுரளியும் அவருடன் வந்த கும்பலும் படியது. சுஜி தனக்கு மாதவிடாய் வந்துவிட்டதாக தெரிவித்த போதும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தன்னை அணுகியவர்களை அண்ணா, அண்ணா என்றழைத்த சுஜி, ஒரு கட்டத்திலும் முரளி கும்பலின் வன்முறைக்குப் பணியவில்லை. “நீங்கள் செய்வது பிழை என்பதை உணருவீர்கள்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். பத்து வரையான வெறி கொண்ட சருகு புலிக் கும்பலிடம் மாட்டிய இளம் பெண்ணாக அந்த விடியோவில் சுஜி காணப்பட்டார். ராஜபக்சவை தீவிரமாக ஆதரிக்கும் சுஜி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராகவும் அவ்வமைப்புக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தூஷண வசை பாடியுள்ளார் என்றால் அதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. சொல்லப் போனால் அது சிறுமைப்படுத்திச் சொல்வதாகத் தான் அமையும். ரிக்ரொக்கில் காட்டும் ஆக்ரோஷம் பத்து வீறுகொண்ட ரிக்ரொக் புலிப் போராளிகளைக் கண்டதும் அடங்கிப் போனது. முரளி கும்பலும் ஆனையிறவு முகாமை தகர்த்த கணக்கில் புலிப்பாடலோடு அப்பெண்ணைத் தாக்குவதை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈழத்தமிழ் சமூக வலைத்தள போராளிகள் பலர் உணர்ச்சி பொங்க ‘இவளுக்கு இது தேவைதான்’ என்ற கணக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த மனித உரிமைவாதியும் பெண்ணிய வாதியுமான நளினி ரட்ணராஜா, சுஜி வெளியிட்டது அரசியல்பதிவேயல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்கின்றார். “சுஜி ஒரு அமைப்பு கிடையாது, அறியப்பட்ட ஒரு புள்ளி கிடையாது. சட்டத்தை உங்கள் கையில் எடுக்கின்ற அதிகாரத்தை யார் தந்தது? வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள், தாயார் போன்றவர்களையும் இந்த ஆண்கள் இவ்வாறு தானே நடத்துகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜா.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் அதுவும் பச்சைத் தூஷணத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவு செய்யப்படுகின்றது. குறிப்பாக ஹிளப் ஹவுஸ் என்கின்ற மேடையில் இவ்வாறான பச்சைத் தூசணப் பேச்சுப் போட்டிகள் நாளாந்தம் மாலையில் அரங்கேறி அதிகாலை வரை நடைபெறும். அதில் பாலியல் வக்கிரம் மடை திறந்த வெள்ளம் போல் பாயும். அரசியலில் தங்களது பெயரும் அறியப்பட வேண்டும் என விரும்பும் முகவரியற்ற பலர் இத்தளங்களைப் பயன்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல. இவ்வாறு இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.

இவ்வாறான தூஷண மாலைகளைத் தாங்கிய பலர் இன்றும் எம்முன் உயிருடன் உள்ளனர். இந்த முரளி போன்ற ‘புளி’கள் ஆய்வாளர் வி சிவலிங்கம், ரிபிசி ராம்ராஜ், பெண்ணியவாதி ராஜேஸ் பாலா என ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாற்றுக் கருத்தாளர்களை பச்சைத் தூஷணத்தில் வசைபாடி அவர்களது குடும்பங்களையும் குடும்பப் பெண்களையும் வலைத்தளங்களில் இழுத்து வம்பு செய்து வந்தனர். மனித உரிமைவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாரிஸில் வாழும் எல்லாளன் என்ற ‘புளி’யும் இவ்வாறான தூஷண மன்னன். மகனுக்கு பிரபாகரன் என்று தான் பெயரும் வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தியதில் இந்தப் புலம்பெயர்ந்த ‘புளி’க்கும்பலுக்கு முக்கிய பங்குண்டு.

இப்போது எழுந்துள்ள அலை ஒரு பெண் எப்படித் தூஷணத்தில் தங்களைக் கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. தங்களுக்கு நிகராக தூஷணத்தில் வசைபாடுகிறாள் என்ற ஆதங்கம் அவர்களுடைய மொழியில் தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டும் தான் தூஷணம் சொந்தம் அல்ல என்பதை தலைவரை வைத்து சுஜி கட்டுடைத்து விட்டாள் என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே சுஜி தாக்கப்பட்டுள்ளாள். சுஜி ஒரு உதிரிப் பெண். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றது. தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றாள். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிரான்ஸில் வாழும் இப்பெண் வே பிரபாகரன் பற்றியும் அவ்வமைப்பு பற்றியும் வெளியிட்டுள்ள பதிவுகள் சாதாரண மனநிலையுடைய ஒருவர் செய்யக்கூடிய பதிவல்ல. அப்படியிருந்தும் சுஜியின் வலையில் வீழ்ந்து முப்பதினாயிரம் வரையானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏன்?

இவர்கள் பற்றி நகைச்சுவையாகத் தேசம்நெற்க்குத் தெரிவித்த முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர், “கச்சா சிவமும் முரளியும் மட்டும் கட்டையரோடு நின்றிருந்தால், தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்” என்றார். மற்றுமொரு போராளி இது பற்றிக் குறிப்பிடுகையில் அப்துல்லா கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்த தலைவர் இவங்கள் செய்யிறதப் பார்த்து சயனைட் கடித்துவிடப்போகிறாராம்” என்றார்.

ஒரு உதிரிப் பெண்ணான, எதிலிப் பெண்ணான சுஜியைத் தாக்க, பாரிஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பாலசிங்கம் பாலமுரளி பொங்க என்ன காரணம். இவர்கள் போன்ற நூற்றுக்கணக்காணோர் இப்பெண்ணுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர். ஏன்? அவரிடம் அப்படியென்ன அரசியல் கலந்துரையாடல்களை இவர்கள் செய்துள்ளனர்? இவர்களுடைய உடல்மொழியும் வாய்மொழியும் இவர்கள் சமூகத்தின் முன் பொதுத் தளங்களுக்கே வரத்தகுதியற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக யாழ் பல்கலைக்கழகமாக இருந்தாலென்ன லாச்சப்பல் வர்த்தக சங்கமாக இருந்தாலென்ன இவ்வாறான பொறுப்பற்ற தகுதியற்ற நபர்கள் தான் பொறுப்பான பதவிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது அயோக்கியத்தனங்களை மறைக்க சுஜி போன்ற எதிலிகளிடம் வீரத்தைக் காட்டி தங்கள் தமிழ் தேசியப்பற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூடாரத்திற்குள் தங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் அயோக்கியர்களாக இருப்பது தமிழ் தேசியவாதத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால் மிகையல்ல.

லாச்சப்பலில் உள்ள அத்தனை கடைகளில் தமிழர் வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பண்பாளன் இல்லாமல் போனது லாச்சப்பலில் கடை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவமானம். பாலசிங்கம் பாலமுரளி தூஷண பூஷணம் செய்வது இதுவொன்றும் முதற்தடவையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லாச்சப்பல் உணவகமொன்றில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜெனாவை தாக்க முயற்சித்து இருந்தார். மேலும் பாரிஸில் இடம்பெற்ற தமிழர் எழுச்சி மாநாட்டிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி மாவை சேனாதிராஜாவைத் தாக்க முயன்றார்.

பணபலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் தான் என்ற கோஷத்தையும் வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள ‘புளி’ கும்பல் செய்யும் அலப்பறை தாங்கமுடியாத அளவுக்கு கேவலமாகிக் கொண்டுள்ளது. இத்தோடு லாச்சப்பல் வர்த்தகர்களுக்கு பெரும்பாலும் இலங்கைத் தூதரகத்தோடும் நல்ல உறவு நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பெரும்தொகையான நிதிவசூலிப்பும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வில் மாற்றம் இல்லை என்ற வீடியோப் பதிவுகளே தினமும் வெளிவருகின்றது. எல்லாம் இவர்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தான் வெளிச்சம். தம்மன்னா, சுஜி … இனியொரு ரஜி இவர்களுக்கு கிடைக்காமலா போகும்.

ஈழத் தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் அரசியல் ரீதியாக அறிவற்றவர்களாக ஒடுக்குமுறையாளர்களுக்கும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் பின்னால் ஓடுபவர்களாகவும் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகவுமே உள்ளனர். ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைக் கருத்துக்களுக்கும் எதிராகவும் இவர்கள் மூச்சுவிடுவதில்லை. சுஜி போன்ற உதிரிகளும், எதிலிகளும் அகப்பட்டால் இவர்களுக்கு ‘ஜெயசுக்குரு’தான்.

சமூக வலைத்தளங்களை இயக்கும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் அதனை இயக்குவதற்குக் காரணம் மக்களை வளப்படுத்தவோ அரசியல் தெளிவு பெறச்செய்யவோ அல்ல. இந்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி கோப்பிரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உங்களுக்கு மிக அவசியமானதாக்கி அதனை விற்பனை செய்வதற்கே. அதற்கு சுஜி மற்றும் முரளி கும்பலின் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகள் உணர்வுகளைத் தூண்டி பலரை இதனைப் பார்க்க வைக்கும். அதனால் சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குப்பை கூளங்கள் தினமும் குவியும். சமூகவலைத்தளங்களை நடத்தும் கோப்பிரேட் நிறுவனங்கள் இந்தத் தரம்தாழ்ந்த பதிவுகளால் இன்னும் இன்னும் மில்லியன் கணக்கில் லாபத்தையீட்டுவார்கள்.

மாறாக இவ்வாறான பதிவு வெளியிடுபவர்களின் நட்பை முறியுங்கள். அவர்களைப் பின்தொடராதீர்கள். மக்களுக்கு அரசியல் தெளிவைக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வையுங்கள். அதைவிட்டு தமிழ் சமூகத்தை, நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடாதீர்கள்.

உன்னுடைய கருத்தோடு எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால் உனக்கு அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன். (பிரென்ஞ் அறிஞர் வோல்ரயர்)

சுஜியின் அரசியல் பதிவுகள் கருத்துக்கள் அல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்பதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜா தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் நாளை வெளியிடப்படும்.

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை நாளை ஐ.நாவில் !

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது.

 

காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

 

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை.

 

எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும்.