2024
2024
பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, காவல்றையினரால் அவர்களின் கூடாராங்களும் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் எவருக்கும் போராட உரிமை உள்ளது என்றும், ஆனால் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
அவை விசாரணைக்கு வந்தபோது, “கொவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ் எனப்படும் இரத்தம் உறைவு மற்றும் இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும்” என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் இச்செய்தி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.
மேலும், ‘இந்தியாவில் கொவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வு செய்யக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவெக்சின்’ தடுப்பூசி குறித்தும் பலருக்கு சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான கோவெக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது அறிக்கையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.
அதில், “பலமுறை சோதனை செய்த பிறகே கோவெக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆகவே, இரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. எனவே, கோவெக்சின் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளையும் கொடுக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி கோவெக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெருமூச்சை அளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் பகிர்ந்துகொள்வது ஆபத்துக்களை உருவாக்குகின்றது என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிடும் பெற்றோர்களை பாலியல் நோக்கத்தில் பலர் இலக்குவைப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில தங்கள் பிள்ளைகளின் படங்களை பெற்றோர் இலக்குவைத்து செயற்பட்டுள்ள கும்பல்கள் தாங்கள் பணம் செலுத்தினால் பிள்ளைகளின் நிர்வாண படங்களை தருவீர்களா என வேண்டுகோள் விடுத்துள்ளமை இந்த கருத்துக்கணிப்பின் போது தெரியவந்துள்ளது.
4000 பேரிடம் இந்த விடயங்கள் குறித்து கருத்து கோரப்பட்டதாகவும் இவர்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் தங்களிடம் தங்கள் பிள்ளைகளின் நிர்வாண படங்களை ஆகக்குறைந்தது ஒருவராவது கோரியதாகதெரிவித்துள்ளனர் என கருத்துக்கணிப்பினை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
சிறுவர் பாலியல் நாட்டம் கொண்டவர்கள் உட்பட பலர் தங்கள் பிள்ளைகளின் படங்களை பார்த்த பின்னர் தங்களிடம் மேலும் படங்களை கோரினார்கள் என தெரிவித்துள்ளனர்.
பொதுவான சமூக ஊடக பதிவுகள் போன்றவற்றில் படங்களை பகிர்ந்துகொள்ளும் பெற்றோரிடம் இவ்வாறான வக்கிரமான கேள்விகள் கேட்கப்படலாம் என அவுஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில பகுதிகளில் மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.
எங்களின் பல்கலைகழகத்திலிருந்து வெளியேறு என மாணவர்கள் கோசம் எழுப்பிவருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸார் உள்ளே நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.
‘Ana Than’ அனாதன் யார் இந்த முகநூல் பொறுக்கி? என்ற தலைப்பில் தேசம்நெற்றில் வெளியான செய்தியை அடுத்து சம்பந்தப்பட்ட முகநூலின் சொந்தக்காரர் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டு அரைநிர்வாணப் படங்களை தான் தான் பகிர்ந்ததை ஒப்புக்கொண்டார். இரு ஆண் குழந்தையின் தந்தையான மில்ட்ன் கீன்ஸ்ஸில் கடை வைத்திருந்த வர்த்தகரான இவர் முன்னாள் காதலியோடு மீண்டும் உறவை ஏற்படுத்தியதாகவும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் அவரைப் பழிவாங்கும் வகையில், அரை நிர்வாண உள்ளாடையோடு அவரது படங்களைப் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் தற்போது யாழிலேயே வாழ்கின்றார்.
அப்பெண்ணோடு தான் சிறுவயது முதல் யாழ் சங்கானையில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றதாகவும் பதின்ப வயதில் அப்பெண்ணோடு காதல் மலர்ந்ததாகவும் தெரிவிக்கின்றார். பின்னல் அவர்கள் யுத்தம் காரணமாக வன்னிக்குப் புலம்பெயர தொடர்புகள் விடுபட்டதாகவும் அனாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் 1996இல் தான் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து விட இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததாகக் கூறுகின்றார்.
வன்னியில் இயக்கம் கட்டாய ஆள்சேர்ப்பில் ஆண்களையும் பெண்களையும் பிடித்துச் சென்றதால் அவளின் பெற்றோர் அவளுக்கு சிறுவயதிலேயே திருமணம் பேசி தங்களுக்கு பிடித்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக லூட்டன் அனாதன் தெரிவிக்கின்றார். அதன் பின் மீண்டும் இவர்கள் தொடர்பை ஏற்படுத்தி உறவை வளர்த்து அது விரிசலாகி அவரது குடும்பமும் பிரிந்து தற்போது முகநூல் வசையாடல்களில் வந்து முடிந்துள்ளது. யுத்தம், பல வந்த ஆட்சேர்ப்பு என்பன இவ்வாறான சமூகச் சிதைவுகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் கூட இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. நாற்பது வயதில் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் பெண்கள் வன்னியில் அதிகம்.
தற்போது மில்டன் கீன்ஸ் கடை உரிமையாளர் அனாதன் தேசம் ஜெயபாலனோடு நடத்திய உரையாடலை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!
காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.
எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை.
2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம் அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
36 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.
காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தன அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன் அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார் ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும்பார்த்தேன் பத்து 15 நிமிடங்களி;ல் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக விழுத்தித்தள்ளுவதற்காக ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை கலாநிதிகளும் கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.
‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம் ஒன்று தேசம் நெட் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதம் ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்தே பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 400 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நபருடைய முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளனர். புலிகள் தொடர்பில் பேசியதற்காக அண்மையில் பிரான்ஸில் வைத்து “சுஜிகூல்” என்ற சமூக வலைதள பிரபலம் ஒருவரை தாக்கியதுடன் நின்று விடாது வேசி என்ற சொல்லில் தொடங்கி அந்த பெண் என்னென்ன தகாத வார்த்தைகளை பேசினாள் என்று தாக்கினோம் என கூறி விமர்சனங்கள் முன்வைத்தனரோ அதே வார்த்தைகளை ஏன் அதை விட அந்த பெண்ணின் பிறப்பு தொடங்கி அம்மா அப்பா அனைவரையும் சேர்த்து பேசி பழிவாங்கியதாக ஆர்கஸம் அடைந்து கொண்டனர் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்.
சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.
இவர்கள் புலிகளாகக் காட்டிக்கொண்டே இந்த வசையாடல்களைப் புரிந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரிஸில் தெருவுக்கு இழுத்துவிட்டு ஆனையிறவுத் தாக்குதல் பாடலையும் போட்டு கேவலப்படுத்தியது அக்காகடை உரிமையாளர் முரளி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட கும்பலே. இவர்கள் ரிக்ரொக்கில் தங்கள் மனைவிமார் காதலியுடன் சல்லாபிப்பது போல் ஆரம்பித்த விளையாட்டே லாச்சப்பலில் புலிகளின் தலைவரையும் சந்திக்கு இழுத்துவி;ட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னரும் ரிக்ரொக்கில் இந்த அந்தரங்கக் கூட்டம் வசையாடல்களை இன்றும் தொடர்கின்றது. இந்த ஆண்களே சுஜிகூல்களை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.
இதே போலத்தான் புலிகளை பாஸிஸ்டுகள் என கூறியதற்காக பெண் சட்டத்தரணி ஒருவரை தேவடியா, அந்த மகளே இந்த மகளே என்றெல்லாம் கொட்டித்தீர்த்தார்கள் நமது புலிக்குட்டிகள்.
இது சாதாரணமான ஒரு விடயமாக கடந்து செல்ல முடியாதது. யாரோ ஒரு பெண் தானே என் கடந்து செல்வோமாயின் இது நாளை நம் வீட்டு பெண்களுக்கும் நடக்கும் அப்போது மட்டும் நியாயம் தேவை நீதி தேவை என வந்து விடுகின்றோம்.
சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம். இதனை பாரிஸில் உள்ள லாக்குர்னே ஆலயத்தின் தலைவர் தற்போது சஜித் பிரேமதாஸாவின் கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளராக இருக்கும் குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன், முன்னர் புலிகளிடம் இருந்த லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஆர் ஜெயதேவன் அவருடைய சகபாடி ரரின் கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்களும் செய்து வருகின்றனர். இதற்கான பல ஆதாரங்கள் தேசம்நெற் இல் ஏற்கனவே வெளியிட்ப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தேசம் திரை காணொளி ஒன்றில் பேசியிருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா இந்த நிலை பற்றி கூறிய போது “இது ஒருவிதமான உளவியல் நோய். தன்னை ஒரு பெண் நிராகரிக்கும் போது வேறு வழியின்றி உண்மையை ஏற்க மறுத்து அவள் தொடர்பான தூஷணங்கள் பேசுவது, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகளை இடுதல், குறித்த பெண்ணின் நிர்வாண படங்களை பதிவிடுதல் எல்லாமே அந்த உளவியல் நோயின் ஒரு வெளிப்பாடே – அதுவும் ஒருவிதமான இயலாமையின் வெளிப்பாடு தான். பாலின சமத்துவம் தொடர்பான கல்வி அடிப்படையில் இருந்து வழங்கப்படுதல் இந்த நிலமைகளை எதிர்கொள்ள உதவும்” என அவர் மேலும் குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.
குறித்த பெண் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.
கெடுதல் செய்பவனை காட்டிலும் அதனை ஆமோதித்து அமைதியாக இருப்பவனே ஆபத்தானவன் என்பார்கள். குறித்த முகநூல் கணக்கில் நட்பு பட்டியலில் உள்ள 400க்கும் அதிகமான நண்பர்கள் தான் மிக்க மோசமானவர்கள். அதிலும் சிலர் நைஸ், முகவரி என்ன..? ஃபோன் நம்பர் என்ன என விசாரிப்பதும் அதற்கு லைக்ஸ் கிடைப்பதெல்லாம் அத்தனை வக்கிரமான நிலைக்கு தமிழ்ச்சமூகம் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. குறித்த முகநூல் கணக்கை பின்பற்றும் முகநூல் கணக்குகளில் முற்போகாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மற்றும் அம்மான் படையணி வடமாகாணம், வலி தெற்கு பிரதேசசபை, தோப்புக் காடு விளையாட்டு கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், ஆணைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம், சுழிபுரம் கிழக்கு கண்ணகி அம்பாள் ஆலயம் ஆகிய முகநூல் கணக்குகள் நட்பு பட்டியலில் உள்ளன. என்ன அடிப்படையில் நண்பர்களாகினரோ தெரியாது . ஆனால் இந்த கணக்குகளில் இருந்து ஒருவர் கூட இந்த குறித்த பெண்ணுக்காக பேசத் தயாரில்லை.
யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.
அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.
இதே வேளை அண்மையில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்ட போது “சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவுகளை இடுவோருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். மேலும் FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, நிர்வாண புகைப்படங்கள் பதிவேற்றப்படல், தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. http://www.telligp.police.lk என்ற இணைய முகவரியை அணுகி குறித்த பாதிப்பு தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.









