May

May

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கைது !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார். ‘என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார். ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் !

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக கட்டப்பட்டதாகவும் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என  தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடையாமே இல்லாமல் இடித்து அளிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 பேருக்கு தூக்கு தண்டனை !

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசு இந்தாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தூக்கிலிடப்பட்ட 42 கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஈரானின் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் அலிரெசா அக்பரி, இங்கிலாந்து நாட்டிற்கு ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 582 கைதிகளை தூக்கிலிட்டதாக ஐ.எச்.ஆர் கூறுகிறது. அதே 2021ம் ஆண்டில், 333 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்த்த போராட்டக்காரர்கள் – 52 பேர் வரை கைது !

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு 52 மன்னராட்சி எதிர்ப்பு போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.

சனிக்கிழமையான நேற்று பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை கூடியிருந்தனர்.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்து இருந்த அரச நடைமுறை ஆதரவாளர்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான மஞ்சள் ஆடை அணிந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்களும் ஊர்வலப் பாதையில் இணைந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் கையில் “எங்கள் ராஜா இல்லை”(Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, பெரிய ஸ்பீக்கர்களில் மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை கூச்சலிட்டனர்.

முடிசூட்டு விழாவில் மன்னராட்சி எதிர்ப்பாளர்கள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என பொலிஸார் உறுதியாக நம்பிய நிலையில் அதன் தலைவர் கிரஹாம் ஸ்மித்-தை ஊர்வலம் தொடங்கும் முன்பே தடுத்து வைத்தனர்.

அத்துடன், மேலும் மன்னராட்சிக்கு எதிரான 51 ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்தில் இருந்து பிரித்து பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறையின் தளபதி கரேன் ஃபிண்ட்லே வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை நாங்கள் கைது செய்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கவலையை நாங்கள் முற்றிலும் புரிந்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் குடியரசுக் குழுவின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

16 மணிநேர காவலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்ட கிரஹாம் ஸ்மித், “இங்கிலாந்தில் அமைதியான போராட்டத்திற்கு இனி உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள 100அடி விகாரையை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது.” – ஜெனரல் சவேந்திர சில்வா

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என  பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் சவேந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத. மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்ட விரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது’ என்று சவேந்திரசில்வா பதிலளித்தார்.

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் – அருண் சித்தார்த் உடனான நேர்காணல் காணொளி!

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் என யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய  தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அருண் சித்தார்த் தொடர்பிலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் – யாழ்ப்பாணத்திலுள்ள சாதிய அடக்குமுறை தொடர்பிலும் தேசம் திரையுடன் இடம்பெற்ற நேர்காணல்.

 

முழுமையான காணொளியை காண கீழேயுள்ளLink ஐ கிளிக் செய்யவும்..!

அவுஸ்ரேலியா வெளியிட்ட நாண்யத்திற்கு வியட்நாம் எதிர்ப்பு!

தெற்கு வியட்நாமின் மஞ்சள் கொடி அடங்கிய நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் நேர்மறையான போக்குகளை நிராகரிப்பதாக கூறி, நாணய அச்சிடலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை வியட்நாம் கேட்டுக் கொண்டுள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் இருந்து தனது படைகள் மீள பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவுஸ்திரேலிய இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மூன்று பட்டைகள் கொண்ட மஞ்சள் கொடியுடன் பொருட்களை வெளியிடுவதையும், புழக்கத்தில் விடுவதையும் கடுமையாக எதிர்ப்பதாக வியட்நாமின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாணயத்தின் முகப்பில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவமும், முகப்பில் UH-1H உலங்கு வானூர்தியும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்து உலக சுகாதார மையம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.

“எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்,” என்று உலக சுகாதார மையம் டுவிட் செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல டிரோன் தாக்குதல் !

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஜனாதிபதி மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் ஜனாதிபதி மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – எட்டு குழந்தைகள் பலி !

சேர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை பொலிசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சேர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பாடசாலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது . எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்ததோடு ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்றதாக குறைப்படுகிறது. பொலிசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தினால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.