February

February

துருக்கி நிலநடுக்கம் – “பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்” என்கிறது உலக சுகாதார அமைப்பு!

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று (06) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, துருக்கியின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை அந்நாட்டு அதிபர் பிரகடனம் செய்தார்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கும் உலக சுகாதார நிறுவனம், இரு நாடுகளிலும் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள 6,000 கட்டடங்கள் அழிந்து விட்டதாகவும், எல்லையில் உள்ள சில நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துள்ளதாகவும் இரு நாடுகளின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

துருக்கி – சிரிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 5000ஐ தாண்டியது !

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

7.8 ரிச்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 5000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக பல கட்டடங்கள் சரிந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.

குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

நிலநடுக்க அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.

1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்குவியலாக காட்சி அளிக்கிறது.

மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் வைத்தியசாலைகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதிகள் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்தன.

அங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நகரங்கள் சின்னாபின்னமாகின. குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள ஜாண்டரிஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே உள்நாட்டு போரின் போது நடந்த குண்டுவெடிப்புகளால் இடிந்த கட்டிடங்கள் உள்பட நூற்றுக்கணக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

அதேபோல் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும், மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன.

பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,300ஐ தாண்டியது !

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிச்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலில் சுடப்பட்ட விவகாரம் – பதிலடி வழங்குவோம் என சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இதுவரை 195 பேர் பலி !

துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யாதீர்கள் – மக்களை அறிவுறுத்தும் நியூசிலாந்து..?

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூஸிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’ ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’. என்பதே அவையாகும். தற்போது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ‘என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

கொரோனாவில் இருந்து 64 கோடியே 84 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைவு !

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 84 லட்சத்து 95 ஆயிரத்து 665 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமாக இருக்கும் கணவனான திருநம்பி – பெற்றோராகும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி!

இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியிலுள்ள தம்பதிகளான சஹத் – ஜியா இருவரும் மூன்றாம் பாலின தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் கணவனாக இருக்கும் ஜியாவுக்கும் மனைவியாக இருக்கும் சஹத்திற்கும் முதல் குழந்தை பிறக்கவிருப்பதை புகைப்படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இவர்களுக்கு என ஒரு குழந்தையை தத்தெடுத்து  வளர்க்க முடிவு செய்து குறிப்பிட்ட ஒரு பிரபல வைத்தியசாலையில் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

அதற்கு மருத்துவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இந்த முறையை சரியாக செயற்படுத்தி தற்போது ஜியா கர்ப்பமாக இருக்கிறார். இவர்களின் அன்பு குழந்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உலகிற்கிற்கு வரவிருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மூன்று உயிர்களும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன – பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அரசாங்கத்திற்கு ‘கடினமான சூழலை’ அளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நேதன் போர்ட்டர் தலைமையிலான ஐஎம்எஃப் மிஷன், 7 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியின் ஒன்பதாவது மறுஆய்வுக்காக நிதி அமைச்சர் இஷாக் டார் தலைமையிலான பாகிஸ்தான் தரப்புடன் ஜனவரி 31 அன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.

பெஷாவரில் நடைபெற்ற அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார். இந்த குழு தீவிரவாதத்தை கையாள்வதற்கான மிக உயர்ந்த மாகாண அமைப்பாகும்.

பாதுகாப்பு நிலைமை குறித்து பேசுகையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துரைத்த ஷெரீப், “இந்த நிலைமை முழு தேசத்திற்கும் முன்னால் உள்ளது” என்று கூறினார்.

“நான் பேசும் இந்த வேளையில், ஐஎம்எஃப் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவர்கள் நிதியமைச்சர் இஷாக் தர் மற்றும் அவரது குழுவினருக்கு கடினமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஷெரீப் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதையும் அவர் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு வார முடிவில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 16.1 சதவீதம் குறைந்து 3.09 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை எதிர்பார்த்துள்ள அதே நேரம் மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் அலி சற்று நேற்றைய தினம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது !

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேற்படிப்பு சான்றிதழை தொலைகாட்சிக் நேர்காணல் ஒன்றில் எரிந்தார். மேலும், வீதிகளில் நின்று புத்தகங்களையும் வழங்கி வந்தார்.

இந்த நிலையில், மஷால் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற புகாரில் தலிபன் அரசால் கைது செய்யப்பட்டார். கைதின்போது மஷாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தலிபான் அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மஷாலின் கைது ஆப்கானிஸ்தானில் உள்ள சமூக ஆரவலர்களிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி பள்ளிகளிலும் பெண்கள் படிக்க இடைக்கால தடைக்கு தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பைக் கேட்டு, ஆப்கானிஸ்தான் பெண்கள் பலர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.