November

November

போதைப்பொருள் கடத்தல் குற்றம் – குவைத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை !

குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி – விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆர்டெமிஸ்-1 !

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் திகதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 16ம் திகதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

“வெறுப்பை வளர்க்காதீர்கள். முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.” – அக்தார், சமி ஆகிஆயாருக்கு அப்ரிடி அறிவுரை !

பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ஓட்டங்களே அடித்தது. பின்னர், 138 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ”மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா” எனப் பதில் அளித்திருந்தார்.

Read all Latest Updates on and about முகமது சமி

அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார். பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி,

இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ” நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை – தலிபான்கள் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

6-ம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர்.

முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தடைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் !

தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, ​​இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக வழக்கு என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பியதாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் மக்களால் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் குறிக்கும் மே 18 அன்று வேலைநிறுத்தம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் படி 6 பேருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்படுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடிக்க செய்தார் – தனுஷ்க குணதிலக தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மூச்சுத் திணறடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியது சிட்னி நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, தனுஷ்கா குணதிலக தனது வீட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், பின்னர் அவர் ஒரு கையை பெண்ணின் கழுத்தில் வைத்து 20 முதல் 30 வினாடிகள் வரை கழுத்தை நெரித்தார்.

இந்த பலாத்காரம் தொடர்பாக அப்பெண் துஷ்பிரயோக பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரால்டில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கின் வழக்கு தொடர்பான விடயங்களை பகிரங்கப்படுத்த ஊடகங்களுக்கு சிட்னி நீதவான் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டை அடுத்து தடையை நீக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

பெண்ணின் அனுமதியின்றி பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலக்க, காணொளி தொழில்நுட்பம் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது பலாத்காரம் நடந்த விதம் தொடர்பான முழுமையான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முழு அறிக்கையை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.

விசாரணைகளின் போது முறைப்பாட்டாளர் முன்வைத்த சில விடயங்களை தனுஷ்க குணதிலக்க ஒப்புக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக் சார்பில் கடந்த திங்கட்கிழமை ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத், வழக்கிலிருந்து விலகினார். தனுஷ்க குணதிலக் சார்பில் பாரிஸ்டர் சாம் பரராஜசிங்கம் மற்றும் சட்டத்தரணி சாரா பிளேக் ஆகியோர் ஆஜராகினர்.

யாழ்ப்பாணத்தில் 4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் – தந்தை தலைமறைவு !

4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டுவிட்டு சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி, தாயையும், மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, வழக்கு ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ம் திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட் எப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் காணொளியில் இருந்த குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.