October

October

ஆங் சான் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறை !

மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.

என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீடித்தது.

தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சூகி மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26 ஆக நீடித்துள்ளது.

நாங்கள் காணாமலாக்கப்பட்டோரையே கேட்கிறோம். உங்கள் 200,000/- ரூபாயை அல்ல – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனம் !

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000/= ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை, செலுத்தப்படுகின்ற 100,000/= ரூபா தொகை போதுமானதாக இன்மை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் (Certificate of Absence) பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படுகின்ற தொகையை 200,000/- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இரணப்பாளர் ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கின் உறவினர்களை தேடும் போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தித்தான் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம் தொடர்ச்சியான தேடலில் இருந்து வந்த நாம்  இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துவந்தோம் எங்கள் கோரிக்கைக்கு எவரும் செவிமடுக்கவில்லை என்றுதான் 5 ஆண்டுகள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் இராணுவத்திடம் கையளித்தவர்கள் வீடுகளில் வந்து எங்கள் கண்முன்னால் கொண்டு சென்று போனவர்கள் வெள்ளைவானில் வைத்து கடத்தப்பட்டவர்கள்,கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்கள் என எங்களுக்கு முன்னால் நடந்தவற்றைத்தான் சாட்சியமாக நாங்கள் நின்று தேடலில் ஈடுபட்டு வருகின்றோம் கையளிக்கப்பட்ட சின்னஞ்சிறுவர்கள் உட்பட கையளித்தவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

எமது தொடர்போராட்டதிற்கு ஈடுகொடுக்கமுடியாத இலங்கை அரசாங்கம் முன்னால் ஜனாதிபதி கோட்டபாஜறாஜபக்ச அவர்கள் இருக்கும் போதும் இதனைத்தான் கொண்டுவந்தவர் எங்களை முறியடித்து போராட்டத்தினை நிறுத்தினால் எந்த பிரச்சினையும் வராது என்று.

இப்போது இருக்கும் ஜனாதிபதியும் அவர்களுடன் சேர்ந்து எங்களை பந்தடித்துக்கொண்டிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும் வேளையில் நேற்று(10.10.22 அன்று அறிவித்துள்ளர்கள்.

இது ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது அந்த வாக்கெடுப்பிற்கு ஓரு கண்துடைப்பாகவும் எமது உறவுகளை ஏமாத்தும் விதமாகவும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதற்காகவும் தான் இந்த இரண்டு இலட்சத்தினை கொடுத்து ஏமாற்றவுள்ளார்கள்.

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா? இது எந்த மூலைக்கு காணும் பணத்தினை கொடுத்து உயிரினை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் இந்த செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கையில் ஒப்படைக்கப்பட்டவர்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் இறந்தவர்களை நாங்கள் தேடவில்லை ஒட்டு மொத்தமாக எட்டு மாவட்டங்களிலும் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கொண்டுசென்று நீதிமன்றில் நிறுத்தி அதன் பின்னர் என்ன தீன்வு என்பi த நாங்கள் முடிவெடுப்போம் அது மட்டு நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுப்போம் நிதிகளை கொடுத்து உறவுகளை இல்லாமல் செய்யும் செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நிதிகளை அரசின் தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் எங்கள் உயிர்களை எங்கள் கையில் தருவதற்கான சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நீதியினை பெற்று தண்டனையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பததான் எங்கள் ஆசை இதற்காக எல்லோரும் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் கைது !

மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியால் சேட்டை விட முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு !

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஈரானில் பூதாகரமாகும் ஹிஜாப் விவகாரம் – அரச தொலைக்காட்சியை முடக்கிய டிஜிட்டல் போராட்டக்காரர்கள் !

ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் திகதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் டிஜிட்டல் போராட்டக்காரர்கள், ஈரான் அரசின் டிவியின் நேரடி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கினர். அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில், ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி கலந்து கொண்ட கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்த போது, சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. ஈடலட் இ அலி என்ற அமைப்பு இந்த முடக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அப்போது, உயிரிழந்த அமினியின் படமும், போராட்டத்தில் உயிரிழந்த 3 பெண்களின் படமும் சில நிமிடங்கள் திரையில் காட்டப்பட்டன. தொடர்ந்து எங்களது இளைஞர்களின் ரத்தம் உங்களின் கைகளில் உள்ளது. எங்களுடன் சேர்ந்து போராட வாருங்கள். அயதுல்லா காமெனெய், ஈரானை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்ற வாசகங்களும் காட்டப்பட்டன.

அரசுக்கு எதிரான புரட்சி குழுக்கள், டிவி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கியதை அந்நாட்டு செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சிறுவர்களின் அழகான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும் தொலைபேசிகள் – பெற்றோர்களே விழித்துக்கொள்ளுங்கள். !

அண்மையில் சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் ஒக்டோபர் முதலாம் தேதியன்று. கொண்டாடப்பட்டிருந்தது.

Better Future for Every Child ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்  
என்ற மகுடவாசகம் 2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின மகுடவாசகமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பல பாடசாலைகளில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறுவர் தின கொண்டாட்டங்கள் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பாடசாலை மட்டங்களில் பெரிதாக இடம்பெற்றிருக்காத நிலையில் இந்த வருடம் வெகுவிமரிசையாக பல பாடசாலைகளில் கொண்டாடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே எங்களுடைய குழந்தைகளுக்கு – எதிர்கால தூண்கள் எனப்படும் சிறுவர்களுக்கு நாம் வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை பெரியவர்களான நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் ஒரு பக்கத்தில் மாணவர்களிடையே வேகமாக பெருகி வரும் வன்முறை கலாச்சாரம், இன்னொரு பக்கமாக மாணவர்களிடையே வேகம் அடைந்து வரும் போதைப் பொருள் பழக்கம், சிறுவர்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் என  சிறுவர்களின் உலகம் மிகுந்த பாதுகாப்பற்ற ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவை தாண்டி இலங்கையில் இன்றைய தேதிக்கு சிறுவர்களை மிகவும் பாதிக்கக் கூடிய – நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தக்கூடிய ஒரு விடயமாக தொலைபேசி பாவனை உருவெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதை அண்மையில் வெளியான மூன்று செய்திகள் தெளிவாக வெளிக்காட்டி இருந்தன.
செய்தி 01
கம்பளையில்  பேஸ்புக் பார்ட்டி ஒன்று இடம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்த அந்த பார்ட்டியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தோரில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் 14 தொடங்கி 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் என போலீசார் சுட்டிக் காட்டியிருந்தனர்.
செய்தி 02:
யாழ்ப்பாணம்- வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான். மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான். அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செய்திகளையும் இலகுவாக இன்றைய சமுதாயத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் சரி – பல பெற்றோரும் சரி இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். இந்த செய்தி தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற தருணம் இது.
உண்மையிலேயே மேற்சொன்ன இரண்டு செய்திகளும் தொலைபேசி பாவனையால் இன்றைய சிறுவர்கள் எந்தளவு தூரத்திற்கு அச்சுறுத்தலான ஒரு உலகில் வாழ தலைப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இரண்டு செய்திகளிலும் உள்ள தவறுகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் சிறுவர்கள் அல்ல. பெற்றோர்களும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெரியவர்களுமே. சிறுவர்களின் கைகளுக்கு தொலைபேசிகளை கொடுக்கின்ற போது பெற்றோர் அவற்றின் நல்ல விடயங்களை – அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்க மறந்ததன் விளைவே மேற்கூறப்பட்ட இரு அபத்த சம்பவங்களும் ஆகும்.
கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தொலைபேசி – இணையம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் இடையேயான தொலைபேசி பாவனை இன்னும் தீவிர தன்மையினை எட்டி உள்ளது.
Mobile phone use by children – XpertSpeaks
சில பெற்றோர்கள் “என்னுடைய மகன் 24 மணி நேரமும் தொலைபேசியுடன் தான் இருக்கிறான். ” என சிலாகித்துக் கூறுவதையும் இன்றைய காலத்தில் காண முடிகிறது. சரி அந்த சிறுவர்கள் தொலைபேசிகளில் என்ன செய்கிறார்கள் என சற்று கூர்ந்து அவதானித்தால் அவர்கள் பெரும்பாலும்  Free fire,  pubG என வன்முறையை தூண்டக்கூடிய ஆபத்தான கேம்களை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது விளையாட்டு தானே என கடந்து செல்லக்கூடிய விடயம் அல்ல. இந்த விளையாட்டுக்கள் சிறுவர்களின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் வன்முறை குணத்தை விதைத்து விடுகின்றன. அத்துடன் தொடர்ந்து தொலைபேசி கேம்கள் விளையாடும் போது உடல் சார்ந்த – மனது சார்ந்த பல தாக்கங்களுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை தவிர கள்ளங் கபடமற்ற சிறுவர்களிடத்தில்  பாலியல் சார்ந்த விடயங்களை தவறான புரிதலோடு இந்த தொலைபேசிகள் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமான பல இணைய  தளங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் கைகளில் இருக்கக்கூடிய தொலைபேசிகளை பெற்றோர் கண்காணிக்காது விடுகின்ற போது ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற துர்ப்பாக்கியமான நிலைமையும் இன்று ஏற்படுத்துள்ளது. இது பாடசாலை காலங்களில் சக மாணவியையோ – சக மாணவனையோ – சக சிறுவனையோ –  சக சிறுமியையோ ஆபாசமான கண்ணோட்டத்தில் சிறுவர்கள் நோக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. இயல்பாகவே பால் சமத்துவக்கல்வி நமது நாட்டில்  சிறுவர்களுக்கு முறையாக கற்பிக்கப்படுவதில்லை. இதனால் பால்நிலை சமத்துவம் தொடர்பான புரிதல் 20 வயதை தொட்ட இளைஞர்களிடம் கூட ஒழுங்காக இருப்பதில்லை. இந்த நிலையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் இன்னமும் அதிகம் இந்த தொலைபேசி பயன்பாட்டால்  முறையற்ற – புரிதலற்ற பாதையில் செல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
சிறுவர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட ஆரம்பித்ததை அடுத்து சிறுவர்கள் மைதானங்களை – ஓய்வு நேரங்களில் ஏனையவருடன் விளையாடுவதை முழுமையாக நிறுத்தி விட்டனர் என்றே கூற வேண்டும். கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் கூட தொலைபேசிகளில் கேம் விளையாடுவதிலும் – தொலைபேசியுடன் தனிமையில் இருப்பதிலுமே இன்றைய சிறுவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவுகளையே இன்றைய நாங்கள் பல பாடசாலைகளில் காண முடிகிறது. பல மாணவர்களின் உடல் எடை அதிகமாகி சிறுவயதிலேயே அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இதுவும் ஒரு வலமாக தொலைபேசி ஏற்படுத்திய ஆபத்தான விளைவு தான்.
இன்று சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கக்கூடிய அனைவருடைய கைகளிலும் இணைய வசதியுடன் கூடிய போன்களே காணப்படுகின்றன. வேலை முடித்து வந்ததிலிருந்து அடுத்த நாள் வேலைக்கு செல்லும் வரை குடும்பத்தின் அப்பா – அம்மா – அண்ணா – அக்கா என குடும்ப அங்கத்தவர்கள் பலர் தொலைபேசியிலேயே காலத்தை கழித்து விடுகிறார்கள். பெற்றோரும் தொலைபேசியில் பிள்ளைகளும் தொலைபேசியில் என்ற நிலையே அதிக குடும்பங்களில் காணப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களுக்கு இடையே சீரான ஒரு தொடர்பு அல்லது பிணைப்பு இன்று அதிக குடும்பங்களில் இல்லாமலேயே போய் விட்டன. இதனால் தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள் – பிரச்சனைகளை கூட பெற்றோர் பெரியவர்கள் கவனிக்காது விட்டு விட்ட சோகம் பல இடங்களில் தொடர்கிறது.
இன்றைய நாட்களில் ஆண்ட்ராய்ட் போன்கள் சிறுவர்களின் கைகளில் அதிகமாக உலவ ஆரம்பித்துள்ளதன் விளைவு எப்படியிருக்கிறது என்பதை அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலை வெளியிட்டிருந்த ஒரு அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது. அந்த அறிக்கையின்படி,
டிக்டொக் செயலிக்கு அடிமையாகியதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதேவேளை, தரம் 09 ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ, பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர். 
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.  இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால், நீரழிவு, உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.’
என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியாவில் உள்ள ஒரு பிரபல பாடசாலை அதிபரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதில் மாணவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் குறிப்பிட்டு இருந்த குறித்த பாடசாலையின் அதிபர் ” மாணவர்கள் முன்னைய காலங்களைப் போல மைதான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. தொலைபேசிகளை பார்க்கின்ற போது மட்டுமே அவர்களுடைய முகங்கள் சந்தோஷமடைகின்றன. இன்றைய தேதிக்கு சிறுவர்களை சந்தோஷப்படுத்த தொலைபேசிகள் மட்டுமே போதுமானவை. இரவு நேரங்களில் அதிகமாக தொலைபேசிகளை பாவிக்கும் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் சோர்வாகவும் – தூக்க மயக்கத்திலும் இருக்கிறார்கள்” என விசனப்பட்டு கொண்டார்.
இன்று பல சிறுவர்கள் அதிகம் எதிர்கொண்டுள்ள குறைபாடு பார்வை தொடர்பானதாகும். இதற்கான காரணம் மாணவர்கள் இடையே அதிகரித்த தொலைபேசி பாவனையாகும்.” ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் , நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.” என்கிறார்கள் கண் வைத்தியர்கள். இன்று சிறுவர்களை அதிகமாக கண்கிளினிக்குகளில் காண முடிகின்றது. சிறுவயதிலேயே அவர்கள் கண் வலி காரணமாக கல்வி கற்க முடியாத சூழலையும் எதிர்கொள்கின்றனர். இதைத் தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
How to use parental controls on a smartphone | Gadget Cover
எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து சிந்திக்கும் ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களிடம் தொலைபேசி பாவனையை குறைத்துக் கொள்வதற்கு வலியுறுத்த வேண்டும். அதே தொலைபேசிகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகள் தொலைபேசிகளை பாவிக்கும் போதும் சரியான வகையில் அதனை பயன்படுத்துகின்றனரா..? அவர்களுடைய தொலைபேசி பாவனை முறையானதாக உள்ளதா ..? தவறானதாக இருப்பின் ஏன் தவறானது..? என்பவற்றை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி சொல்லி கொடுத்து  கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவருடைய பொறுப்பும் ஆகும். ஆனால் பெற்றோர்களும் பெரியவர்களும் பணம் , உழைப்பு, சொகுசான வாழ்க்கை இவை மட்டுமே தேவையானது என்ற கோணத்தில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் சிறுவர்களுடன் குறிப்பாக தமது பிள்ளைகளுடன் தங்களுடைய நேரத்தை ஒதுக்க தயார் இல்லை என்பது தொலைபேசியில் தொடங்கி சிறுவர்கள் இன்றைய தேதிக்கு எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகும்.
இன்றைய தினம் ஒவ்வொரு சிறுவர்களின் கைகளிலும் உள்ள ஆண்ட்ராய்டு போன்கள் அவர்களினுடைய எதிர்காலத்தினை மெல்ல மெல்ல சிதைத்து விடுகின்றன என்பதை ஒவ்வொரு பெற்றோருமே நினைவில் வைத்திருக்க வேண்டும். காலம் வேகமாக நவீன உலகை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் நவீன உபகரணங்களை கையாள ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் சிறுவர்களின் கைகளில் உள்ள தொலைபேசி அளவான வகையில் தேவைக்கேற்றாற் போல் மட்டுமே இருந்தால் அது தேவையற்ற – எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது.
எங்களுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த சிறுவர் தினத்தில் நாம் உறுதி பூணுவோமாக. மெல்ல மெல்ல சிறுவர்களை தொலைபேசி உலகில் இருந்து யதார்த்தமான உலகத்திற்கு கொண்டு வந்து வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை அவர்களை உணர வைப்பதற்கு பெற்றோர்களும் பெரியோர்களும் – ஆசிரியர்களும் வழிசெய்ய முன்வர வேண்டும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் தேசம் இணையத்தின்  இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் காங்கிரஸ் அரசும், பா.ஜ.க அரசும் ஒரே போக்கையே பின்பற்றுகின்றன – பழ.நெடுமாறன் விசனம் !

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தமை கண்டிக்கத்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நேற்று முன்தினம் (06) சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது  இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாமை கண்டித்தக்கது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக  தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே பாரதிய ஜனதாக் கட்சி அரசும் பின்பற்றுவதாகவும், தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதில் இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

5,320 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல் – கப்பலை கைப்பற்றிய இந்திய கடற்படை!

சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 1,200 கோடி இந்திய ரூபாய் (5,320 கோடி இலங்கை ரூபாய்) என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர், கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இலங்கையின் கப்பல் ஒன்றுக்கு மேலும் சரக்குகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இந்திய கடற்பரப்புக்கு புறப்பட்டபோதே இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இலங்கைக் கப்பலை அடையாளம் கண்டு இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்ததது ஏன்.? – இந்தியா விளக்கம் !

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும். இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள் – சுற்றுலாப்பயணிகளுக்கு அமெரிக்கா ஆலோசனை !

வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.