24

24

பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமராகிறார் !

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார்.

அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார்.

ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் – சீன ஜனாதிபதிக்கு கிம் ஜோங் வாழ்த்து !

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸி ஜின்பிங், மூன்றாவது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.