13

13

சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை !

சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற பழைய முறைக்கு மீண்டும் மாறும் முறை அமலாக உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக, 2012ல் பதவியேற்றார் ஷீ ஜிங்பிங். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதன்படி, ஜிங்பிங் சீன அதிபர் பதவியில், 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், அவர் அதிபர் பதவியை ஏற்றதும், கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். சீனாவில் அசைக்க முடியாத தலைவராக ஜிங்பிங் மாறியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் இருக்கும் வகையில், கட்சியில் சட்டம் திருத்தம் செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதன் பிறகு அதிபராக பொறுப்பேற்ற டெங்க் ஜியோபிங் ஆட்சியின்போது தான், 10 ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் மா சேதுங் காலத்துக்கு சீனா செல்ல உள்ளது. கட்சியின் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, வரும், 16ம் திகதி நடக்க உள்ளது.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சேர்த்து, வாழ்நாள் முழுதும் ஜிங்பிங் அதிபராக தொடரும் முடிவை எடுக்க உள்ளனர். இதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தன் ஆதரவாளர்களை மட்டுமே ஜிங்பிங் நிறுத்தினார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 2,296 பேர் இணைந்து, ஜிங்பிங் அதிபராக தொடரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.

பாகிஸ்தானில் ஒவ்வொருநாளும் 12 பெண்கள் பலாத்காரம் – நான்கு ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் !

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கௌவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கௌரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் !

உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.