16

16

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி – பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இன்னமும் உரிமையற்றோராய் !

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்கு எதிராக இன்று (16) ஹட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள் !

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்தளத்தில் அழுகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள முல்தான் பகுதியில் நிஷ்டர் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் சவுத்ரி ஜமான் குஜ்ஜார், நிஷ்டர் மருத்துவமனைக்கு இருநாட்களுக்கு முன் சென்றபோது மருத்துவமனையில் பிணங்கள் இருக்கும் தகவலை ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நிஷ்டர் மருத்துவமனையின் பிணவறையின் கதவை திறக்க குஜ்ஜார் உத்தரவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது பிணவறையில் 200 க்கும் அதிகமான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து குஜ்ஜார் கூறும்போது,

“ முதலில் மருத்துவமனை ஊழியர்கள் பிணவறையின் கதவை திறக்கமாட்டேன் என்றனர். நான் போலீஸுக்கு இதுகுறித்து புகார் அளிப்பேன் என்றவுடன் கதவை திறந்தார்கள். கல்லூரி முதல்வரை இதுகுறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களின் கல்வி ரீதியான தேவைக்காக இந்த உடல்கள் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் பிணங்கள் அதிகளவில் சிதைவடைந்து இருந்தன. 50 ஆண்டுக்கால பாகிஸ்தான் வரலாற்றில் நான் இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது. அரசு மருத்துவமனையில் உரிமை கோரப்படாத 200 க்கும் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் உண்மை இல்லை – முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கிய கடனை இலங்கை செலுத்த வேண்டும் – பங்களாதேஷ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உரிய கடன் தொகையை செலுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதாகவும், உடன்படிக்கையின் பிரகாரம் உரிய நேரத்தில் உரிய பணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர் தெரிவித்துள்ளார்.