October

October

“கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன்.”- ரிஷி சுனக்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.

இதனால், 45 நாட்கள்பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன் பின் வாங்கினார். மற்றொருவர் பென்னி மோர்டார்ட்க்கு போதிய ஆதரவு இல்லை. இதனால், போட்டியின்றி ரிஷி சுனக் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அவர் பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரிஷி சுனக் மன்னர் சார்லசை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்கும்படி சார்லஸ் கேட்டு கொண்டார். இதனையடுத்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்று கொண்டார்.

இதன் பிறகு நிருபர்களிடம் ரிஷி சுனக் கூறுகையில்,

எனது பணி உடனடியாக துவங்குகிறது. கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். பிரிட்டனின் பொருளாதாரத்தை உயர்த்துவது தான் எனது இலக்கு. குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த லிஸ் டிரஸ் விரும்பியதில் தவறில்லை.

இது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சியை நான் பாராட்டினேன். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்தன. தவறுகள் இருந்தாலும் அதில் கெட்ட எண்ணங்கள் இல்லை. பிரெக்சிட் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரத்தை எனது அரசாங்கம் உருவாக்கும். ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றியதாக அரசு இருக்கும். மக்களின் நம்பிக்கையை பெறுவேன். சிறந்த எதிர்காலத்திற்கு நமது நாட்டை வழிநடத்தி செல்லவும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் தேவைகளை முன்வைக்கவும், கட்சியின் மிகச்சிறந்த மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை உருவாக்கவும் தயாராக உள்ளேன். ஒன்றாக நம் நம்ப முடியாத விஷயங்களை அடைய முடியும். பலர் செய்த தியாகங்களுக்கு தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளையும், அதன் பின் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுன் நிரப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அமரதாஸின் ஒளி ஓவிய நூல்: சொன்ன சேதியும், சொல்லாத சேதியும் விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பும்


நூல் வெளியீடு – சொன்ன சேதி:
கோவிட் பெரும் தொற்று பற்றிய பயம் விட்டுப்போக லண்டன் தமிழ் அரசியல் அரங்கும் விறுவிறுப்படைய ஆரம்பித்து இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் அளவுக்கு தமிழ் அரசியல் சூடாகாவிட்டாலும் அது தன்னுடைய அளவில் சலசலப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் திரள் கலை, இலக்கிய குழுமம் நடத்திய “Through the Fire Zones: Photographs of Amarathas in Sri Lanka’s War Zones” என்ற அமரதாஸின் இலங்கை யுத்தம் தொடர்பான புகைப்பட நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒக்ரோபர் 22இல் ஹரோ பப்ரிஸ்ற் சேர்ச்சில் மாலை ஐந்துமணிக்கு மேலாக நிகழ்வு ஆரம்பித்தது. பா நடேசன் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பிபிசி ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் கலந்துகொண்டிருந்தார். அவருக்கு நூலின் முதற்பிரதி அவருக்கே வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தளபதிகளுடன் மிக நெருக்கமாக இருந்தவர் பிரான்ஸிஸ் ஹரிசன். இவர் “Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War” என்ற நூலை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ‘போர் வலயங்கள்’ பற்றிய படத்தை தந்தமைக்காக பிராஸிஸ் ஹரிசனுக்கு நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. லண்டன் புகைப்படப் படக் கலைஞரும் அரசியல் சமூக ஆர்வலருமான சுகுன சபேசன் தமிழில் இருந்த புகைப்படக் குறிப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமைக்காக அவருக்கும் அந்நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் முறைப்படி கூட்டம் தாமதமாக ஆரம்பித்தாலும் பேச்சாளர்கள் நெருக்கமான நேரத்தை கவனத்தில் எடுத்து தங்கள் கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர். பிரான்ஸிஸ் ஹரிசன் இந்த யுத்தத்தில் இருந்து தப்பி வந்த அமரதாஸ் போன்றவர்கள் தங்கள் கதைகளைச் சொல்ல முன்வந்ததை பாராட்டியதோடு, இவ்வாறு தப்பித்து வந்தவர்களின் ஆக்கங்கள் பல வெளிவர வேண்டும் அவை பல தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா, புகைப்படக் கலைஞர் கெவின் காட்டரின் சூடானின் வறுமையை வெளிப்படுத்திய ஒரு ‘பெண் குழந்தையின் மரணத்திற்காகக் காத்திருந்த கழுகு’ புகைப்படம் பற்றிச் சுட்டிக்காட்டி அப்புகைப்படக் கலைஞர் அது ஏற்படுத்திய மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டமையைச் சுட்டிக்காட்டினார். ஒளி ஓவியங்கள் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதே போல் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க நேபாம் குண்டினால் நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவினதும் உலகினதும் கண்களைத் திறக்க வைத்தது பற்றி அரசியல் கலை இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அவர் தனதுரையில் புகைப்படக் கலைஞரின் அறம் பற்றி பேசியதுடன் அமரதாஸ் அதனை கவனமாகக் கையாண்டிருப்பதாயும் குறிப்பிட்டார். புகைப்படம் என்பது ஒரு வரலாறல்ல என்று குறிப்பிட்ட யமுனா ராஜேந்திரன் அது ஒரு வரலாற்றின் சாட்சியம் என்று குறிப்பிட்டார். ஒரு படம் ஒரு சம்பவத்தை, ஒரு காலத்தை சொல்லக்கூடியது என்பதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் அமரதாஸ் அந்த மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய இப்படங்கள் அந்த யுத்த காலத்தின் சாட்சியங்கள் என்றும் அதனை அமரதாஸ் திறம்பட பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமரதாஸின் ஒளி ஓவியங்கள் ஓடும் படத்தின் தன்மையைக் காட்டுவதாக சுகுன சபேசன் தெரிவித்தார். இப்படங்கள் கோர்வைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுகுன சபேசன் தெரிவித்தார்.

இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் முக்கியஸ்தரும் சமூக, கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான சேனன் குறிப்பிட்டார். அமரதாஸ் ஏனைய சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் போலல்லாது அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களின் வாழ்வை தன் புகைப்படங்களினூடாகப் பதிவு செய்துள்ளார். என்ன தான் ஜனநாயம் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னாலும் உண்மையில் அவற்றுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. பிபிசி போன்ற ஊடகங்கள் ஓடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை. இந்தப் படங்கள் எமக்கு அவசியமான ஆவணங்கள். எம்முடைய பொக்கிஸங்கள் என்றும் அதனால் இந்நூல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் சேனன் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு ஆவணக்காப்பாளர் என்ற ரீதியில் நீண்ட கால நோக்கில் நூலை விமர்சனப் பார்வையில் அணுகி இருந்தார். நூலிற்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் தலைப்பையும் வழங்கத் தவறியது பிற்காலத்தில் தமிழ் நூல் சேகரிப்பில் இந்நூல் தவறவிடப்பட்டுவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார். அமரதாஸ் ஒரு கவிஞராக இருந்தும் புகைப்படங்களுக்கான குறிப்புகளை வழங்கத் தவறியிருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

பேச்சாளர்களின் உரைகளின் முடிவில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு முன்னதாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பா நடேசன், நூலகவியலாளர் என் செல்வராஜா ஆகியோருக்கு இந்நூல் தொடர்பாக தொலைபேசியில் பல அதிருப்திகள், நெருக்கடிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிகழ்வின் கலந்துரையாடலின் போது காணக்கூடியதாக இருந்தது. நூலில் தொகுக்கப்பட்ட படங்கள அமரதாஸ்க்கு மட்டும் சொந்தமானவை அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளது, எனப் பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்படங்களை கருப்பு வெள்ளையாக வெளியிட்டதன் மூலம் அப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரதாஸ் மழுங்கடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

இவை பற்றி அமரதாஸ் குறிப்பிடுகின்ற போது 2019இல் வரவிருந்த இந்நூல் சில காரணங்களால் அப்போது வெளியிடப்படவில்லை என்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக தற்போது வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கத்துடன் சர்ச்சைகளை கிளப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். நியாயம் பேச வேண்டிய சிலர் மௌனம் காத்ததாகவும் சிலர் மட்டும் தனக்கு தகுந்த நேரத்தில் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் விசமிகளுடைய சதிகளுக்கு தான் பணியப் போவதில்லை என்றும் அமரதாஸ் தெரிவிக்கின்றார். தான் பாதுகாத்து வைத்திருக்கும்படி வழங்கிய படங்கள் கைமாறி, திருடப்பட்டு சில நபர்களால் அநாமதேயமாக வெளியிடப்பட்டதாகவும் அப்படங்களை வேறவரது படங்கள் போலக் காண்பிக்க முற்படுவதாகவும் அமரதாஸ் குற்றம்சாட்டுகின்றார்.

விசிலடிச்சான் குஞ்சுகளின் எதிர்ப்பு:
அமரதாஸ் தன்னுடைய அல்லது தன்னிடமிருந்த புகைப்படங்களின் உரிமையை பொதுமைப்படுத்த முன்வராததால் புலம்பெயர் புலிகளின் வெவ்வேறு பிரிவினருக்கும் அமரதாஸ்க்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் எழுந்தது. ஒளிப்படங்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு அப்பாலும் அமரதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை புலம்பெயர் புலி விசிலடிச்சான் குஞ்சுகள் வைக்கின்றன. ஒளிப்படங்களை இரத்தமும் சதையுமாக வெளியிட்டு இருந்தால் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தங்கள் அரசியலுக்கு அதனைப் பயன்படுத்தலாம் என்பது அவர்களுடைய விருப்பம்.

மேலும் அமரதாஸ் இறுதி யுத்தத்தை ஒரு இனஒழிப்பு யுத்தமாக சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு அமரதாஸ் முன்வைக்கின்ற விளகம் புரிந்துகொள்ளக் கூடியதே. நானும் இலங்கை அரசாங்கம் தமிழினவொழிப்புச் செய்ததாக நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஆனால் சர்வதேச அமைப்புகள் இன்னமும் அதனை ஏற்றுக் கொள்ளாததால் நான் அதனை இனவொழிப்பு யுத்தமாக குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் அல்ல. அவருடைய செயற்பாடுகள், எழுத்துக்கள் அவரை ஒரு தேசியவாதியாகவே உருவகப்படுத்துகின்றது. ஆனால் அமரதாஸ் விசிலட்டிச்சான் குஞ்சுகள் போன்று புலிகளுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டாடவில்லை. அமரதாஸ் அறிமுகவுரையில் “ஒரு போராட்டத்திலே போருக்குரிய நாசகாரப் பண்புகள் தலையெடுக்கக் கூடும். ஆகவே போராட்டத்திலும் போர்சார்ந்த குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. போரை ஒருவர் எதிர்ப்பது போராட்டத்தை எதிர்ப்பதாகாது. ஒரு போராட்டத்திலே தலையெடுக்கக்கூடிய நாசகாரப் பண்புகளை எதிர்ப்பதும் போராட்டத்தை எதிர்ப்பதாகாது. போரும் போராட்டமும் எப்படி உருவாக்கப்படுகின்றன எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் ஏற்றுக்கொள்ளாத அமரதாஸின் குறிப்புகள் விசிலடிச்சான் குஞ்சுகளை உசுப்பிவிட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலாத்கார ஆட்சேர்ப்பு, மக்கள் தஞ்சமடையும் இடங்களில் இருந்து தாக்குதலை நடத்துவது, கூடுதலான அழிவை ஏற்படுத்தும் வகையிலான மூன்றாம்தர யுத்த தந்திரங்கள், மக்களை தங்கள் காவலரன்களாக பயன்படுத்தியமை போன்ற பல விடயங்களை இந்த ஒளி ஓவியங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்நூலில் அமரதாஸ் இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றார். ஒருவரின் இறப்பே மிகக் கூடுதலானது. ஒரு லட்சம் பேர் இறந்திருக்க வேண்டும் அதற்கு ஆயிரம் ஆயிரம் படங்களின் சாட்சியம் தேவை என்று எண்ணத் தேவையில்லை. ஆதாரமற்ற கதையாடல்கள் இருக்கின்ற உண்மையையும் மழுங்கடிக்கச் செய்துவிடும். உண்மையை ஆதாரங்களோடு வெளிக்கொணர்வதே எமது நியாயங்களை முன்வைப்பதற்கான வழி. மிகைப்படுத்தல்கள் அவசியமற்றது.

சொல்லாத சேதி:
அமரதாஸ் சொல்லத் தவறிய விடயங்களே அவர் தொடர்பான பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக் காரணம். அமரதாஸினுடைய முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்துக் கூட அவருடைய நூலில் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய வைட்விஸன் – wide vision இணையத்தில் அவரைப் பற்றிய பக்கத்தில் கூட அமரதாஸ் தன்னை அறிமுகம் செய்யத் தவறி இருக்கின்றார். அல்லது அறிமுகப்படுத்த விரும்பவில்லை. இப்புகைப்பட நூலை பிரான்ஸிஸ் ஹரிசன் முதல் எல்லோருமே மிக முக்கியமான ஆவணமாகவே கருதுகின்றனர். சேனன் ஒரு படி மேலே சென்று அதனை தமிழர்களின் பொக்கிசம் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஆனால் இந்த ஒளி ஒவியங்களைத் தாங்கிய இந்நூல் அது ஆவணமாவதற்கு வேண்டிய முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு இருக்கின்றது. அமரதாஸ் தன்னிடம் இன்னும் சில ஆயிரம் படங்கள் இருப்பதாகக் கூறுகின்றார் அவற்றை மேலும் ஓரிரு நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார். அதனால் இதே போல் எதிர்காலத்தில் அந்நூல்களை வெளியிடாமல் இருக்க இதனைப் பதிவு செய்கின்றேன்.

அமரதாஸின் புகைப்பட நூல் ஒரு ஆவணமாக கருதப்பட வேண்டுமானால் அதற்கான அந்த அறத்தை அந்நூல் கொண்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யார் என்பதை வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து இருக்கின்றார். இதன் மூலம் அவர் படைப்பின் நம்பகத் தன்மையையும் நேர்மைத் தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளார். இதன் மூலம் அமரதாஸ் மிகத் துரதிஸ்டமான நிலையை தனக்கு ஏற்படுத்தி உள்ளார்.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளில் போராளியாக இணைந்து போராடியவர் என்றும் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாத்தையா மற்றும் பதவி பறிக்கப்பட்ட யோகி தரப்பினருடன், யோகிக்கு நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அமரதாஸின் இயக்கப்பெயர் இளம்திரையன் என்றும், லண்டனில் தலைமைச் செயலகம் என்று இயங்கும் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கின்றனர். இவர் யோகியின் மெய்ப் பாதுகாப்பாளராக இருந்ததாகவும் அவர் கூறுகின்றனர். ஆனால் சுயாதீனமாக அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

மாத்தையா இந்திய அமைதிப் படையுடனான யுத்தத்தை விரும்பி இருக்கவில்லை என்றும் இந்திய உளவுத்துறையோடு தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இத்தகவலை யோகி அறிந்திருந்தும் இயக்கத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர் பதவியிறக்கப்பட்டார். இக்களையெடுப்பில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமானவர்கள் என்று கருதப்பட்ட சிலர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் மாத்தையா மிகப்பெரும் படையணியை வைத்திருந்தமையும் அவர்களே தாக்குதல்களை முன்னின்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்திருந்த அமரதாஸ் யுத்தகளத்தில் (ஜெயசுக்குரு) தாக்குதலில் காலில் காயம்பட்டு இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகயில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இவரோடு கூட இருந்த நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளில் காயம்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் புகைப்படக் கலைஞர்களை உருவாக்குவதும் ஒன்று என்றும் அவ்வாறான பல புகைப்படக் கலைஞர்கள் வன்னியில் உருவாக்கப்பட்டதாகவும் அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய நூலில் கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் புகைப்பட ஊடகத்துறையை கற்பித்ததாக அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் அங்கு அதனைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் தன்னுடைய நூலில் “சர்வதேச பொது நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், எந்த ஊடகங்களும் வெளியில் இருந்து போர் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த சில ஊடகங்கள் மட்டுமே இறுதிப் போர் நடைபெற்ற வன்னிப் பகுதிக்குள் இயங்கிக் கொண்டிருந்தன” என்று குறிப்பிடும் அமரதாஸ் அடுத்த வரியில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் “நெருக்கடிகள் பலவும் நிறைந்திருந்த இறுதிப் போர்க்களத்தில், எனது ஊடகவியல்சார் நடவடிக்கைகள் அனைத்துமே சுயாதீனமானவையாக இருந்தன”. அமரதாஸின் இப்பதிவு அவர் தன்னை வலிந்து ஒரு சுயாதீனமான ஊடகவியலாளராகக் காட்ட முயல்கின்றார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுயாதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமரதாஸ் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இல்லாமல் புகைப்படப் பிடிப்பாளராகச் செயற்பட்டிருக்க வாய்ப்பேயில்லை.

அமரதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகாளல் பயிற்றுவிக்கப்பட்டு புலிகளுடைய நிதர்சனம் தொலைக்காட்சின் புகைப்படக் கலைஞராக செயற்பட்டதாக அக்காலத்தில் அமரதாஸ் உடன் நட்பாக இருந்த போராளிகள் தெரிவிக்கின்றனர். அமரதாஸினுடைய புகைப்படக் கருவியும் இயக்கத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திற்காக பணியாற்றுகின்ற போது அவனது படைப்புகள் அவர்களுடைய ஒப்பந்தத்திற்கமைய அவை அந்நிறுவனத்திற்கே சொந்தமாகின்றது. இது அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் சார்ந்தது. ஆனால் அதனை உரிமை கோருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளோ, நிதர்சனம் தொலைக்காட்சியோ இன்றில்லை. அவ்வமைப்பில் இருந்தவர்களுக்கோ அதில் பணியாற்றியவர்களுக்கோ அதனை உரிமை கோருவதற்கான எந்தச் சட்ட உரிமையும் கிடையாது. ஆனால் அமரதாஸ் உணர்வு ரீதியாக அதனை பொறுப்புணர்வுடன் கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்கு இன்று ஏற்பட்டுள்ள இந்நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.

2019 இல் நோர்வே தமிழ் சங்கம் இந்நூலை வெளியிடுவதற்கு உடன்பட்டு நூலையும் பதிப்பித்து இருந்தது. ஆனால் அப்பதிப்பில் புகைப்படத்திற்கான உரிமையை அமரதாஸிற்கு அல்லாமல் போராளிகளின் வெளியீடாக நோர்வே தமிழ் சங்கம் குறிப்பிட்டு இருந்தது. இதற்குப் பின்னணியில் தமிழ் சமூகம் மையம் TCC – Tamil Community Centre இருந்ததாகக் கருதப்பட்டது. ஒளிப்படங்களுக்கான தன்னுடைய உரிமையை நோர்வே தமிழ் சங்கம் நூலின் பதிப்பில் நீக்கியதற்கு எதிராக அமரதாஸ்; நோர்வே தமிழ் சங்கத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்றத்தில் வென்ற அமரதாஸினால் மக்கள் மன்றத்தை வெற்றிகொள்ள முடியுமா?

புலம்பெயர் தேசம் தன்னுடைய முதலாளித்துவ நோக்கில் தனிமனிதனின் நலன்களை முன்நிறுத்துகின்ற சட்டங்களையே கொண்டுள்ளது. உணர்வு ரீதியான, அறிவியல் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பலவீனமான தேசத்தில் அனைத்து விடயங்களுமே சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டியதாகவே உள்ளது. அந்த வகையில் அமரதாஸின் ஒளிப்படங்கள் சட்டரீதியாக அவருடையதாகவே இருக்கலாம். ஆனால் அது மட்டும் போதுமானதா? என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்றே சொல்வேன். உணர்வு ரீதியாகவும் அறிவியல் ஒழுக்கம், சார்ந்து தார்மீகக் பண்புகள் – அறம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அமரதாஸ் தான் யாரென்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தால் அவருடைய இந்நூலுக்கு அது இன்னமும் வலுச்சேர்த்து இருக்கும் என்றே நம்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகள் பல்வேறு தவறுகளை விட்டிருந்தபோதும் அதிலிருந்த போராளிகளின் அர்ப்பணிப்பை மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தமிழீழ விடுதலை புலிகளில் உறுப்பினராக இருப்பதோ, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் புகைப்படப் பயிற்சி பெற்றதோ, நிதர்சனம் தொலைக்காட்சியில் பணியாற்றியதோ தவறோ குற்றமோ அல்ல. ஆனால் அவற்றை இருட்டடிப்புச் செய்வது அவணப் பதிவின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால் ஒரு ஆவண ஒளிப்படத் தொகுப்பு எப்படி வெளியடப்படக்கூடாது என்பதற்கு அமரதாஸின் இந்நூலும் ஒரு உதாரணமாக இருக்கும். அதற்காக இந்நூலின் ஒளிப்படச் சாட்சியங்களை நான் நிராகரிப்பதாகவோ அல்லது அமரதாஸின் அர்ப்பணிப்பை நிராகரிப்பதாகவோ அர்த்தமில்லை. ஒரு படம் ஆயிரம் வாரத்தைகளுக்குச் சமமானது என்று சொல்கின்ற போது அமரதாஸ் 450 படங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை எவ்வித ஒழுங்கமைப்பும் குறிப்பும் இன்றி ‘கும்பையாகக் கொட்டியுள்ளார்’ என்றே எண்ணத் தோண்றுகின்றது. இது அவர் தெரியாமல் விட்ட தவறு அல்ல. தெரிந்துகொண்டே செய்த தவறு அல்லது சோம்பேறித்தனம். “அனைத்து ஒளிப்படங்களுக்குமான விரிவான குறிப்புகள் அல்லது தலைப்புகள் அவசியமில்லை எனக் கருதுகிறேன்” என்று தன்னுடைய நூலில் அமரதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தம் 2006இல் மாவிலாறு அணை மூடியதில் இருந்து 2009 மே 19 பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டவரை நீண்டது. அக்காலத்தில் மக்கள் அணியணியாக இடம்பெயர்ந்த வண்ணமே இருந்தனர். ஒரு ஒளிப்படத்திற்கு அதன் அடிக்குறிப்பு மிக மிக அவசியமானது. ஒவ்வொரு ஒளிப்படமும் பலநூறு சிந்தனைகளை தூண்டக் கூடியவை. அடிக்குறிப்புகள் தான் அவ்வொளிப்படத்தை அந்தக் காலத்தோடும் அந்தச் சூழலோடும் அப்பதிவை பிணைத்துக் கொள்ளும் .

நூற்பது ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எந்த நாளில் எரிக்கப்பட்டது என்ற சர்ச்சை நூலகவியலாளர் என் செல்வராஜா மே 31 1981 இரவு என்று உறுதிப்படுத்தும் வரை சர்ச்சையாகவே இருந்தது. அதனை மறுப்பவர்களும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் படம் பற்றிய அடிக்குறிப்புகள், படம் எடுக்கப்பட்ட திகதி, படம் எடுக்கப்பட்ட இடம் என்பவற்றைக் குறிப்பிடாமல் எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இவ்வொளிப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் அமரதாஸே தனது நூலுக்கான மதிப்பை குறைமதிப்பீடு செய்துள்ளார்.

இந்நூலில் அமரதாஸ் தோண்றுகின்ற பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படங்கள் அமரதாஸ் எடுத்த படங்களுக்கு நிகராக கனதியானதாகவும் உள்ளது. அப்படங்களை நிச்சயமாக அமரதாஸ் எடுக்கவில்லை. அப்படங்களை அமரதாஸ் போன்ற ஒரு புகைப்படக் கலைஞரே எடுத்திருக்க வேண்டும். போர் வலயங்கள் கொண்ட ஒரு சாதாரண இலங்கையின் வடக்குப் பகுதியின் படத்தை (இதனை கூகிள் சேர்ச்சில் தேடியே எடுத்திருக்க முடியும். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நூலில் பதிவு செய்திருக்கலாம்.) தந்ததாக பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் அமரதாஸ். ஆனால் இப்படம் பிரான்ஸிஸ் ஹரிசனுக்கு உரிமையானதும் அல்ல. அப்படியிருந்தும் இந்நூலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யுத்த பிரதேசத்திற்குள் தன்னுடைய படத்தை எடுத்தவருக்கு அல்லது எடுத்தவர்களுக்கு அமரதாஸ் நன்றி தெரிவிக்கவிலை. அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

உண்மைகள் சில சமயங்களில் கசக்கும். ஆனால் அவை அடுத்த படிகளுக்கு எம்மை இட்டுச் செல்லும். அடுத்த ஒளி ஓவிய நூல்களை வெளியிடுவதற்கு முன் அமரதாஸ் புகைப்படக் கலை பற்றிய தனது புரிதலையும் ஆழத்தையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். புகைப்படக் கலையின் நுட்பங்களைத் தெரிந்திராத எனக்கு இந்த ஒளி ஓவியங்களின் மதிப்பை அல்லது அதன் ஆழத்தை அமரதாஸ் உணரத்தவறிவிட்டாரோ என எண்ணத் தோண்றுகிறது. அமரதாஸினுடைய உழைப்பும் ஓவியங்களும் விலைமதிப்பிட முடியாதவை. அந்தக் காலத்தின் சாட்சியங்கள் அவற்றை அதன் பெறுமதி குன்றாது வெளிக்கொணர்வது மிக முக்கியமானது. அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற போது ஒவ்வொரு தடவையும் அவை வேறொரு கதையைச் சொல்வது போல் தோண்றுகின்றது. எந்த விடயமாக இருந்தாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம். அமரதாஸின் அடுத்த நூல்கள் தற்போது விடப்பட்ட தவறுகளைக் களைந்து நேர்த்தியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

தென்னாசியாவை சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துகிறார் – சந்திரிக்கா பண்டாரநாயக்க பெருமை !

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமராகிறார் !

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார்.

அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார்.

ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் – சீன ஜனாதிபதிக்கு கிம் ஜோங் வாழ்த்து !

இருவரும் சேர்ந்து எங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஸி ஜின்பிங், மூன்றாவது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்பு !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார். ஜோர்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி நேற்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.

 

உயர்அதிகாரியை புகழ்ந்து கீதம் பாட மறுத்த 16 வயது மாணவியை அடித்துக் கொலைசெய்த பாதுகாப்பு படையினர்- ஈரானில் பெண்கள் மீது தொடரும் அடக்குமுறை !

ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அங்கு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்குள்ள பெண்கள் ஈரான் அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது.

இந்தப் போராட்டங்களை அந்நாட்டு அரசு மிகவும் மோசமான முறையில் கையாண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்கு மற்றொரு மரணம் நிகழ்ந்து உள்ளது. இந்த முறை வெறும் 16 வயதான மாணவி அடித்தே கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வடமேற்கு அர்டபில் நகரில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் சிலர் ஈரானின் உட்சபட்ச அதிகாரிகளைக் கொண்ட சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியை புகழ்ந்து பாட மறுத்து உள்ளனர்.

சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் சுப்ரீம் லீடரை புகழ்ந்து கீதம் பாட வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும், அந்த மாணவிகள் பாட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மாணவிகள் என்று கூட பார்க்காமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

வகுப்பறையிலேயே பாதுகாப்புப் படையினர் இப்படி மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் 16 வயதான அஸ்ரா பனாஹி பாதுகாப்பு படையினர் தாக்கியதில் அப்படியே சரிந்தார். உயிரிழப்பு இதையடுத்து அவர் உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், மாணவி உயிரிழந்ததற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு இதை மறுத்து உள்ளது. அஸ்ரா பனாஹியின் உறவினரும் மாணவி இதய பிரச்சினை காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த செப். மாதம் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் பொலிசார் அவரை கைது செய்தனர். தடுப்புக் காவலில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கோமா நிலைக்கும் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் தலைமுடியை வெட்டியும் ஹிஜாபை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் மட்டுமே இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தில் பெரும் சர்ச்சை !

காலநிலை மாற்றம் உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் படி நியூஸிலாந்து எடுக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஓசியானிய நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் அங்கு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. அங்கு சுமார் 1 கோடி மாடுகளும் இரண்டரை கோடி ஆடுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மூலாதாரமாக இந்த கால்நடை வளர்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த கால்நடைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி சுற்றுசூழலை பாதிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க நியூஸிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதேநேரம் இந்த வரிவிதிப்புக்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் விவசாயிகள் இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவை 2030 வாக்கில் 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் குறைக்க நியூஸிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

“இலக்கை அடைய முடியவில்லை“ – பதவியேற்ற 45 நாட்களில் பதவி விலகினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் !

இங்கிலாந்தின்  பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

கல்லெறிந்து கொல்ல தலிபான்கள் திட்டமிட்டதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 கோடி பெண்களில் 80 சதவீதத்தினர் ஊடகங்களில் பணியாற்றியவர்கள்.

இந்நிலையில், காபூல் நகரில் வசித்த ஒரு இளம்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

இருவரும் மாகாணம், மாகாணமாக தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் திகதி அந்த இளைஞரைப் பிடித்த தலிபான் -பயங்கரவாதிகள் அவரை துாக்கிலிட்டு கொலை செய்தனர்.

இளம்பெண்ணை பிடித்து, பொது இடத்தில்கல்லால் எறிந்து கொல்லவும் திட்டமிட்டனர். இதை அறிந்த அந்தப் பெண், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.