August

August

ஐ.நா ஊழியர்களை தாக்கிய தலிபான்கள் !

ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ”காபூல் விமான நிலையத்துக்குத் தப்பிச் செல்ல இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியரைத் தலிபான்கள் விரட்டிச் சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த இன்னொரு ஐ.நா. ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் அங்கிருக்கும் ஐ.நா. ஊழியர்களுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். காபூலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள்தான் அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

எனினும் தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை விளக்கம் ஏதும் தரவில்லை.

ஆப்கானிஸ்தான் தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல : மேற்குலகின் தலையீடுகள் எப்போதும் ஆபத்தானதே !

இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.

இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.

1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.

இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.

“ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி குழந்தைகள் ஆபத்தில்.” – யுனிசெப் கவலை !

ஆப்கானிஸ்தானில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இதுவரை அங்கு ஆட்சி அமைப்பதில் தீர்வு எட்டப்படவில்லை. தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குறைந்தது ஒரு கோடி குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்குக் காத்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அங்கு லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் செயல்பாட்டு இயக்குநரான டேவிட் பெஸ்லி கூறுகையில்,

“ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவீதம் பேர், அதாவது 1.4 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக அங்கே வறட்சி, உள்நாட்டு கிளர்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியன நிலவி வருகின்றன. இத்துடன் அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பரவலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பல்வேறு நாடுகளும் முதலீடு செய்திருந்தன. சர்வதேச அமைப்புகளும் முதலீடு செய்திருந்தன. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரம் தலிபான்கள்வசம் சென்றுள்ளதால் உலகவங்கி உதவிகளை நிறுத்தியுள்ளது. 2002 தொடங்கி இதுவரை உலகவங்கி ஆப்கனுக்கு 5.3 பில்லியன் டாலர் வரை வழங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச நிதியமும் அது அளித்துவந்த பல்வேறு உதவிகளை நிறுத்திவிட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில் … : சிவா முருகுப்பிள்ளை (பகுதி 1)

உலகின் ஒரு மூலையில் மனித குலம் எதிர்பாராத நிகழ்வுகள் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அப்படியான ஒரு வரலாற்று திருப்பு முனையாக 20 வருடம் ஆப்கானிதானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் திடீர் வெளியேற்றமும தொடரந்தாற் போல் ஒரு கிழமையிற்குள்…? அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அரசு பதவியை இழந்ததும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வும் நடைபெற்று இருக்கின்றது தற்போது.

எதிர்பாராத நிகழ்வு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் இவை எல்லாம் ஒரு வரலாற்றுப் போக்கில் நடைபெற்ற ஒரு வேக நிகழ்வுதான்.

இன்றைய ஆப்கானிஸ்தான் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு நாம் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை குறைந்தது ஐம்பது வருடங்களாவது பின் சென்று பார்த்தாக வேண்டும். அந்த வகையில் உலகின் வல்லரசுகளா ஒரு காலத்தில் இருந்த சோவியத் யூனியன் அமெரிக்கா என்று இரு முகாங்கள் வலுவாக உலகில் கோலோச்சிய காலத்தில் இருந்து நாம் வரலாற்றைப் பார்த்தாக வேண்டும்
அதிகம் மலைப் பிரதேசங்களையும் தட்டையற்ற நிலப்பரப்பையும் மலைகளில் அதிக கனிம வளங்களையும் கொண்டிருப்பதுதான் ஆப்கானிஸ்தான். பல்வேறு சிற்றரசுகளாக அவற்றிற்கிடையே அதிக தொடர்புகள் குறைவாக வெவ்வேறு ஆளுமையிற்குள் காலத்திற்கு காலம் இருந்து வந்திருக்கின்றது ஆப்கான். இன்று கூட நிலமை அவ்வாறுதான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒரு பல்லின மற்றும் பெரும்பாலும் பழங்குடி சமூகங்களைக் கொண்ட நாடு. பஷ்தூன்;, தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஐமக், துர்க்மேன், பலோச், பாஷாய், நூரிஸ்தானி, குஜ்ஜார், அரபு, பிராகுய், கிசில்பாஷ், பமிரி, கிர்கிஸ், சாதத் என்ற இனங்களையும் மேலும் சில மிகச் சிறிய அளவிலான இனங்களையும் தன்னகத்தே கொண்டது. ஆப்கான் அரசியலமைப்பு, தேசிய கீதம் போன்றவற்றில் பதினான்கு இனங்கள் பற்றி குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தலிபான் முழு ஆப்கானிஸ்தானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். வடக்கு கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் பஷ்தூன்; இனம் தவிர்ந்த ஏனைய சிறுபான்மை இனங்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பும் இங்கு பலமான ஒரு நிலையில் உள்ளது சில பிரதேசங்களில். குறிப்பாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியைக் குறிப்பிடலாம்.

வரலாற்றில் சற்று பின் நோக்கிச் செல்வோம்….

இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டுள்ள உலக நாடுகளில் பல நாடுகள் முன்னேற்றகரமான சமூக அமைப்பை, ஆண் பெண் சமத்துவத்தை தமது மத நம்பிக்கை மார்க்கத்தையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை உதாரணத்திற்கு காட்ட முடியும். உலகின் பொதுப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கம் மத அடிப்படைவாத செயற்பாட்டை தமக்குள் வகுத்துக் கொண்டு செயற்படுபவர்கள் என்ற பார்வை அதிகம் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

மத அடிப்படை வாதத்திற்கு அப்பால் மனித குல மேம்பாடு என்ற தளத்தில் இவற்றின் அடிப்படைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு பயணிக்க முற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கு உருவான அரசுகளும் கடந்த காலங்களிலும் இருந்து வந்தன என்பதை வரலாறு கூறி நிற்கின்றது.
மன்னர் ஆட்சிக் கோலோட்சிய 1960 களில்….

மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் மைத்துனரும் பஷ்தூன் தேசியவாதியான முகமது தாவூத் கான் பஷ்துனிஸ்தான் என்ற நாட்டை ஆப்கானிஸ்தானில் உருவாக்க முயன்றார் இதனால் அயல்நாடான பாகிஸ்தானுடன் முறுகல் நிலை ஏற்படட்டது. 1963 வரை பதவியில் இருந்த பத்து ஆண்டுகளில், தாவூத் கான் சமூக நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்தார் மற்றும் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவையையும் பேணி வந்தார். இதன் தொடர்ச்சியாக 1964 ஆப்கானிஸ்தானுக்கான புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் சர்தார் தௌவுத் கானின் மன்னராட்சிக்கு எதிராக ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஏப்ரல் 1978 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இவர்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக அன்றைய ஆப்கானிய அரச இராணுவம் செயற்பட்டது.

இந்தப் புரட்சியை தலைமை தாங்கிய நூர் முஹம்மது தராக்கி சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் ஆட்சியமைத்தார். அவர் பழமைவாதம் நிறைந்த ஆப்கானிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் திட்டங்களையும் முக்கியமாக நிலப் பிரபுகளுக்கு எதிரான நில சீர்த்திருத்தத்தையும் செயற்படுத்தினார்.

இது ஆப்கானிய நிலப் பிரபுக்களை ஆப்கானிய கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை செய்வதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அன்றைய ஆப்கானிஸ்தான் அரசில் அங்கம் வகித்த ஆப்கானிய கம்யூனிஸ்ட் தலைவர் நூர் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதரவான ஹபிசுல்லா அமினுக்கு இடையே மோதல் முற்ற, இராணுவத் தளபதி அமின் இன் உத்தரவின் பேரில் நூர் படுகொலை செய்யபடுகிறார்.

அதனைத் தொடர்ந்து அமின் சோவியத் நாட்டை தவிர்த்து அமெரிக்காவின் பக்கம் சாய்கின்றார் என்பதன் அடிப்படையில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி தளபதி அமினை படுகொலை செய்து விட்டு சோவியத் ஆதரவாளரான பாப்ரக் கர்மலை நாட்டின் தலைவராக நியமித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தானில் கம்யூனிசம் காலூன்றுகின்றது என்ற வெறுப்பு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிக் கொண்டது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இதற்கு எதிராக செயற்படத் தொடங்கினர். சோவியத் இராணுவம் உடனடியாக ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானங்களை அவை நிறைவேற்றின. சோவியத் ஆப்கானை விட்டு வெளியேற மறுக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் படைகளை வெற்றி கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சவூதிஅரேபியா, சீனா போன்ற நாடுகள் ‘முஜாஹிதீன்” என்ற இஸ்லாமிய சித்தாந்த ரீதியிலான மத அடிப்படைவாதப் போராளிகளை உருவாக்குகிறார்கள்.

அதன் தலைவர் முல்லா உமர் தலமையில் சோவியத் படைகளுக்கு எதிராகவும் அவரின் ஆதரவு ஆப்கானிஸ்தான் கம்யூனிச அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் சோவியத் சீனா இடையிலான முரண்பாடுகள் காரணமாக சீனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் அமெரிக்கா இருந்தது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளின் சோவியத்திற்கு எதிரான பனிப்போரை முஜாஹிதீன்கள் நடத்தினார்கள். இவர்களின் தளபதிகள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களாக இருந்து போராளிகளாக உருமாறியவர்கள். பெரும்பாலும் இவர்கள் பழங்குடியினர் மத்தியில் இருந்து வந்த பஷ்தூன்; இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் பாப்ரக் கர்மலின் ஆட்சியின் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்க, சோவியத் யூனியன் புதிய அதிபராக முஹம்மது நஜிபுல்லாவை நியமித்தது.

முஜாஹிதீன் களின் கெரில்லா யுத்தம் சோவியத் நாட்டுக்கு பெரும் இழப்பையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தியதன் விளைவாக பத்து வருடங்கள் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் இராணுவம் பெப்ரவரி 1989 ஆப்கானை விட்டு வெளியேறுகிறது.

ஆனாலும் தொடர்ந்து பொருளாதார இராணுவ உதவிகளை நஜிபுல்லா அரசிற்கு வழங்கி வந்தது. 1991 இல் சோவியத்தின் வலிந்த உடைவும் அதனைத் தொடர்ந்த சோவியத் ஆதரவு அற்ற ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா அரசும் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. முஜாஹிதீன் இற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க கூட்டமைப்புகள் ஆயுத பொருளாதார ஆதரவுகளை வழங்கி வந்த நிலையில் ஆப்கான் அரசு 1992 இல் வீழ்சியடைகின்றது.

முஹம்மது நஜிபுல்லா பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பியோட முயற்சித்தார். அது தோல்வியில் முடிய – ஆப்கானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் தலைமை குடியிருப்பில் தங்கியிருந்த முஹம்மது நஜிபுல்லாவை முஜாஹிதீன் துக்கிலிட்டு படுகொலை செய்து அதன் பின்பு வாகனம் ஒன்றில் பின்புறமாக கட்டி தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர்.

முஜாஹிதீன்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் துவங்கியது இவ்வாறுதான்.

கம்யூனிசத்திற்கு மாற்றாக இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதத்தை பரப்பிய ‘பெருமை’ மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளையே சேரும். சவூதிரேபியாவின் எண்ணெய் வளம், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி என்பது இந்த மத அடிப்படைவாதத்தின் அச்சாணி.
இதனைத் தொடர்ந்து பல்வேறு முஜாஹிதீன் பிரிவுகளின் கூட்டணியினர் அரசாங்கத்தை சலாவுதீன் ரப்பானி தலமையில் உருவாக்கினர். ஆனால் மற்றொரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1996 வரை தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது…

மிகுதி அடுத்த பதிவில்…

(நன்றி: சிவா முருகுப்பிள்ளை – அவருடைய முகநூலில் இருந்து)

24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 600 பேரரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ள அமெரிக்கா – தலிபான்கள் விடுத்துள்ள கோரிக்கை !

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-ந்திகதி முதல், அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 ஆயிரம்பேர் அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களை வெளியேற்றும் பணியை 31-ந்திகதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் கூறிவிட்டதால், மீட்புப்பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.

இதே நேரம் , ஆப்கானிஸ்தானில் இருந்து திறமையானவர்களை வெளியேற்றக் கூடாது என அமெரிக்காவை தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,

பொது மன்னிப்பை ஏற்கனவே அறிவித்துள்ளதால், எந்த நபரையும் குறிவைக்கவில்லை.  மேலும் ஆப்கானிஸ்தான் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் நன்கு படித்தவர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜபிஹூல்லா அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திய உலக வங்கி !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை முழு உலகமுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தலிபான்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை கவலை அளிப்பதாகவும் உலக வங்கி  கூறியுள்ளது.

“பும்ரா என்னை ஆட்டமிழக்கச்செய்ய பந்து வீசியதாக தெரியவில்லை.” – ஜேம்ஸ் ஆண்டர்சன்

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ரத் பும்ரா தன்னை ஆட்டமிழக்கச் செய்வதை விட, தனக்கு ஷார்ட் பால்களைப் போடுவதிலேயே முனைப்பாக இருந்தார் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடக்கிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா உள்ளிட்ட இந்திய அணியினரும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடியும் வரை வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் இருந்தனர்.

இந்த போட்டியில் தனது ஆட்டத்தைப் பற்றி பேசியிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்,

“நான் வந்த முதல் பந்தே எனக்கு எதுவும் புரியவில்லை ஏனென்றால் அதற்கு முன் ஆட்டமிழந்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களுமே களத்தில் பந்து நிதானமாக வருவதாகவே சொன்னார்கள். மேலும் நான் ஆட வரும்போது ஜோ ரூட்டும், பும்ரா வழக்கத்தை விட நிதானமாக வீசுவதாகவே சொன்னார். ஆனால் முதல் பந்தே எனக்கு 90 மைல் வேகத்தில் வந்தது. ஒன்றும் புரியவில்லை.

இதுவரை என் கிரிக்கெட் வாழ்க்கையில் நினைக்காத ஒரு விஷயத்தை அப்போது நான் நினைத்தேன். பும்ரா நான் ஆட்டமிழக்க வேண்டுமென்று பந்துவீசியதாகவே தெரியவில்லை. ஷார்ட் பால் வீசுவதிலேயே முனைப்பாக இருந்தார். ஒரு ஓவரில் பல நோபால்கள் வீசி 12 பால்களை வரை கூட போட்டார். இரண்டு பந்துகளை மட்டுமே ஸ்டம்பை நோக்கி வீசினார். அதனால் நான் ஆடிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டி முடிந்ததும் இதில் நடந்த வார்த்தை சீண்டல் பற்றிய கேள்வி எழுந்தபோது, எதிரணி அப்படிப் பேச ஆரம்பித்தால் தங்களுக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும் என இந்திய அணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பதிலளித்தார்.

இதே நேரம்  ரவிச்சந்திரன் அஸ்வினுடன் யூடியூப் சேனலில் உரையாடிய இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் , ஸ்ரீதர் கூறிய போது “ஆட்டம் முடிந்து, இரு அணி வீரர்களும் ஓய்வறைக்குத் திரும்பியபோது பும்ரா, ஆண்டர்சன் முதுகில் செல்லமாகத் தட்டி, ‘வேண்டுமென்றே செய்யவில்லை, மன்னியுங்கள் ’ எனத் தெரிவித்தார். ஆனால், ஆண்டர்சன் அதைக் கண்டுகொல்லாமல் அலட்சியப்படுத்தி ஒதுக்கினார். அதன்பிறகுதான், இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமானார்கள். அதன் விளைவைத்தான் 5ஆவது நாள் ஆட்டத்தில் பார்த்தோம்” எனக் கூறியமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

“ஆப்கானிஸ்தானை பாதுகாப்பது அமெரிக்காவின் கடமை .” – அமெரிக்க துணை ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது.
இதற்கிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், ஆப்கன் நிலவரம் குறித்து அவர் கூறுகையில்,
அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரை அடுத்து அவர் வியட்நாம் சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

“தலிபான்களுடன் போருக்கு தயார்.” – எதிர்க்கத்துணியும் பஞ்ச்ஷிர் !

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். இவர் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவராகவுள்ளார்.

இந்நிலையில் தலிபான்களுடன் சண்டையிடத் தயார் என்று அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அகமத் மசூத் கூறும்போது, “பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய வழி என்பதைத் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும் தலிபான்களுடனான போருக்கு நாங்கள் தயார். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

 

தமிழருக்காக குரல் கொடுத்த மங்கள இன்று காலமானார்!!!

மங்கள சமரவீர இன்று காலமானார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருந்த மங்கள சமரவீர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இலங்கையில் கொரோனாவிற்கு காலமான முக்கியமானவர் இவர். இவர் சென்ற வாரமே காலமானதாக தவறான செய்தி ஒன்றும் வெளியாகி இருந்தது.

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வந்த மங்கள இலங்கையின் இரு பிரதான கட்சிகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து 2020இல் கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். இவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையை ஐநா மனித உரிமை சாசன உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட வைத்ததன் மூலம், போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கிடுக்குப்பிடிக்குள் இலங்கை சிக்கியது. அதனால் மங்கள சமரவீர நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்ற அவப் பெயருக்கு மகங்கள உள்ளானார்.

மங்கள அமெரிக்க தெற்காசிய பிரிவின் பொறுப்பாளர் சமந்த பவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டு இருந்தது. சமந்தா பவருடன் மங்களவுக்கு இருந்த நெருக்கம் தற்போதைய அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

மங்கள சமரவீர கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணப்பாட்டை உடையவர். அதனால் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருந்தார். அவர் யுத்தத்திற்குப் பின் தமிழ் – சிங்கள சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி தமிழ் சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தேசபிமான இயக்கம் என்பதனை உருவாக்கி இலங்கையின் இரு பிரதான தேசியக் கட்சிகளும் – ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இறுதியாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தான் பெருமைப்படுகின்ற இரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 1981 மே 31 இரவு எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை 1990இல் சந்திரிகா குமாரதுங்கவின் சமாதான முயற்சியால், வெண்தாமரை இயக்கத்தினூடாக புனரமைத்து தமிழ் மக்களிடம் கையளிக்க உதவியது எனக் குறிப்பிட்டார். அடுத்தது இலங்கை தொலைத்தொடர்பாடலை தனியார் மயப்படுத்தி தொலைபேசி இணைப்பை அனைவரும் பெறும்வகையில் செய்தது என்றும் கூறினார்.

மங்கள சமரவீர வெளிப்படையாக பேசுவதாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.