இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.
இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
முன்னதாக, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர்.26-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமிக்ரோன் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகி வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஒமிக்ரோன் முந்தியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரோன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது எங்களின் நம்பிக்கை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ரோசன்னா பர்னார்ட் தெரிவித்துள்ளார். முக கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டன. திங்கட்கிழமை முதல், அரசின் மற்றொரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட சாத்தியமான வழிகாட்டுதல்கள் தொடங்குகிறது. அடுத்த வாரம் முதல், பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பரவல் என்னவோ இயற்கைக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இன்று ஈராண்டுகள் கடந்தும் கொரோனாவை மருத்துவ உலகம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது இயற்கையை மீறிய சக்தியால் அல்ல. சில மனிதர்களை அல்ல பண முதலைகளை ஆட்டி வைக்கின்ற லாபம் என்கின்ற போதையால். இதனை விளக்குவது ‘குவான்டம் மக்கனிக்ஸ்’ அளவுக்கு ஒன்றும் பெரிய விசயம் அல்ல. பாலர் வகுப்புக்குச் செல்லும் பிள்ளைக்கும் விளங்கப்படுத்தக் கூடிய அடிப்படைக் கணிதம். ஆனால் என்னவோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமையில் உள்ள பிரித்தானிய கொன்சவேடிவ் அரசுக்கு மட்டும் ஏறுதில்லை.
பிரித்தானிய மண்ணில் உலகப் பிரசித்திபெற்ற ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனுசரணையோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அஸ்ராசெனிக்கா – AztaZeneca வால் தயாரிக்கப்பட்ட வக்சினே முதன் முதலில் மேற்கு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட வக்சீன். இந்த வக்சீன் தயாரிப்பில் பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் பலரும் இந்த பரீட்சார்த்த பரிசோதணைகளுக்கு மனமுவந்து தங்களை ஒப்படைத்தனர். அதே போல் அமெரிக்க நிறுவனமான பைசர் – Pfizer ஜேர்மனியின் பயோன்ரெக் BioNTech நிறுவனத்தோடு சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான வக்சீனை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு பொதுப்பணத்தை குவித்திருந்தன.
அஸ்ராசெனிகா பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கவும் சில வாரங்களிலேயே பைசர் வக்சீனை அங்கீகரித்தது. பிரித்தானியாவும் பைசர் வக்சீனை அங்கீகரித்தது. ஆனால் இன்று வரை அமெரிக்கா அஸ்ராசெனிக்கா வக்சீனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரித்தானியாவோ பைசருடைய பூஸ்ரர் – booster வக்சீனைத் துரிதப்படுத்தி வருகின்றது.
மருத்துவ செலவீனங்களின் அடிப்படையில் இந்த வக்சீன்களின் அடிப்படையான எம்ஆர்என்ஏ வக்சீனை உருவாக்குவதற்கு அடிப்படையான செலவு 76 பென்ஸ் – 76 pence (£0.76) (ஒரு வக்சீனைத் தயாரிக்க ஒரு பவுண்டிலும் பார்க்க குறைவான செலவு) என செல்பீல் பல்கலைக்கழக மருத்துவ வக்சீன் ஆய்வாளர் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். இதனை அஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. இதன் விலை மிகவும் கண்ணியமானது. இவ்வாறான வக்சீன்களை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் பரிசோதணைகள் மற்றும் அவற்றை சேமிப்பது, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வது போன்ற போக்குவரத்து என அதற்கு மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனங்கள் இருக்கும். தயாரிக்கும் வக்சீன்களின் எண்ணிக்கை கூடக் கூட ஒரு வக்சீனுக்கான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறைந்து செல்லும். இதனையே எக்ககொமிஸ் ஒப் ஸ்கேல் என்பார்கள். ஒரு பொருளை பெரும்தொகையில் உற்பத்தி செய்கின்ற போது மேலதிகமான நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் குறையும்.
ஆஸ்ராசெனிக்கா மூன்று பவுண்களுக்கு விற்பனை செய்யும் வக்சீனை பைசர் கடந்த ஆண்டு எட்டுப் பவுண்களுக்கு விற்பனை செய்தது. இந்த ஆண்டு இந்த பூஸ்ரர் வக்சீனை 22 பவுண்களுக்கு விற்பனை செய்கின்றது. முன்னைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பைசர் தனது வருமானத்தை 7 பில்லியன் அமெரிக்க டொலராக 134 வீதத்தால் அதிகரித்து இருக்கின்றது. செல்வந்த நாடுகளுக்கு மட்டும் தனது வக்சீன்களை விற்பனை செய்து லாபமீட்டும் பைசர் நிறுவனம் உலகின் ஏனைய பாகங்களுக்கு வெறும் கண்துடைப்பிற்கு ஒரு சில மில்லியன் வக்சீன்களையே வழங்க முன்வந்திருந்தது. அதுவும் உடனடியாக வழங்கப்படவில்லை.
மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆரம்பம் முதல் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக குறிப்பிட்டு வருகின்றது. அதாவது எல்லா நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒரு கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தற்போது பரவி வருகின்ற ‘ஒமிகுரொன் – Omicron கொரோனா அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, உலகிலேயே மிகக் கூடுதலான வக்சீன் போடப்பட்ட சனத்தொகையுடைய, ஒரு தீவுமான பிரித்தானியாவில் ஒமிகுரோன் வேகமாகப் பரவி வருகின்றது. காரணம் உலகின் ஏனைய பாகங்களில் மக்கள் தொகையில் ஓரிருவீதமானோருக்கு கூட வக்சீன் கிடைக்கவில்லை. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மருத்துவ முதலைகளான இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதனை எப்படி தயாரிப்பது என்ற தொழில்நுட்பத்தை வழங்க மறுக்கின்றன.
பொதுமக்களின் வரிப்பணத்தை வழங்கி அரசுகள் ஆய்வுகளை மேற்கொள்ள உதவின, மக்கள் தங்களை பரிசோதணைகளுக்கு ஒப்படைத்திருந்தனர். ஆனால் லாபத்தை சுரட்டுவதற்காக பைசர் போன்ற நிறுவனங்கள் கொரோனாவை முற்றாக அழிந்து போகவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என பிரித்தானியாவின் நம்பகமான தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 channel 4, டிசம்பர் 10 டிஸ்பச்சஸ் – dispatches என்ற ஆவணப்படத்தினூடாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பைசர் ஏனைய வக்சீன்களின் தரத்தை குறிப்பாக அஸ்ராசெனிக்காவின் தரத்தை திட்டமிட்டமுறையில் மழுங்கடிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு துணை நிறுவனத்தை பயன்படுத்தி வருகின்றது. அஸ்ராசெனிகா பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தொனியிலும் புற்றுநோயை உருவாக்கும் என்ற தொனியிலும் இந்த பிரச்சாரங்கள் சுகாதார அமைப்புகள் மத்தியில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த பிரச்சாரங்களினால் நான் வக்சீன் போடச் சென்றபோது அஸ்ராசெனிக்காவை போடுவதில் என்னையும் அறியாதவொரு பயம் இருந்தது. ஆனால் பல லட்சம் மில்லியன் பேர் தற்போது அஸ்ராசெனிக்கா வக்சீனைப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் பைசர் நிறுவனம் பரிசோதணை காலத்தில் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதுடன் அவற்றை வெளிக்கொணர்ந்த ஒருவரை வேலை நீக்கம் செய்திருந்தது. தற்போதைய நிலையில் இவ்விரு வக்சீன்களுமே விலையைத் தவிர நோய்த்தடுப்பை பொறுத்தவரை ஒரே மாதிரியான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளன.
மேலும் பைசருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பைசருக்கு எதிராக வழக்குகள் வந்தால் அவை பிரித்தானியாவில் நடத்தப்பட முடியாது என்றும் அவைபற்றி வெளியே தெரியப்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும் சனல் 4 அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறான மோசமான உடன்படிக்கைகள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ்ஜோன்ஸனின் ஆட்சியில் மட்டுமே நடக்கின்றது. வேறு எந்தவொரு நாடும் இவ்வான அதிகூடிய விலையில் வக்சீனை வாங்கவோ மோசமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ இல்லை.
இந்த லாபம் மீதான காதல் ஒன்றும் பல்தேசியக் கொம்பனிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல. கண் மருத்துவப் பரிசோதகராக இருக்கின்ற இங்கிலாந்தில் வாழும் மௌலியா செல்வராஜா இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்தி வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். இவ்வாறான ஒரு சிகிச்சை முகாம் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவில் இறுதியில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஒரு முகாமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு யாரும் அல்ல யாழ்ப்பாணத்தில் தனியார் கண் சிகிச்சை நிலையங்களை நடாத்தி வந்த தமிழ் கண்மருத்துவர்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலுமே லாபமே நோக்கமாகின்ற போது அவை பல்வேறு அநியாயங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.
இன்று புற்றுநோய் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தப் புற்றுநோயை ஏற்படுத்துவதில் புகைத்தல் முக்கிய காரணியாக இருக்கின்றது. சிகரெட் பாவனைக்கு வந்த காலங்களிலேயே அது உணரப்பட்டும் இருந்தது. ஆனால் அது உயிராபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் அதன் விற்பனை முடக்கிவிடப்பட்டு பல லட்சம் பேர் புகைத்தலுக்கு அடிமையாக்கப்பட்டனர். லாபத்திற்காக.
பாலம் கட்டும் பொறியியலாளர்கள் ஏன் கட்டுமானத்தில் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதில்லை? 2017இல் கிறீன்பெல் ரவர் – Greenfell Tower எரிந்து 80 வரையான குடியானவர்கள் கொல்லப்பட என்ன காரணம்? தீப்பிடிக்காத பொருட்களில் அமைக்கப்படவேண்டிய க்ளேடிங் – cladding கிங்கு பதிலாக இலகுவில் தீப்பற்றக்கூடிய க்ளேடிங் – cladding கை பயன்படுத்தியது. ஏன்? உணவுப் பொருட்களில் கலப்படம் எதற்கு? உற்பத்தியைக் கூட்டினால் சுற்றாடல் மாசடையும் என்று தெரிந்தும் ஏன் ஆடம்பரப் பொருட்களை மிதமிஞ்சி உற்பத்தி செய்கின்றோம்?
மதுபானத்திற்கு பல லட்சம் பேர் அடிமையாகின்றனர். குடும்ப வன்முறையில் இருந்து தன்னுணர்வு இழப்பு என்று மரணத்திற்கும் இட்டுச்செல்கின்றது. ஆனால் குடிக்கும் தண்ணீரின் விலையிலும் பியரின் விலை குறைவாக இருக்கின்றது. ஏன்?
அவ்வளவு ஏன் இந்த சிற்றின்பங்கள் எல்லாவற்றையும் திறந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம் என்று எம் பெருமானின் சன்நிதானத்துக்கு போனால் ஜயா அர்சினைக் ரிக்கற் கேட்கின்றார். ஏன்?
உலகின் மிகச் சிறந்த பொருளியல் சிந்தனையாளர்கள் அடம் சிமித் – கார்ள் மார்கஸ். முற்றிலும் முரண்பட்ட பொருளியல் சிந்தனைகள். கைத்தொழில் புரட்சிக்கு வித்திட்ட காலகட்டத்தில் பிறந்த அடம் சிமித் ஒவ்வொரு மனிதனும் மற்றையவர்களைப் பற்றி எண்ணாமல் தனது நலனின் அடிப்படையில் மட்டும் செயற்பட்டால் எம்மை அறியாமலேயே மறைத்திருக்கின்ற கைகள் சமூகத்தை நேர்வழியில் இட்டுச்செல்லும் என்கிறார். அவரின் கருதுகோள் என்னவென்றால் சந்தைக்கு பொருட்களை கொண்டுவருபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு என்ன விலையை நிர்ணயித்தாலும் இறுதியில் அங்கு இயற்கையான சமநிலையொன்று கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது அதீத லாபம் வைத்து பொருட்களை ஒருவர் விற்றால் அவரிடம் இருந்து யாரும் பொருட்களை கொள்வனவு செய்ய மாட்டார்கள். மாறாக பொருட்களை மிகக்குறைவான விலைக்கு விற்றால் அப்படி விற்பவரால் செலவை ஈடுசெய்ய முடியாது. ஆகவே சந்தை எப்போதும் ஒரு சமநிலையைப் பேணும். அதனை கட்டுப்படுத்த வேண்டியதில்லை.
அடம் சிமித் சொன்னதை இவ்வாறும் எமது மொழியில் சொல்லலாம்: யார் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை, நான் லாபமீட்டினால் போதும் என்று ஒவ்வொருவரும் செயற்பட்டால் சந்தை இதையெல்லாம் சீராக்கி, சமநிலைக்கு கொண்டுவரும். நடக்கின்ற காரியமா?
ஆடம் சிமித் வாழ்ந்த காலத்துக்கு நூறாண்டுகளுக்குப் பின் கைத்தொழில் புரட்சி முடிவுக் காலகட்டத்தில் பிறந்த கார்ள் மார்க்ஸ் லாபத்தின் கொடுமைகளை உணர்கின்றார். வறுமையில் பிறந்து வறுமையில் வாழ்ந்து வறுமையில் இறந்தவர் அதன் கொடுமையை துல்லியமாக எதிர்வு கூறியும் உள்ளார். அடம் சிமித் இன் மாயக் கைகள் எதையும் வழிநடத்தாது என்பதையும் லாபம் தனிநபர்களை நோக்கி குவியும் என்பதையும் அந்த லாபம் உற்பத்தி சாதனங்களை பெருக்கி அந்த சந்தையையே கட்டுப்படுத்தும் எனபதையும் வியாபார நிறுவனங்களின் வளர்ச்சியை முளையிலேயே அறிந்து இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கார்ள் மார்ஸ் அன்றே பைசர் போன்ற நிறுவனங்களின் கேடித்தனங்களைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
இவ்வாறான நிறுவனங்கள் லாபத்திற்காக எதனையும் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தார். இன்று பைசர் தனது லாபத்திற்காக உலக மக்களின் உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. பைசர் மட்டுமல்ல சில குட்டி ஜம்பவான்களும் தான்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 19
தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.
அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.
தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?
அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.
புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.
அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.
மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.
தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.
அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.
தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.
அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.
தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…
அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.
தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக
அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.
தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.
அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.
தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?
அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.
தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?
அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.
அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.
தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.
இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.
தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?
அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.
இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.
தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.
அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.
பசியும் வன்முறையும் இல்லாத தன்னிறைவான வாழ்வு எமக்கு வேண்டும். வன்முறைகளை நிறுத்துவதற்கு அரசினதும் அரசியல் ரீதியானதுமான முன்னெடுப்பு உடனடியாக எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இன்றைய தினம் மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகளால் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினுடைய ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற இப் பேரணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்றது.பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரத்தின் ஒரு பகுதியாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இப் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் பறைமேளம் அடித்து, நீளப் பேரணியாகச் சென்றனர்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வார நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் உணவுப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதுடன் உணவு விநியோகத்தினையும் இலகுபடுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பசி பட்டினியிலிருந்து மக்களை விடுவிக்க சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை அரசு உடனடியான அமுல்படுத்த வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத உள்ளுர்வளப் பொருளாதார முறைமையை பிரதானமாக்கும் நடைமுறைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பாதைகளை பேரணியில் சென்றவர்கள் ஏந்தி சென்றனர். இந் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்
பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரியந்த குமார கொலை தொடர்பில் நேற்று மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சந்தேக நபர்கள் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் காவல்துறையின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பிரியந்தகுமார பணியாற்றிய ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 345 ஊழியர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் தாக்கிக் கொலைசெய்யட்டு தீயிடப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம், கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது இறுதிக் கிரியை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் அந்த நாட்டு நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
16 வருடங்கள் அந்த நாட்டு அதிபராக கடமையாற்றிய எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வருகின்றது. இந்தநிலையில் 63 வயதான ஜேர்மனின் புதிய அதிபருக்கு அந்த நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.
அவர் முன்னாள் அதிபர் எங்கலா மெர்கர்ஸின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக கடமையாற்றியிருந்தார்.
நாடாளுமன்றில் அவருக்கு 395 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.