2021

2021

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் !

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதுபற்றியும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.

இந்த தருணத்தில் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (வயது 66) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்து உள்ளார்.

இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொண்டார். (இந்தியாவில் இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.)

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ஜெர்மனி அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில்தான் அவர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தற்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகியும் (73) முதலில் ஒரு கொரோனா தடுப்பூசியையும், இரண்டாவது மற்றொரு தடுப்பூசியையும் போடுவதை ஆதரிக்கிறார். இவரும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் போலவே முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக இவர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் என்று இத்தாலியின் ‘கோரியேர் டெல்லா செரா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை முதலிலும், 2-வது டோசாக பைசர் தடுப்பூசியையும் போட்டுக்கொள்கிறபோது அது பெரியவர்களிடம் லேசான அல்லது மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சில நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசியின் வினியோக பிரச்சினைகள் காரணமாக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்படுவதை கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன்.” – ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதி !

ஈரான் அதிபா் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றவர்  தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி.  ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகவுள்ளள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றியை தொடர்ந்து டெஹ்ரானில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது,
“இல்லை. ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன். ஈரானுக்கு எதிரான அனைத்து அடக்குமுறை தடைகளையும் நீக்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மூடப்படுகின்றது ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி !

ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சனிக்கிழமையன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகம் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சொத்துக்கள் 18 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பின்னர் முடக்கப்பட்டன. அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக அதிபருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் ஆப்பிள் டெய்லி முன்னதாக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் வெளியீட்டை மூடலாமா வேண்டாமா என்று முடிவினை அறிவிப்பதாக கூறியது.

எனினும் அதற்கு முன்னதாகவே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி !

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்டுள்ள  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  இன்றுவரை புதிய பரிமாணங்களில் அதனுடைய வேட்டை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா-வைரஸ் பாதிப்பில் இருந்து 16.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா-வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை – பிலிப்பைன்சில் அதிரடி அறிவிப்பு !

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வரை 10 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 23 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு 4 கோடி டோஸ் பைசர் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 கோடி பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் தொகையில் வெறும் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே  நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் !

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு (வயது 63) எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
சுவீடன் நாட்டில் எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் ஸ்டீபன் லோபன் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், லோபன் பதவி விலகினால், யார் தலைமையில் புதிய அரசாங்கத்தை சபாநாயகர் அமைப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தனது கட்சி ஸ்டீபன் லோபனுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், ஒருபோதும் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு அளிக்காது என இடதுசாரி கட்சி தலைவர் நூசி தாட்கோஸ்டர் தெரிவித்தார்.
சுவீடன் தற்போது புதிய அரசாங்கம், அல்லது இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றாலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே பொறுப்பில் இருக்கும்.

நீக்கப்பட்ட பயணத்தடையும் – மதுபானக்கடைகளிலும் – அடகு நிலையங்களிலும் அடுத்தவன் பற்றி கொஞ்சமும் சிந்திக்காது குவிந்து நின்ற சுயநல மக்கள் கூட்டமும் !

இலங்கையில் கொரோனா பரவல் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தப்படாத நிலையில் இன்றைய தினம் நாடு திறக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புற்றீசல்களை போல கொரோனா – சமூக இடைவெளி எதைப்பற்றியும் சிந்திக்காது பொருட்களை கொள்வனவு செய்வதில் அதீத ஆர்வம் காட்டியு்ளனர்.

Gallery

இதற்கிடையில் அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் – அரசு கொரோனா விடயத்தில் தோற்றுவிட்டதாகவும் வெட்டிப்பேச்சு பேசிய நூற்றுக்கணக்கானோருடைய சமூகப்பொறுப்பு தெளிவாக இன்றைய தினம் தெரிந்தது. முக்கியமாக மதுபானக்கடைகளிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. வடக்கின் முக்கியமான நகரங்களில் அளவுக்கதிகமான மதுபானக்கொள்வனவில் ஈடுபட்டோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டும் – எச்சரிக்கப்பட்டுமுள்ளனர்.  இதெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய விடயங்கள் அல்ல. வெட்கித்தலை குனிய வேண்டிய விடயங்கள்.  ஆனால் நமது இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்களை பதிவிட்டு நகைப்பாக கடந்து செல்வது வேதனை தருகின்றது.

இது ஒருபக்கமிருக்க நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பயணத்தடை முழுமையாக அமுலில் இருந்த காலமான  ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மொத்தம் 53 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முக்கிய குறிப்பு நாட்டை திறந்து விட்டிருந்த காலங்களில் கூட நாளொன்றுக்கு சராசரியாக 1000 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அரசாங்கத்திடம் வேறு வழியில்லை. திறைசேரி வெறுமையாகிவிட்டது. நாடு முழுக்க கடனில் தான் ஓடுகின்றது என அரசு தரப்பு அறிவித்தாகி விட்டது. இது நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலம்.  இன்றைய தினமும் சரி – பயணக்கட்டுப்பாட்டு காலங்களிலும் சரி கடைகளில் அலை மோதிய கூட்டம் பணம் உள்ள கூட்டம். அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பண பலமும் உள்ளது – பொருளாதார வலிமையும் உள்ளது.

ஆனால் நாட்கூலிகளை நினைந்து பாருங்கள். திறந்திருந்தால் தான் அவர்கள் தங்களுக்காக ஏதாவது செய்ய முடியும். அதற்கு நாடு முழுமையாக இயல்பான நிலைக்கு திரும்புவது அவசியம். சற்று நாம் பொறுப்புடன் செயற்பட பழக்கப்படுத்திக்கொள்வோம். இருப்பவர்கள் தான் மேலும் மேலும் பொருடகளை வாங்கிக்குவித்து கொரோனாவை பரப்புகின்றோம். கொரோனா  தொகை அதிகரிக்க அதிகரிக்க நாடு முடங்கும். நாடு முடங்கினால் உள்ளவன் வாழ்வான். இல்லாதவன் ..? என்ன செய்வான்..! சற்று சமூக சிந்தனையுடன் செயலாற்றுங்கள்.

இந்த பயணத்தடை காலங்களில் கூட வெளியே சுற்றித்திரிந்தவர்கள்  இருக்கக்கூடிய வசதிபடைத்தவர்கள் தான். இல்லாதவன் தான் வீட்டிலே படுத்துக்கிடந்து என்ன செய்வதென தெரியாது இல்லாமையை நினைந்து நொந்துகொணடிருந்தவன். அவன் வெளியே வந்தால் கொரோனா பயம் ஒருபக்கம் –  பொலிஸார் – இராணுவத்தினர் பயம் இன்னொரு பக்கம்.  பாவம் வேறு வழி தெரியாது அவர்கள் போராட்டத்தில் இறங்கி வாய்விட்டு உணவு கேட்கும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டோம்.  புரிந்து கொள்ளுங்கள்.

 

குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கொரோனாவால் சாவது எல்லாம் ஒரு விடயமேயில்லை –  நம் கூடவே வாழும் ஒருவன் பசியால் இறந்தான் என்றால் அது போல வேதனையான விடயம் வேறெதுவும் இல்லை. அந்தப்பாவத்துக்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நாடற்ற தமிழர்கள்: கைவிடப்பட்ட தமிழர்களும் அவர்களைக் கைகழுவிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் !

“எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்” என்று கோரி தமிழ் நாட்டின் திருச்சி மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 60 வரையான இலங்கைத் தமிழ் ஆண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வுண்ணாவிரதங்களை பார்வையிட வந்த இந்திய அதிகாரிகளிடம், ‘மனிதாபிமானத்தோடும் கருணை உள்ளத்தோடும் நடந்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டிக்கொண்ட காணொளிப்பதிவு மனதை உருக்குவதாக அமைந்தது.

‘எங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் தான் சொல்கின்றோமே தவிர, எந்தவகையிலும் உங்களோடு சண்டையிடவில்லை, உங்களை எதிர்க்கவும் இல்லை’ என்று மன்றாடி தங்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர். அங்கிருந்த உண்ணாவிரதிகளில் ஒருவர் கண்ணீரோடும் அடக்க முடியாத வேதனையோடும், “இப்படி எங்களை துன்புறுத்துவதற்குப் பதிலாக விச ஊசியயைப் போட்டு எங்களைக் கொல்லுங்கள்” எனக் கேட்டுக்கொண்டமை நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

யார் இந்த முகாம்களில், சிறப்பு முகாமில் உள்ளவர்கள்? அதற்கான விடை தெரிய வேண்டுமானால் காலச்சக்கரத்தினை ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி நகர்த்த வேண்டும்.

– 1 –

1970க்களின் முற்பகுதியில் தமிழ் தேசியக் கட்சிகளின்: தமிழரசுக் கட்சி (ஆங்கிலத்தில் Federal Party – சமத்துவக் கட்சி) இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி – மலையகத் தமிழர்களின் வாக்குரிமையயைப் பறிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் துணை போன தமிழ் காங்கிரஸ். அதாவது இன்றைய கஜேந்திரகுமாரின் தாத்தாவின் கட்சி. இவ்விரு கட்சி முக்கியஸ்தர்கள் தோல்வியைத் தழுவினர். இவர்களுக்கு ஒரு’பஞ்ச் ஸ்டேட்மன்ற்’ தேவைப்பட்டது. அதனால் உருவாக்கக்கப்பட்டது தான் ‘தமிழீழம்’ என்ற கோரிக்கை.

1976 வட்டுக்கோட்டையின் சிறு கிராமம் ஆன பன்னாகத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என அறியப்பட்ட தமிழீழப் பிரகடனம் தமிழர் விடுதலைக் கூட்டணியால் (தமிழரசுக்கட்சி சக தமிழ் காங்கிரஸ்) முன்வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே 1977 தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘பஞ் ஸ்டேட்மன்ற்’ தமிழீழம் – வாக்குகளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு குவித்தது.

தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டி ஆட்சியமைத்து. இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையை; ஐக்கிய தேசியக் கட்சி நேரெதிராகத் திருப்பி, அமெரிக்க சார்பு திறந்த பொருளாதாரக் கொள்ளைக்கு, நாட்டின் சந்தையைத் திறந்தது. தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைகளால் வடக்கும் கிழக்கும் கூடப் பலன்பெற்றன. விவசாயிகள் செழிப்புப் பெற்றனர். தமிழ் சினிமா முளைவிட்டது. வன்னியில் தமிழ் குடியேற்றங்கள் பல உருவாகின. இப்போது அவையனைத்தும் ஸ்தம்பித்தது.

இடதுசாரிகளுடனான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் காலத்தில்; இந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. பனிப்போரின் உச்சத்தில் உலகம், இருந்த காலகட்டம். இந்தியா அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்த போதும், ரஸ்யசோசலிசக் குடியரசோடு நெருக்கமாக இருந்த காலங்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தன்னை மீறி இலங்கை நடந்துகொள்வதை பொறுக்காத இந்தியாவுக்கு, ‘தமிழீழ பிரகடனம்’ நல்ல வாய்ப்பாக அமைந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலுக்காக விட்ட ‘தமிழீழ பிரகடனத்தை’; இந்தியா, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனாவிற்கும்; பாடம் புகட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த உள்ளூர், சர்வதேச அரசியல் எதனையும் புரிந்துகொள்ளும் அரசியல், அறிவும் அனுபவமும் அற்ற அப்பாவித் தமிழ் இளைஞர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தமிழீழக் கனவோடு போராடப் புறப்பட்டனர். இவர்களுக்கு இந்தியா சகல வசதிகளையும்: உணவு, உறைவிடம், இராணுவப் பயிற்சி, ஆயுதம் -என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படி போராட வந்தவர்களுக்கு தலைமைகொடுக்க அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் நெருங்கி இருந்த பல இளைஞர்கள் போட்டியிட்டனர். பிரபாகரனும் அவர்களில் ஒருவர். கடைசியில் பிரபாகரன் தமிழீழத்தின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் முதல், இறுதியில் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளியது வரலாறு. இறுதியில் 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அவர் சரணடைந்ததும், சுட்டுக்கொல்லப்பட்டதும், அவருக்கு ஒரு நினைவுக் கூட்டம் கூட இதுவரை செய்யப்படாததும் கூட வரலாறாகிவிட்டது.

இன்று இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றேன் – யூன் 19, இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாக யூன் 19 1990 அன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உட்பட அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈவிரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்ட தினம். இத்தாக்குதலில் இருந்து தப்பிய லாபிர் என்றழைக்கப்படும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த, தற்போது பிரித்தானியாவில் பேர்மிங்ஹாம் பிரதேசத்தில் வாழும் பரமானந்தன் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், உள்ளாடையோடு மதில் பாய்ந்து தப்பியோடிய அன்றைய நினைவுகள் இன்றும் எப்படி உயிர் தப்பினேன் என பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்தார். பரந்தாமனின் குடும்பத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

அதனையடுத்து ராஜீவ் காந்தி மே 21, 1991இல் தமிழ்நாட்டில் சிறிபெரம்புத்தூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய போராட்டத்தின் பின் தளமாக மட்டும் பாவிக்கவில்லை, பல குற்றச்செயல்களில், அம்மண்ணில் ஈடுபட்டு இருந்தனர்.

1982 மே 19 இல் ராகவன் என்று அழைக்கப்படும் சின்னையா ராஜேஸ்குமாரும் வே.பிரபாகரனும் பாண்டி பஜாரில் நடத்திய துப்பாக்கிச்சூடு பரவலாக அறியப்பட்டதொன்று. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் முகுந்தன் என்றழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது. சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டடு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். தற்போது லண்டனில் வாழும் சின்னையா ராஜேஸ்குமாரின் இந்த வழக்குப் பதிவுகள் காரணமாக அவர் நீண்டகாலமாக இந்தியா பயணிக்கத் தடை இருந்ததும், தற்போது அத்தடைகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

1977 காலவரமும் 1983 கலவரமும் தமிழ் தேசியக் கட்சிகளின் தோழமைக் கட்சியாக எப்போதும் இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் மேலும் மேலும் ‘தமிழீழக் கனவு’ நோக்கித் தள்ளப்பட்டனர். இந்தியாவின் உதவியோடு வடக்கில் ஆயுதநடவடிக்கைகள் அதிகரித்தன.

1983 இன் இறுதிப் பகுதியில் இருந்து அல்லது 1984இன் முற்பகுதியில் இருந்து கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் இலங்கையயை விட்டு வெளியேறத் தீர்மானித்தனர். இவ்வாறு இலங்கையயை விட்டு வெளியேறுபவர்கள் மன்னார், பேசாலையில் இருந்து புறப்பட்டு தமிழ் நாட்டில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியயை வந்தடைவது வழக்கம் என்கிறார், இவ்வாறு வெளியேறிய குடும்பஸ்தர் போல் பெர்னான்டஸ். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியயைச் சேர்ந்த இவர், தான் சில தடவைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்று பலரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்ததாகத் தெரிவித்தார். முதற்தடவை ராமேஸ்வரம் வந்தபோது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘முதல் மரியாதை’ திரைக்கு வந்திருந்தாகக் குறிப்பிட்ட அவர் அன்று அப்படத்தை நிலத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை தேசம்நெற் உடன் பகிர்ந்துகொண்டார். மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் மிகக் குறுகிய தூரத்தில் இருந்ததால் இக்கடல்வழிப் பாதையே பெரிதும் பாதுகாப்பானதாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாதகல் கடல்வழிப் பாதையினூடாக போராளிகள் பயணிப்பது வழமையாக இருந்தது. வல்வட்டித்துரை கடல்வழிப்பாதை வணிக நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்று விளங்கியது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மீனவர்கள் வந்து செல்வது ஐரோப்பிய நாடுகளுக்குள் இருப்பவர்கள் அயல்நாட்டுக்கு சென்று வருவது போன்று தடைகளற்ற பயணமாக அந்த நாட்களில் இருந்தது. இலங்கையில் இருந்து படம்பார்க்க வள்ளங்களில் இளைஞர்கள் சென்று வரக்கூடிய காலங்கள் அவை.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இரணைத் தீவில் இருந்தும் பெரும்தொகையில் பலர் தமிழகம் சென்றுள்ளனர். மலையகத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி குடும்த்தினர் 1983இல் கிளிநொச்சிக்கு புலம்பெயர்ந்தனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் பின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்நிலையும் மோதலும், மீண்டும் ஒரு யுத்தத்தை வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அதிலிருந்து தப்பிக்க அன்று சிறுமியாக இருந்த ஹம்சகௌரியின் பெற்றோரும் ஒரு சகோதரியும் சகோதரனும் தமிழகம் செல்ல தீர்மானித்து, இரணைத்தீவை அடைந்தனர். அங்கு இவர்களை ஏற்றிச் செல்ல தமிழக மீனவர்களின் படகுகள் காத்திருந்தன. அம்பாள் குளத்தைச் சேர்ந்த ஹம்சகௌரி, தங்களோடு அப்போது 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா செல்வதற்கு வந்திருந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தப் பயணத்தின் போது தங்களோடு வந்த படகுகளில் ஒன்றிணை நோக்கி கடற்படையினர் சுட்டதாகவும்; அப்போது அப்படகில் இருந்த ஒருவர் காயத்தோடு இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு, மரணமடைந்ததாகவும் தெரிவித்தார். இறந்தவரின் இளம் மனைவி கைக் குழந்தையோடு நிர்க்கதியாய் நின்ற காட்சி, 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது நினைவுகளைவிட்டு அகலவில்லை என்கிறார் ஹம்சகௌரி.

இவ்வாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் தமிழகம் நோக்கி புலம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் மலையகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் 100,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தற்போது வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் 65,000 வரையானவர்கள் 50க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர்.

இம்முகாம்கள் ஒரு கிராமம் போன்று அடிப்படைத் தேவைகளையும் சிறு வீடுகளையும் கொண்டிருக்கும். இவ்வீடுகளை அவர்களே தமக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிக்கொள்வார்கள். இவர்களுக்கு வாராவாரம் செலவுக்கு உதவிப்பணமும் வழங்கப்படும். அம்முகாமில் உள்ள காவலாளிகளின் அனுமதியோடு வெளியே சென்று சிறிய வேலைகளைச் செய்துவரவும் இவர்களுக்கு அனுமதியுண்டு.

ஆரம்ப காலங்களில் 1990க்கள் வரை இலங்கை அகதிகள் ஓரளவுக்கு வரவேற்கப்பட்டு கன்னியமாக நடத்தப்பட்டாதாகவே பலரும் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆரம்ப காலத்தில் விரும்புபவர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முகாமில் பதிந்துவிட்டு, வெளியே சென்று வாழ்வார்கள். 1990க்களின் பின் தமிழீழ விடுதலை இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்ததையடுத்து அனைவரும் முகாம்களுக்குள் முடக்கப்படும் நிலை உருவானது.

ஆயினும் முகாம்களுக்கு வெளியே தற்போது 35,000 பேர் வரை வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் ஓரளவு சுயாதீனமாக செயற்படக் கூடியதாக உள்ளது.

இந்த யுத்தகாலத்திற்கு முன்னதாகவும் ஒரு இடப்பெயர்வு நிகழ்ந்தது. அது முற்றிலும் மாறுபட்டது. இலங்கை அரசினால் (தமிழ் காங்கிரஸின் ஒத்துழைப்போடு) பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 1970க்களின் நடுப்பகுதிகளில் கடலூரில் குடியிருக்கின்றனர். இவர்களுடைய பகுதி சிலோன் காலனி என்றழைக்கப்படுகின்றது.

சிறப்பு முகாம்கள், இம்முகாம்களில் இருந்து முற்றிலும் வேறானது என்கிறார் தோழர் எஸ் பாலச்சந்திரன். முன்னாள் சிறப்புமுகாம் கைதியான தோழர் எஸ் பாலச்சந்திரன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘சிறப்பு முகாம்கள்’ முற்றாக மூடப்பட வேண்டும் என்றும்; அம்முகாம்கள் அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும்; அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல் காலவைரயறையற்று தடுத்து வைக்கப்படுவதாகவும்; குற்றத்திற்கு தண்டனை பெற்ற பின்னரும் கூட அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இவருடைய சிறப்பு முகாம் அனுபவப் பதிவுகள் தேசம் சஞ்சிகையில் வெளிவந்ததுடன் அவற்றை தொகுத்து தோழர் எஸ் பாலச்சந்திரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டும் உள்ளார். தற்போது லண்டனில் வாழும் எஸ் பாலச்சந்திரன், லண்டனில் வாழும் வேறும் சிறப்பு முகாம் கைதிகளையும் தேசம்நெற்க்கு அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்களில் ஒருவர் தேசம்நெற் உடன் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கையில், தன்னுடைய முதற் குழந்தையை கை விலங்கு அகற்றப்படாமல் விலங்கிடப்பட்ட கைகளோடு தூக்கியது இன்னமும் தனது நினைவில் நீங்காமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

அன்று பல நூறு பேர்களாக இருந்த சிறப்பு முகாமில் இன்று எண்ணிக்கை 70ற்கும் குறைவாகவே வந்துவிட்டதாகக் கூறும் தோழர் எஸ் பாலச்சந்திரன், சிறப்பு முகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது மத்திய அரசின் தேசிய பாதுகாப்பின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார். அது ஈழத்தமிழருக்கான ஒரு சிறைக்கட்டமைப்பாக இருந்த நிலைமாறி வேறு நாட்டவர்களும் சிறைவைக்கப்படுவதற்கான கட்டமைப்பாகவும் இருப்பதாகக் கூறினார்.

– 2 –

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் கடைப்பகுதிவரை இவர்கள் ஓரளவு கௌரவமாகவே நடத்தப்பட்டனர். ஆனால் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு முதல் சிறிபெரம்புத்தூர் ராஜீவ் படுகொலை வரை தமிழகத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை இயக்கங்களின் ஆயுத வன்முறைகள் இந்நிலையை முற்றாக மாற்றிவிட்டது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட யுத்த சூழலும் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈழவிடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம்களில் எவ்வித விசாரணைகளும் இன்றி அடைக்கப்பட்டனர். 1990 இல் ஈபிஆர்எல்எப் பத்மநாபா உட்பட்டவர்களை படுகொலை செய்தவர்களை அன்றைய திமுக அரசு தப்பிக்கவிட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையை வைத்து தமிழகத்தில் திமுக ஆட்சியை அதிமுக ஜெயலலிதா கவிழ்த்து, தமிழகத்தின் ஆட்சியயைக் கைப்பற்றினார். 2000க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் தமிழகத்தில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு ஓரளவு அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு இருந்தது. பட்டமேற்படிப்பை மேற்கொள்ள விவசாயத்துறையில் (40 இடங்கள்), பொறியியல் துறையில் (20 இடங்கள்), மருத்துவத்துறையில் (10 இடங்கள்) தமிழக அரசு சலுகை வழங்கி இருந்தது. ஆனால் இவை ஆரம்ப காலத்தில் அகதி முகாம்களில் இருந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் பயன்பெற்றவர்கள்: இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளும் அவர்களுடைய உறவுகளும் சகாக்களுமே.

ஆனால் இக்குற்றச்சாட்டை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் மகன் மருத்துவ கலாநிதி பகீரதன் மறுக்கின்றார். 1983க்களில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில், இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று படிப்பைத் தொடர முடியாத பலரும் தமிழகத்தில் கல்வியயைத் தொடர்ந்ததாகவும் அதிமுகா வின் செல்வி ஜெயலலிதா 1991இல் ஆட்சிக்கு வரும்வரை தமிழகத்தில் பல்கலைகழக இடஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாகவும் தெரிவிக்கின்றார். இக்காலகட்டங்களுக்கு முன் 1979இல் பல்மருத்துவ பிரிவுக்கு பரதெனியாவுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் மருத்துவத்துறையில் கல்வியைத் தொடர்வதற்காக 1981இல் இந்தியா சென்று தன் மருத்துவ கற்கையயை மேற்கொண்டதாக தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

காசி ஆனந்தனின் இரு பிள்ளைகள், கேர்ணல் கிட்டுவின் மூத்த சகோதரரான காந்திதாசனின் இரு பிள்ளைகள் என பலர் பயன்பெற்றனர். அது தவறானதும் அல்ல. ஆனால் ‘இந்த உதவிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கிடைக்கச் செய்யப்படவில்லை’ என்கிறார் அக்காலத்தில் தனது பிள்ளைகளை கற்பிக்க பல இன்னல்களை அனுபவித்த முன்னாள் போராளியாகி தமிழகத்தில் தஞ்சமடைந்த போல் பெர்னான்டஸ். ‘இந்த முகாம்களுக்கு எல்லாம் உதவுவதற்கு இந்திய மத்திய அரசாலும் தமிழக அரசாலும் அங்கிகரிக்க்பபட்ட ஒருவராகச் செயற்பட்ட சந்திரகாசனும் அவரது அமைப்பும் இத்தஞ்சமடைந்த தமிழர்களுக்கு இழைத்தது மிகப்பெரிய அநீதி’ எனத் தெரிவித்தார் போல் பெர்னான்டஸ்.

தமிழரசுக் கட்சியின் தலைவல் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் மகன்தான் சந்திரகாசன். சந்திரகாசன் செல்வநாயகம் இந்திய உளவுத்துறையின் நம்பிக்கைக்குரிய நபர் என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.

அப்போது புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு மிக நெருக்கமாகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த வெற்றிச்செல்வன் தனக்கும் இந்திய உளவுப்பிரிவுக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்தி தனது முகநூலில் பதிவிட்டு வருகின்றார். இது பற்றி அவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில்இ ‘நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் இடையே ஒரு தொடர்புப்பாலமாக இருந்தேன்’ எனத் தெரிவித்தார். இந்த உறவானது முற்றிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியலுடன் சம்பந்தப்பட்டதே அல்லாமல் அதனை இந்திய உளவுத்துறையின் முகவர் எனக் கொச்சைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். இவ்வாறான உளவுத்துறையுடனான தொடர்புகள் அவசியமானதும் தவிர்க்க முடியாததும் என வெற்றிச் செல்வன் தெரிவித்தார்.

தான் 1990க்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியது முதல் இந்திய உளவுத்துறையுடன் இருந்த தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தற்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய தொடரை எழுதிவரும் வெற்றிச்செல்வன்இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமாமகேஸ்வரனின் படுகொலையின் பின்னணியயை எழுத உள்ளதாகவும் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவரும் எனவும் தற்போதைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமைக்கு இது இடைஞ்சலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள விடுதலை அமைப்புகள் பற்றி வெளிவந்த நூல்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றி வெளிவந்த நூல்களே அதிகம். வெற்றிச்செல்வனின் பதிவுகள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. ஒரு காலத்தின் வரலாறு என்பது பல்வேறுபட்டவர்களினால்இ வெவ்வேறு கோணங்களில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. புதியதோர் உலகம் முதல் குமிழி வரை என்று நின்றுவிடாமல் இப்போது வெற்றிச்செல்வனின் சாட்சியமும் வெளிவருகின்றது. வெற்றிச்செல்வன் பெரும்பாலும் டெல்லியயை தளமாகக் கொண்டே இயங்கியவர். இவரது பதிவுகள் மீதான விமர்சனங்களும் நம்பகத்தன்மையும் வெவ்வேறு தரப்பினரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் நம்பகத்தன்மையை வரலாறு பதிவு செய்துகொள்ளும்.

ஒரு காலத்தில் இந்திய உளவுப் பிரிவுக்கு நெருக்கமாக இருப்பது சற்று கௌரவக் குறைச்சலாக கருதிய நிலைபோய்இ உளவுப் பிரிவின் முகவராக இருப்பது கௌரவம் என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் வந்தடைத்துள்ளனர். தற்போது பலரும் உளவுத்துறையினருடனான தங்கள் உறவுகளை வெளிப்படையாகவும் பெருமையாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். சந்திரகாசனில் இருந்து அடைக்கலநாதன் வரை இதனை கௌரவமாகவே கருதுகின்றனர். தற்போது பலருடைய முகச்சாயமும் கரைந்து போய்விட்டது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க:

இந்திய உளவுத்துறை தங்களுக்கு சேவையாற்றுவதற்கு தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சகாக்களுக்கும் சலுகைகளை அன்று முதல் வழங்கி வந்தது. இந்த வசதிகளும் சலுகைகளும் சாதாரண அகதி மக்களைச் சென்றடையவில்லை. இதனால் பயன்பெற்ற இலங்கைத் தமிழ், மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் இன்றும் இந்திய அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கின்றனரே அல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தயாரில்லாதவர்களாகவே உள்ளனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் அசையும் அசையாத சொத்துக்கள் இருப்பதும்; தொடர்ந்தும் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதும்; இவர்களுடைய இந்திய விசுவாசத்திற்கு மிக முக்கிய காரணம். அந்த விசுவாசத்தை வைத்து எவ்வித நன்மைகளையும் இவர்கள் பாதிக்கப்பட்ட, தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு இவர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை.

தாயகத்தில் உள்ள தங்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கே இவர்கள் விசுவாசமாக உழைக்காமல் அவர்களை ஏமாற்றுகின்ற அரசியலையே முன்னெடுக்கின்ற போது, எப்போதுமே வாக்களிக்காத தமிழகத்தில் வாழும் மக்கள் விடயத்தில் இவர்கள் கவனமெடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே சற்று பேராசையான விடயம்தான்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் அதிமுக ஆட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சர்ச்சைக்குரியவர்களாக மாறினர். அவர்கள் மீதான கெடுபிடிகள் முடக்கிவிடப்பட்டது. தஞ்சம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விச்சலுகைகளை தமிழக அரசு நிறுத்தியது, மட்டுமல்ல 12ம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கே அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவி வழங்குவதையும் ஜெ ஆட்சி தடுத்து நிறுத்தியது.

தமிழகத்தின் அப்போதைய நிலையை 2013 மே இல் புதிய ஜனநாயகம் என்ற சஞ்சிகையில், ‘ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !’ என்ற கட்டுரையில் சூரியன் என்பவர் வருமாறு விபரிக்கின்றார்: “முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி வீட்டுப் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை” என்கிறார். இதனை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய போல் பெர்னான்டஸ் இப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் சற்று பலமாக இருப்பதாலும் செய்திகள் வேகமாகப் பரப்பப்படுவதாலும் இவ்வாறான மோசமான செயல்கள் சற்று தணிந்து இருப்பதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இப்போது ‘விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள்’ என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போன்று 2013 இல் இடம்பெற்ற சம்பசங்களை சூரியன் வருமாறு பதிவிட்டுள்ளார்: “செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சசிகரன் என்பவர், கியூ பிரிவு போலீசின் துன்புறுத்தல் தாங்காமல், ஏப்ரல் 28 அன்று நஞ்சருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சந்திரகுமார் என்ற தனது கணவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று, இரண்டு குழந்தைகளுடன் முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயநந்தினி என்ற ஈழ அகதிப் பெண். அதன் பிறகும் பார்க்க அனுமதிக்காதது மட்டுமின்றி, தற்கொலை முயற்சி வழக்கில் குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு மனம் நொந்த சந்திரகுமார் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 40 ஈழத்தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சென்ற ஆண்டு செந்தூரன் என்ற ஈழ அகதி 27 நாட்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 பேர் விடுவிக்கப்பட்டனர்”.

இதில் மிகவும் வேடிக்கையானது என்னவென்றால் இதே ஜெயலலிதா 2009 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தங்களைக் காப்பாற்றுவார் என தமிழீழ விடுதலைப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கைக்காகவே கடைசி யுத்தத்தில் மண்மூட்டைகளாக வன்னி மக்களைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதியில் முடிய வேண்டிய யுத்தத்தை மே 18 வரை இழுததடித்தனர். 2009 ஏப்ரலிற்கு பின்னரேயே மிகக் கூடுதலானவர்கள் இறுதி யுத்த்தில் கொல்லப்பட்டனர். அம்மா ஜெ யின் வரவுக்காக தம்பி பிராபாகரன் காத்திருந்தார். இந்தத் தெளிவின்மைக்கு மக்கள் உயிர்களே இறுதியில் பலியிடப்பட்டு உள்ளது. கொள்கைத் தெளிவற்ற அரசியல் தலைமைகளின் முட்டாள்தனமான முடிவுகள் வகைதொகையற்ற மரணங்களுக்கு வித்திட்டமைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் நல்ல உதாரணமாகும்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவருமே ஒரே மாதிரியான கஸ்டங்களையும் வேதனைகளையுமே அனுபவிக்கின்றனர். ஆனாலும் இந்த அகதிகள் ஒரே மொழி பேசி ஒரே மத நம்பிக்கையுடையவர்களாக இருந்தபோதும் காலகாலமாக திணிக்கப்பட்ட முரண்பாடுகள் இன்றும் அவர்களைப் பிரித்தே வைத்துள்ளது. இந்தப் பிரிவினை தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் இரு பிரிவினராகப் பார்க்கப்படுகின்றனர். இந்தியபூர்வீகத்தைக் கொண்டவர்கள் ‘இலங்கைத் தமிழர்கள் – சிலோன் காரர்’ என்றும் ஏனைய தமிழர்கள் ‘ஈழத் தமிழர்கள்’ என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். அப்படிப் பார்க்கப்பட்ட போதும் அவர்கள் அனைவருமே இந்திய – தமிழக அரசுகளைப் பொறுத்தவரை ‘சட்டவிரோத குடியேற்றவாசிகள்’ என்றே நோக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலேயே நாடற்ற தமிழர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

1970க்களின் நடுப்பகுதியில் இருந்து சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடுகடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் முதல் அண்மைக்காலம் வரை தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்ற தமிழர்கள் வரை அனைவருமே நாடற்றவர்கள். இவர்கள் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அங்கு வாழ்ந்த போதும் இன்றும் நாடற்றவர்களே. அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளும் நாடற்றவர்களே. முதல் தலைமுறையான விரல் விட்டு எண்ணக் கூடிய சில அகதிகள் அங்குள்ள இந்தியப் பிரஜைகளை மணம்முடித்து இந்த நாடற்ற வாழ்விற்குள் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஆனால் 2003இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது திருமணபந்தத்தில் ஒருவர் சட்டவிரோத குடியேற்றவாசியாக இருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் குடியுரிமை கிடையாது என்று அறிவித்தது. தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலேயே நாடற்றவர்களாக்கப்படும் கொடியநிலை இன்னமும் தொடர்கிறது. சட்டவிரோ குடியேற்றவாசி என்றால் வாக்குரிமை மட்டுமல்ல வாழ்வாதாரத்திற்கான உரிமையே இல்லாமல் செய்யப்பட்டுவிடுகின்றது என்கிறார் போல் பெர்னானடஸ்.

இலங்கை அகதிகள் என்னதான் கஸ்டப்பட்டாலும் அரசு அவர்களுடைய கல்வியுரிமைகளைத் தடுத்தாலும் அவர்கள் தனியார் துறையினூடகக் கல்வி கற்று பட்டமேற்படிப்பை கணிசமான தொகையானவர்கள் முடித்துள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் கூட மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு தங்கள் கல்வியயை முடித்துள்ளனர். ஆனால் அவர்களால் இன்னமும் ஒரு ஒளிக்கீற்றைக் கூட காண முடியவில்லை. நம்பிக்கைகள் சிதறடிக்கப்படுகின்றது. கணணித் தொழில்நுட்பத்தில் உள்ள இந்தியப் பிரஜையின் சம்பளம் 40,000 இந்திய ரூபாய் என்றால். அதே வேலைக்கு தஞ்சமடைந்த இலங்கைத் தமிழனுக்கு 15,000 இந்திய ரூபாய்களே வழங்கப்படும். அரசின் எவ்வித அடையாள அட்டைகளும் சலுகைகளும் வழங்கப்படாது. எவ்வித பத்திரங்களும் இன்றி சொத்துக்களை வாங்க முடியாது. வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாது. முன்னேற்றத்திற்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியுற்ற பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 7,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பற்ற, உயிராபத்தான படகுகளில் பயணத்தை மேற்கொண்டு நூற்றுக் கணக்கில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இதுவரை 1,000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இவையெதுவுமே குறும்செய்தியாகக் கூட பத்திரிகைகளை எட்டியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இம்மக்கள் ஏழைகள். அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் .கேட்பதற்கு யாருமற்றவர்கள். அதனால் இவர்கள் பற்றிய செய்திகள் கூட யாருக்கும் பயனற்றதாகிவிட்டது. மெடிற்றிரேனியன் கடலில் ஆண்டாண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய கனவுகளுடன் வரும் ஆபிரிக்கர்கள் கடலினுள் மூழ்கிவிடுகின்றனர். அதுபோல் எமது உறவுகளும் நூற்றுக் கணக்கில் இந்துசமூத்திரத்தினுள் மூழ்கிப் போகின்றனர்.

– 3 –

தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினை என்பது வெறுமனே அரசியல், மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது அல்ல. அன்று அந்த மண்ணுக்கு தங்களது பதின்ம வயதில் சென்று வாழ்க்கையை விதைத்தவர்கள்; இன்று அந்த மண்ணிலே வேர்விட்டு, அவர்களது பிள்ளைகள், பிள்ளை பெற்றுள்ளனர். அம்மண்ணிலே மூன்றாவது தலைமுறை ஒன்று உருவாகிக் கொண்டுள்ளது. அவர்களை சர்வசாதாரணமாக மீண்டும் இலங்கைக்கு வாருங்கள் என்று அழைத்துவிட முடியாது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர்ளில் சிலர் இலங்கைக்கு கட்டம் கட்டமாக வந்துள்ளனர். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு கணிசமானவர்கள் நாடு திரும்பினர். ஆனால் மீண்டும் யுத்தம் தொடங்கியது. 1992க்குப் பின் ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. 2002 சமாதான ஒப்பந்தத்தை அடுத்து சிலர் திரும்பிச் சென்றனர். ஆனால் மீண்டும் யுத்தம். ஆனால் தமிழகத்தில் வேரூன்றியவர்கள் இப்போது மூன்றாவது தலைமுறையைக் காண்கின்றனர். மீண்டும் நாடு திரும்புவது என்பது இப்போது முதல் தலைமுறையினரின் கையில் இல்லை. இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இலங்கையை வரைபடத்தில் மட்டுமே பார்த்துள்ளனர். 2009 யுத்த முடிவிற்குப் பின் கூட தமிழ், மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மக்கள் விடயத்தில் குறிப்பாக எதனையும் செய்ய விரும்பவில்லை.

வடக்கின் முதலமைச்சராக இருந்த சி.வி விக்கினேஸ்வரன், காம வெறியன் பிரேமானந்தாவுக்கு துணை போனவர்களை சிறை மீட்க, அவர்களை விடுவிக்க, இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் சிறப்பு முகாம் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழகத்தில் உள்ள இலங்கையர் யாருக்கும் இந்திய குடியுரிமை தேவையில்லை, அவர்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்று முட்டாள்தனமாக ஒரு கருத்தை வெளியிட்டார். இதே கருத்து ஏனைய தமிழ் தேசிய வாதிகளிடமும் புரையோடிப் போயிருந்தது. ஆனால் இவர்கள் யாரும் தாங்கள் மாகாண ஆட்சியில் இருந்த போதும் கூட தமிழகத்தில் இருந்து மீளக் குடியேறும் மக்களுக்கு எவ்வித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கவே இல்லை.

இந்திய – தமிழக அரசும் இலங்கை அரசும் எப்படி இந்த மக்களை சுமையாக அல்லது தங்களுடைய பொறுப்பல்ல என்று கருதுகின்றனவோ அவ்வாறே தமிழ், மலையகபாராளுமன்ற உறுப்பினர்களும் அம்மக்களை சுமையாகவே கருதுகின்றனர். இதிலொரு அடிப்படை மாற்றம் நிகழ்வதற்கான வாய்பு இதுவரை தெரியவில்லை. அதற்குக் காரணம், தமிழ் தேசிய அரசியலுக்கு வெளியே தலைமுறை மாற்றம் ஏற்பட்டது போல் தமிழ் தேசிய அரசியலுக்குள் தலைமுறை மாற்றம் நிகழவில்லை அல்லது தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும் கூட பழைய அரசியல் அரிசுவடியுடனேயே அரசியலை நகர்த்துகின்றனர். இரா சம்பந்தனுக்குப் பதில் மாவையின் மகன் அரசியலுக்கு வந்தாலும் தமிழ் தேசிய அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பில்லை.

அதற்கு உதாரணமாக யூன் 17 அன்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்தனர். ‘எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக்கொலை செய்யுங்கள்’ என்று திருச்சியில் சிறப்புமுகாம் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களோடு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாடியும் இருந்தார். செல்வம் அடைக்கலநாதன் யூன் 14 அன்று புதிய தமிழக முதல்வர் மு க ஸ்ராலினுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்:

“இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திருநாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்தியமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன்”.

இலங்கையின் உப சபாநாயகராக இருந்த, தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் நிலை இது. ஒரு பத்தாம்பசலித்தனமான கடிதம். விடுதலை செய்யுங்கள் என்ற ஒரு கோரிக்கையைக் கூட அழுத்தம் திருத்தமாக எழுதத்துணிவற்ற, முதுகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள். இன்று இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அறுபது வரையான குற்றவாளிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களுடைய செயற்பாடுகளுக்கான ஆவணங்களும் அரசிடம் உண்டு. அப்படியிருந்தும் இலங்கைப் பாராளுமன்றத்திலேயே அவர்களை விடுதலை செய்யக் கோரி முழங்கும் உங்களுக்கு, இவ்வாறான எந்தக் குற்றச் செயலையுமே செய்யாத சில்லறைக் குற்றங்களுக்காக அல்லது பொய்வழக்கு போட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைத்து விசாரணையின்றி வைத்திருப்பவர்களை விடுதலை செய்யக் கேட்பதற்கு வாயில் என்ன கொழுக்கட்டையா? வைத்திருக்கிறீர்கள்.

சிறப்பு முகாம் தொடர்பான எவ்வித அதிகாரமும் தமிழக அரசிடம் இல்லை என்பது கூடவா ஒரு இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுக்கு தெரியாது. சிறப்பு முகாம்கள் மத்திய அரசின் கீழ் உள்ளது. அது பற்றி இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பக்லேயுடன் தான் நீங்கள் பேச வேண்டும். யூன் 17ம் திகதி இந்தியத் தூதுவருடன் என்னதான் பேசினீர்கள்? வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு என்று பேசியதாக அறிக்கை விடுகிறீர்கள். இதை யாரோடு பேச வேண்டும்? இலங்கை அரசாங்கத்தோடு. உங்களிடம் 5 ஆண்டுகள் வடமாகாண சபை இருந்ததே. அப்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பாக என்ன செய்தீர்கள்? அபிவிருத்தி செய்யவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் அமைச்சருக்கு அமைச்சர் சுருட்டி; ஆளை ஆள் மாட்டி பதவியை விட்டு ஓட்டப்பட்டீர்கள். மிகுதி நிதியை திருப்பி அனுப்பினீர்கள். நியதிச் சட்டங்களை உருவாக்கவில்லை. அதனால் அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களால் பயன்படுத்த முடியவில்லை. நீங்கள் கொண்டுவந்த சி வி விக்கினேஸ்வரனே உங்களுக்கு ஆப்பு வைச்சு, இப்ப தனிக்கட்சி. ரெலோவும் புளொட்டும் இப்பவே யாரோடு ஒட்டினால் ஆசனத்தை தக்கவைக்கலாம் என்ற கணக்கில் தலையயையும் வாலையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உண்ணாவிரதிகள் பற்றியெல்லாம் என்ன அக்கறை.

அப்படியானால் தமிழ் தேசியம் பேசாத அல்லது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கோரும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றனர்? ஆளும் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஏன் பேசவில்லை? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏன் குரல்கொடுக்கவில்லை? மக்களுக்காக நீங்கள் நிற்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுவொரு சந்தர்ப்பம் அல்லவா? வெறும் அரசியலுக்காக அல்ல உங்கள் இதயத்தையும் திறமையையும் ஒரு முகப்படுத்தி சிறப்பு முகாம் கைதிகளின் விடுதலையையும் தமிழகத்தில் உள்ள நாடற்ற தமிழர்களுக்கான தீர்வையும் முன்வையுங்கள்!

இலங்கை திரும்பி வந்து வாழ விரும்புபவர்களுக்கு சகல விதமான மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். இலங்கை ஜனாதிபதியை உங்கள் திட்டத்திற்கு சம்மதிக்க வையுங்கள். சிங்கள, முஸ்லீம், மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்களோடு அணிசேருங்கள். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுங்கள். இவர்களின் தமிழ் தேசியவாதம் காலாவதியாகிப் போய்விட்டதை நிரூபியுங்கள். இவற்றை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ் தேசியவாதிகள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படும்.

1989 இல் இரணைதீவில் இருந்து இந்தியா சென்ற ஹம்சகௌரி சிவஜோதியின் தந்தை கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியவர். கொழும்பில் இருந்து விடுமுறையில் கிளிநொச்சி சென்றிருந்த வேளையிலேயே, இவர் குடும்பத்தோடு இந்தியா செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. அவரைத் தேடிய கனடிய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அமெரிக்க உயர் ஸ்தானிகர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு இவர்களை ஒரு வாரத்திற்குள்ளாகவே அவசர கடவுச் சீட்டை ஒழுங்கு செய்து இலங்கைக்குத் அழைத்துவந்தனர். ஒரு உயர்ஸ்தானிகராலயம் இவ்வளவு பொறுப்போடு ஒரு பணியாளருக்காக இவ்வளவு செய்ய இயலுமானால் அந்த மக்களின் வாக்குகளைப் பெறும் தலைவர்கள் நீங்கள் எவ்வாறு இவ்வளவு பொறுப்பற்று நடந்துகொள் முடியும்?

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற அனைவரும் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு அம்பாள்குளத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு குடும்பத்தின் கதை பொருத்தமாக இருக்கும். பத்து பிள்ளைகளைப் பெற்ற தாயும் தந்தையும் அதில் மூவர் வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்துகொண்டதாலும் ஏனைய மூவர் திருமணம் செய்து கொண்டதாலும் மற்றைய நான்கு பிள்ளைகளோடு படகில் தமிழகம் சென்றனர். கணவன் இந்தியாவிலேயே இறந்து விட்டார். தமிழகம் சென்ற நான்கு பிள்ளைகளில் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டார். ஏனையவர்கள் தமிழகத்திலேயே மணம் முடித்து வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் இந்தியத் தமிழரையே திருமணமும் செய்துள்ளார். தற்போது வயதான தாயார் மட்டும்அவுஸ்திரேலியாவில் உள்ள மகனின் விருப்பப்படி மீண்டும் அம்பாள்குளத்தில் வந்து வாழ்கின்றார். அதனால் அனைவரும் இலங்கைக்கு வாருங்கள்! எங்கள் விகிதாசாரத்தை கூட்டுவோம்! என்று கேட்க முடியாது. ஆனால் இலங்கைக்கு வந்து வாழ விரும்புபவர்களுக்கு அவர்கள் நாடு திரும்புவதற்கான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்திற்கான வாழ்வாதாரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் தமிழகத்திலேயே வாழ விரும்புபவர்களுக்கு தமிழக – இந்திய அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அம்மக்களின் கௌரவமான எதிர்காலத்திற்கு தமிழக – இந்திய அரசுகளுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ் – மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் கைக்கூலிகளாக அல்லாமல் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும்.

“இலங்கையினுள் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.” – இந்திய கடற்படையின் துணைத் தளபதி

இலங்கையினுள் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இந்திய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

சீனாவினால் இலங்கையில் புதிய துறைமுக திட்டத்தை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன் காரணமாக, பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதால் எந்த ஒரு தரப்பினருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

சீனாவில் 100கோடியை தாண்டிய செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை – உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்காம் !

சீனாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்று செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இத்தகவலை சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது,  உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலக அளவில் 250 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தடுப்பூசி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது.
சீனாவின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்குப் பிறகு, தடுப்பூசி திட்டம் தொடங்கியது.
வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முந்தைய தடுப்பூசி முறைகேடுகளால் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஒரு மாத காலமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்திருக்கிறது.
இந்த மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், 40 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்குடன் அதிகாரிகள் செயலாற்றி வருவதாகவும் அறியமுடிகின்றது.