2021

2021

உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள்.”- நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் !

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும். ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது. குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதின்ம வயதில் விளையாட்டாக ஆரம்பித்தது, இன்று ஐம்பதுக்களில் மரணத்தின் வாயிலில்!!! – தமிழ் பெருங்’குடி’ மக்கள் – பகுதி 02

என் எதிரிக்குக் கூட இப்படி ஆகிடக் கூடாது என்று கட்டியவள் கண்கலங்கினாள். அன்று நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நானும் தான் கூடச் சென்றிருந்தேன். அவனுடைய வயிறு பெருத்துக் கொண்டு வந்தது. கண்கள் மஞ்சளாகிக் கிடந்தது. உணவு ரியூப் வழியாக வழங்கப்பட்டு கிழிவுகளும் ரியூப் வழியாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் முக்கால் மயக்கத்தில் எவ்வித தூண்டலும் இன்றி இருந்தான். சுவாசிக்க கஸ்டப்பட்டு உள் வலியால் மட்டும் உடலை அசைக்க முற்பட்டான். மற்றும்படி எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. கட்டியவள் அழைத்துப் பார்த்தான் எவ்வித உணர்ச்சி வெளிப்படுத்தலும் இல்லை. நான் அழைத்துப் பார்த்தேன். அதற்கும் எவ்வித வெளிப்படுத்தலும் இல்லை. என் கையால் முகத்தை தடவினேன் பலனில்லை. ஒரிரு தடவை கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அதில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. வெறுமையை அவன் கண்ணில் பார்க்க முடிந்தது.

அப்போது தமிழ் டொக்டர் வந்து கட்டியவளுக்கு நிலைமையை விழங்கப்படுத்த தனக்கு தெரிந்த தமிழில் நன்றாகவே விளங்கப்படுத்தினார். தான் இவர் முதல் வந்திருந்த போதும் சிகிச்சை அளித்ததாகவும் குடியை விட்டாலே தங்கள் சிகிச்சை பலனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். அவருடைய கதையின்படி தாங்கள் எல்லாவகையிலும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் ஆனால் நிலைமை மோசமானாலும் மோசமாகலாம் என்ற எச்சரிக்கையை வழங்கி அவளை அசுவாசப்படுத்தும் அதேசமயம் நேரக்கூடிய ஆபத்திற்கும் தயார்படுத்தினார்.

“நீங்களும் குடித்தால் வரும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு. ஏன் இவருக் பலாத்காரமாக குடியை வெறுப்பதற்கான சிகிச்சையை அளிக்கக் கூடாது” என்று வினவினேன். என்னைப் பார்த்து ஒரு நளினமான புன்னகையை விட்டபடி, ‘குடிப்பதா இல்லையா என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அவர்களாக திருந்த வேண்டும். இது ஒருவருடைய மனித உரிமை சம்பந்தப்பட்டது’ என்றார் அந்த டொக்டர். ‘இது வாழ்வதற்கான உரிமையல்ல. சாவதற்குமான உரிமை’ என்று சொல்லி அந்த உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

2019இல் போதையில் வீழ்ந்து மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டவனால் குடியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பின் மருத்துவமனை அவனது மாமியார் வீடானது. கிட்டத்தட்ட 20 தடவை வரை சென்று திரும்பி இருப்பான். இம்முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இது முற்றுப்புள்ளியாக அமையும் என்ற உணர்வு என்னுள் வந்துவிட்டது. அவனுடைய உடல் மாற்றங்களில் அது தெரிந்தது. அவன் எவ்விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை அல்லது அவனால் முடியவில்லை. அவன் கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்வதற்கான நோக்கத்தை தேவையை இழந்துவிட்டான். இவன் மட்டுமல்ல இவனைப் போல் பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். நாம் இவர்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றோம். அல்லது ஏன் மற்றையவர்களின் பிரச்சினையில் தலையிடுவான் என்று இருந்துவிடுகின்றோம். இதுவும் ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர மறந்துவிடுகின்றோம்.

ஒரு வகையில் இன்று சமூக மாற்றம் பற்றி பேசுவோரும் வைற் கொலர் சமூகசேவையாளர்களாகி விட்டனர். நோகாமல் பகுதிநேரமாக புரட்சி சமூக மாற்றம் பற்றி போஸ்ட் போட்டு சமூக மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைக்கிறோம். அரசியல் ரீதியாக தீவிரமாக ‘முற்போக்காக’ செயற்பட்ட இவனின் நிலையே இப்படி என்றால் சாதாரணர்களின் நிலை எப்படியிருக்கும். இவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பங்களின் நிலை என்ன. அவர்கள் தினம் தினம் ஆண்டாண்டுகளாக அனுபவித்த கொடுமைகள் யுத்தக் கொடுமையிலும் மோசமானது. சொந்த வீட்டிலேயே நிம்மதியிழந்து வாழ்வதென்பது எவ்வளவு பெரும் கொடுமை.

இவன் மருத்துவமனைக்கு சென்று இன்று நவம்பர் 22 பத்து நாட்களாகிவிட்டது. அதற்கிடையே லண்டனின் புறநகர்ப்பகுதியான சறேயில் குடி உபாதையால் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவர் குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாளாந்த செயற்பாடக இருந்துள்ளது. மனைவியின் உழைப்பில் வாழ்ந்து அவளின் பணத்திலேயே வாங்கிக் குடித்து எதிர்பாராத விபத்து ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் அவள் உயிரிழந்தாள்.

தாயகத்தில் கிளிநொச்சி பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்து மாற்றம் பெற்றுச் சென்ற ஒரு தலைமையாசிரியரும் குடி காரணமாக ஏற்பட்ட உடலியல் பாதிப்பால் சென்ற வாரம் மரணமானார். இவர் பாடசாலையிலேயே வைத்து குடிக்கின்ற பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார்.

அண்மைய மாதங்களில் அவன் எவ்வாறு சிந்திக்கின்றான், தன்னுடைய வாழ்வைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிய அவனோடு பல்கோணங்களிலும் பேச்சுக்கொடுத்து பார்ப்பேன். சில வாரங்களுக்கு முன், “நீ எவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என நினைக்கிறாய்” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டேன். அவன் எவ்வித சலனமும் இல்லாமல், “படுத்தால் நாளைக்கு எழும்புவேனோ தெரியாது” என்றான். “அப்ப உனக்கு சாகப்போறனே என்று பயம் இருக்கவில்லையா?” என்றேன். “என்னத்தை பயப்படுகிறது” என்றான். அதற்கு மேல் கேட்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் பேசிய போது, “நான் இதற்கு வெளியே வருவேன்” என்றவன் அது செய்வேன் இது செய்வேன் என்றெல்லாம் சொல்வான். ஆனால் சில மணி நேரத்திலேயே குடித்துவிட்டு நான் சாகப்போகிறேன் என்று என்று ஒலமிட்டு அழுவான். முன்னர் மனைவி பிள்ளைகளோடு இருக்கும் போதும் அவ்வாறு தான். இப்போது அவர்கள் இல்லாதபோதும் பிள்ளைகளுக்கு போன் பண்ணி நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாகப் போகிறேன் என்பான். இன்று அவன் அந்த நிலைக்கு மிகக் கிட்ட வந்துவிட்டான். கடந்த சனிக்கிழமை பிள்ளைகளையும் கூட்டிச் சென்றோம். அவர்கள் ஒவ்வொருவராக ‘அப்பா’, ‘அப்பா’ என்று அழைத்தனர். ஆனால் எவ்வித உணர்வு வெளிப்பாடும் இல்லை. கைகளால் வயர்களைப் பிடுங்குவதால் கையை ஒரு சிறு தலையனை மாதிரியான பாக்குக்குள் வைத்துக் கட்டி இருந்தனர். வயிறு இன்னமும் வீங்கி இருந்தது.

மறுநாள் ஞாயிறு நவம்பர் 21 தாரமும் தாயும் சென்று பார்த்து வந்தனர். பெற்றவர்கள் உயிரோடு இருக்கின்ற போது பிள்ளைகள் உயிரிழப்பது மிகக் கொடுமையானது. ‘பெற்ற வயிறு பற்றி எரியும்’ என்பது இதைத்தான். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிக்கொண்டு வருகின்றது. அதுவொன்றும் ஆச்சரியமானதும் அல்ல.

அண்மைய காலங்களில் அவன் என்னோடுதான் கூடுதலாக கதைத்திருந்தான் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்வரை சமைத்து சாப்பாடு எல்லாம் தருவான் என்னுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைப்பான். சமையலில் சாப்பாட்டில் அவ்வளவு நுணுக்கம். ‘என்னுடைய பிளைகள் வேறு உன்னுடைய பிள்ளைகள் வேறா’ என்பான். ‘நான் இல்லாவிட்டால் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பாய் தானே’ என்பான்.

இன்று நவம்பர் 22 இரத்தமாக வாந்தி எடுத்திருந்தான். இதயத்துடிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஈரல் செயற்பாட்டை இழந்துவிட்டது. சிறுநீரகமும் செயற்பாட்டை இழந்தது. அதனால் இன்று அவன் ஐசியு க்கு மாற்றப்பட்டான்.

பதின்ம வயதில் விளையாட்டாக பழகிய பழக்கம் பிள்ளைகளின் பதின்மப் பருவத்தைப் பார்க்காமல் தன் வாழ்வையும் வாழாமல் ஐம்பதுக்களின் முற்பகுதியிலேயே மரணத்தை வரவழைத்து வைத்துள்ளது.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

பகுதி 01: https://www.thesamnet.co.uk//?p=79491

இலங்கையில் நசுக்கப்படும் கருத்துச்சுதந்திரம் – அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை !

சமூக ஊடகங்களில் அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை உள்துறை இராஜாங்க அமைச்சு பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும், கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அரச சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கும் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………

 

இலங்கையில் அண்மைக்காலங்களில் மக்களுடைய கருத்து்சுதந்திரம் கடுமையாக அடக்கப்பட்டு வருகின்றது. இன்றைய அரசாங்கம் மட்டுமன்றி கடந்தகால நல்லாட்சி அரசாங்கமும் கூட இதே வேலைகளை செய்ததது. ஜனநாயகம் என்ற கருத்தியல் அரசியல் யாப்பில் மட்டுமே எழுத்துவடிவில் காணப்பட்டு வருவது போல தோன்றுகிறது.எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. ஆளாளுக்கு விவாதிக்கிறார்கள் என்ற கருத்துக்களை எல்லாம் ஏற்க முடியாது.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என இலங்கையின் அரசியல் யாப்புத்திட்டம் உறுதிப்படுத்துகின்றது. இந்த நிலையில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடக்கப்படுவது இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது.

ஆப்கானிஸ்தானில் பெருகும் வறுமை – தொழிலாளர்களாக மாறியுள்ள குழந்தைகள் !

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறுமை காரணமாக 20 சதவீத சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன.

பெற்றோர் பலர் வேலை இழந்ததால், குடும்பத்தின் வறுமையை போக்க சிறுவர்கள் திண்பண்டங்கள் விற்றும், கார்களைத் துடைத்தும், ஷூ பாலிஷ் செய்தும், குப்பை கூளங்களில் இருந்து மறுசுழற்சிக்குத் தேவைப்படும் பொருட்களை சேகரித்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் – ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி !

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மீட்கப்பட்ட புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

“தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.” – யாழில் ஞானசாரதேரர் !

“கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.” என  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை. தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள். கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். இதன்போது ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ள புதிய சாதனை !

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார்.

ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர் இவராவர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் நடுவராக கடமைாற்றிதை தொடர்ந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பது முழு உலகக்கும் தெரியும்.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும்.” என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நவம்பர் 27ஆம் திகதி பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரிந்த விடயம். இந்தநிலையில் அவர்களை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரகாரம் காவற்துறையினர் செயற்படுகின்றனர். அதற்கமைய பயங்கரவாதிகளை நினைவேந்துவதை தடை செய்வதற்காக காவற்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளனர். இது எவரையும் பழிவாங்கும் நோக்கமல்ல. காவற்துறையினர் தமது கடமைகளை உரியவாறு செய்கின்றனர். எனவே, எந்தச் சந்தர்பத்திலும் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர எமது அரசு அனுமதி வழங்காது.

நல்லாட்சி அரசு பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி வழங்கிய காரணத்துக்காக எமது அரசு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படாது. நல்லாட்சி அரசின் ஏற்றுக்கொள்ள முடியாத சில செயல்களால்தான் நாடு இன்று மோசமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் எமது அரசு ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும். இது இனங்களுக்கு இடையே பகைமையையே ஏற்படுத்தும்” – என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புலிகள் அமைப்புடனான பேச்சுக்கு அரச குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜி.எல்.பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் முக்கிய புள்ளி நான் என கூறித்திரிந்த அருண் சித்தார்த்தன் கைது !

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று  (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

“இராணுவத்தன் முக்கிய புள்ளி” என தன்னை அழைத்துவரும், சர்ச்சைக்குரிய அருண் சித்தார்த்தன், ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று இவரைக் கைது செய்யச் சென்ற போது, யாழ்ப்பாணம் பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், “இராணுவத்தின் முக்கிய புள்ளி” தான் என மிரட்டியதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  “நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன்” என இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் முன்பு ஒரு தடவை, கருத்துக்களை இவர் முன்வைத்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது