2021

2021

தமிழர்களுடைய அரசியல் தீர்வுக்காக கூட்டமைப்பினர் அமெரிக்கத் தூதுவரை சந்திப்பாம் – பல சந்திப்புக்கள் நடந்தாயிற்று தீர்வைத்தான் காணவில்லை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட நேரம் பேசப்பட்டது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ர்களின் அரசியல் தீர்வுக்காக பேசப்பட்டது என எத்தனையோ சந்திப்புக்கள் நடந்தாகிவிட்டது. இன்று வரை அந்த தீர்வு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்புடன் உள்ள தமிழ் அரசியல்தலைவர்கள் இவர்களுடைய விமர்சனங்களுக்கு நடுவிலும் ஏதோ சிலவற்றை தானும் மக்களுக்காக செய்து முடித்துவிட்டனர். ஆனால் இந்த தமிழ்தேசியம் பேசுவோர் மட்டும் இன்னமும் துரோகி பட்டம் சூட்டிக்கொண்டும் – இந்தியாவும் சர்வதேசமும் ஏதாவது செய்யும் என்ற மாயையையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் சர்வதேச சட்டங்கள் என்ன தீர்வை வழங்கிவிட்டன என்று தான் தெரியவில்லை. அண்மையில் கூட வரிச்சலுகை தரமாட்டோம் என  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை  கடிந்து கொண்டது. ஆனால் இலங்கையின் அரசு அதை சட்டைசெய்ததாகவே தெரியவில்லை.

தமிழர்களுக்கு அரசியல் சார்ந்து ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமாயின் தமிழ்தலைமைகள் பேச வேண்டியது அமெரிக்காவுடனோ – இந்தியாவுடனோ – சர்வதேசத்துடனோ அல்ல. இலங்கையின் அரசாங்கத்திடம் பேச வேண்டும். கடந்த நல்லாட்சி கால அரசில் இவர்களால் ஒரு அரசியல்கைதியையாவது விடுவிக்க முடிந்ததா..? இல்லையே.

வீணாக மக்களை இன்னமும் மகிந்த தரப்பு எதிரிகள் என்ற விம்பத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்காது இருப்பதே இவர்களுடைய முக்கியமான இலக்கு போல் தோன்றுகிறது. சில வேளை இருக்கக்கூடும். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டால் இவர்கள் எதை வைத்து அரசியல் செய்வார்கள் ..? என நாடாளுமன்றில் சுரேன் ராகவன் கேட்டது தான் நினைவிற்கு வருகிறது..!

 

ஆலய வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் 2வது நாளாகவும் தலைமறைவு!

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

கியூபாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள் – வாய்ப்பை பயன்படுத்தி தலையை நுழைக்கிறது அமெரிக்கா !

கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம்  இராணுவத்கைத பயன்படுத்தி அடக்கியதுடன் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் கையாண்டு வருகின்றது.

இந்த நிலையில் கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கியூபா  குற்றம் சுமத்தியுள்ளது. கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைச் சில நாட்களுக்கு முன்னர் கியூபா அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே கியூபாவில் போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெய்டி ஜனாதிபதி படுகொலை – அமெரிக்க மருத்துவர் ஒருவரும் கைது !

தென் அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் அமைந்துள்ள தீவு நாடான ஹெய்டியின் ஜனாதிபதி 53 வயதான ஜோவனல் மோஸ், தனது பதவிக்காலம் முடிந்த போதும், ஓராண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள அவர் தனது வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல், ஜனாதிபதி ஜோவனல் மோஸ் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் ஜனாதிபதி ஜோவனல் மாய்சே உயிரிழந்தார். அவரது மனைவி மார்ட்டின் மோஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15கொலம்பியர்கள், 2அமெரிக்கர்கள் என மொத்தம் 17பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரும் அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெய்டி பொலிஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘ஹெய்டியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். மருத்துவரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹெய்டி வந்துள்ளார்.ஜனாதிபதி ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும், இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார்.

இதனிடையே, ஹெய்டியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹெய்டி சென்றனர்.

இவர்கள் ஹெய்டியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக ஜனாதிபதியின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹெய்டி அரசாங்கம் கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவுக்காக 2 நிறுவன தடுப்பூசிகளை போடுவது சரியான நடவடிக்கை அல்ல.” – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது. இலங்கையிலும் அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:-
கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார நிறுவனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.  இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் – உச்ச நீதிமன்றம அதிரடி தீர்ப்பு !

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரக்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மே மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தார். பின்னர், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத நிலையில், மீண்டும் கே.பி. சர்மா ஒலியையே பிரதமராக நியமித்தார் அதிபர்.
இந்த முறையும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியேற்க முன்வந்த 61 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா மற்றும் கே.பி. சர்மா ஒலி ஆகியோரின் கோரிக்கையை அதிபர் பித்யா தேவி ஏற்க மறுத்துவிட்டார். மைனாரிட்டி அரசாக கே.பி.சர்மா ஒலி அரசு நீடிக்கிறது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை 2 நாட்களில் நியமிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பினால் கே.பி.சர்மா ஒலிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமார் மரணம்: தற்கொலையா? கொலையா?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று காலை (July 11, 2021) கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த, இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கள் யூலை 5 வவுனியா தோணிகல் பகுதியில் உதயச்சந்திரன் சஞ்ஜீவ், வீட்டிற்கு வெளியே காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். விபுலானந்தா கல்லூரியில் தரம் 10இல் கல்வி பயிலும் இம்மமாணவர் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டிற்கு வெளியே காயங்களுடன் மரணித்த நநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பிரதேசசபை உறுப்பினர் சிவக்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று நிலையில் வந்து நிற்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகளின் எண்ணிக்கை, வன்செயல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் அரசியல் வாதிகள் யாரும் இதுபற்றி இதுவரை எவ்வித கவனமும் செலுத்தவில்லை. எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கவும் இல்லலை. இந்நிலையில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய மரணமே கொலையா? தற்கொலையா? என ஊசாலாடிக்கொண்டுள்ளது.

தங்களைச் சார்ந்த ஒரு இளம் அரசியல் வாதியின் மரணமே இவ்வாறு கேள்விக்குறியாகி நிற்பதைத் தொடர்ந்தாவது இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றார் சாவகச்சேரியயைச் சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரான தவநேசன். தேசம்நெற்க்கு தவநேசன் மேலும் தெரிவிக்கையில் யாழ் நகர மேயரும் அவருடைய கட்சியினரும் முதலில் இந்த வன்முறை, தற்கொலை விடயங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களிடம் அதிகாரம் இல்லாவிட்டால் இதற்கு எதிரான போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவகுமார் கஜேன் (வயது 28) ருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இவர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேயர் மணிவண்ணனின் நெருங்கிய மற்றுமொரு உறுப்பினரான பார்தீபன் வரதராஜன் உடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. பார்தீபனுடைய முகநூலிலும் நல்லூர் பூங்கா பற்றிய பதிவே காணப்படுகின்றது. இறந்த சிவகுமார் பற்றிய எப்பதிவுகளும் இல்லை. மேயர் மணிவண்ணனின் முகநூலிலும் தனக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினரின் மரணம் தொடர்பான எவ்வித பதிவுகளும் காணப்படவில்லை.

அதேசமயம் தேசம்நெற் க்கு பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவருடைய மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசசபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரணைகள் முடிவடையும் வரை உறுதியாக எந்த முடிவுக்கும் வர முடியாது எனத் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்கொலையாக இருந்தால் அதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவரவில்லை. இவருக்கு திருமண நிச்சயம் நடந்திருப்பதாகவும் சில முகநூல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவான பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகின்றது. கோப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தற்கொலை தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மரணிக்கின்றனர் என்பது தற்செயலான நிகழ்வுகளா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று என கடந்த ஆண்டு மரணித்த கோப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் ஊரவரான, தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பெண் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

புகைத்தலை வியாபாராமாக்கியவர்ளே சுவாசத்தை சீராக்கும் இன்ஹேலரையும் வழங்க உள்ளனர்!

புகைத்ததால் நுரையீரல் பிரச்சினை என்றால் இழுத்து சுவாசத்தை சீராக்கலாம் என புகைத்தல் வணிகக் நிறுவனம் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சுவாசப் பிரச்சினையைச் சீராக்கி சுவாசத்தை சீர்படுத்தும் ‘இன்ஹேலர்’ உபகரணத்தை தயாரிக்கும் பிரித்தானியாவின் மருத்துவ நிறுவனமான வெக்ரூரா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் இறங்கி உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கு வெக்ரூரா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. இதன்படி புகைத்தலுக்கு அப்பால் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் வருமானத்தை ஈட்டலாம் என மதிப்பிடுகின்றது.

பிலிப் மொறிஸ் இன்ரநசனல் புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மருத்துவ சுவிங்கம் தயாரிக்கும் டெனிஸ் நிறுவனத்திற்கு 820 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது. அதேசமயம் தனக்கு போட்டியான அல்ற்றியா நிறுவனத்தையும் தனக்குள் வளைத்துப் போட்டுக் கொள்ள, 200 பில்லியன் டொலர்களை பிலப் மொறிஸ் இன்ரநசனல் செலவழித்துள்ளது. இந்த இணைவின் மூலம் சிகரெட் பிடிப்பவர்களை அதனிலும் சற்று ஆபத்து குறைந்த புகைத்தல் முறைக்கு அடிமையாக்குவததை நோக்கி பிலிப் மொறிஸ் இன்ரநசனல் இறங்கியுள்ளது. பிள்ளையயையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பல்தேசிய நிறுவனங்களும் அதற்குத் துணைபோகும் அரசுகளும் இப்படித்தான் இயங்குகின்றன.

முற்றிலும் இலாப நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்களிடம் மக்களின் சுகாதார பராமரிப்பும் அது தொடர்பான ஆய்வுகளும் கையளிக்கப்படுவது தற்போது வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

உடலில் சீனியயைக் கட்டுப்படுத்தும் (நீரிழிவு) மருந்துகள், கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதயத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் என ஆண்டாண்டு காலத்துக்கும் மருந்து எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் மருந்துகள் தொடர்பில் பலர், மருத்துவ நிபுணர்கள் உட்பட கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருந்துகளின் அதீத பாவனையால் 500,000 பேர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதல் 70 வீதமான மரணங்கள் ஓபியோய்ட் எனப்படும் போதைப்பொருள் சேர்க்கையுள்ள மருந்துகளின் தாக்கத்தால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டில் 117,000 பேர் ஓபியோய்ட் அதிதமான காரணத்தினால் மரணத்தை தளுவியுள்ளனர்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையை ஏற்றுள்ள சௌமியா சுவாமிநாதனின் தந்தை சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துகின்றேன் என்று ஆரம்பித்து, செயற்கை உரங்களுக்கு இந்தியப் பயிர்களையும் செயற்கை உர மற்றும் மருந்து பல்தேசிய கொம்பனிகளுக்கு இந்திய விவசாயிகளையும் அடிமையாக்கியவர். இதனால் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலைக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு முற்றிலும் இலாபநோக்கத்தோடு இயங்கும் பல்தேசிய நிறுவனங்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே மக்கள் அவர்களுக்கான சவக்குழியயை தாங்களே வெட்டுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்ற மாயைக்காட்டி அரசுகளும் இதற்கு உடந்தையாகவே இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சுற்றாடலை அசுத்தப்படுத்தவும் எமது உடல்களை அசுத்தப்படுத்தவும் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் போன்ற பல்தேசியக் கொம்பனிகள் இயங்கவும் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் அரசுகள் ஒப்புதல் அளித்தன. இப்போது ஒப்புதல் அளிக்கின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடன் !

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான ஆதரவை வழங்க டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், பாதித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த கடனுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். அட்டிகலே மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.