2021

2021

அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும்!!!

இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.

ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.

பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.

அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.

வளர்ந்தநாடுகளின் தடுப்பூசி திட்டம் தொடர்பில் உலகசுகாதார அமைப்பு காட்டம் !

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில்  ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல  உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம்  ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.

ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 05 & 06:

தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?

அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.

தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?

அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.

தேசம்: எண்பதுகளிலேயே?

அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.

தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?

அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?

அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …

தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா

அசோக்: ஓம்

தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?

அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.

தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.

அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.

தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.

அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..

தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…

அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…

தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?

அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.

தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?

அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.

தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…

அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.

தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?

அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.

தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?

அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.

தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?

அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.

தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?

அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.

தேசம்: அப்போ உங்களுக்கு…

அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.

தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?

அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.

தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…

அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.

தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?

அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.

பாகம் 06:

தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?

அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.

தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.

அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.

தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?

அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.

தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?

அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.

தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.

இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.

தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?

அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.

ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.

தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?

அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.

எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.

தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?

அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.

தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…

அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.

அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.

தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.

அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.

மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.

புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.

தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?

அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.

தேசம்: இது கழுகு படையா? நாக படையா?

அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.

ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?

அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.

தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…

அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.

எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.

தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?

அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.

தேசம்: இறைகுமாரன், உமாகுமாரன் புலிகளுக்கு ஆதரவாளர்கள்?

அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…

அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.

தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?

அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.

தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?

அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.

உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.

தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…

அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.

மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.

தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…

அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.

தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…

அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.

தேசம்: சாந்தன்…

அசோக்: தெரியல்ல.

தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…

அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.

தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?

அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.

நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்ட தலிபான்களின் துப்பாக்கியை கண்டு அசராத பெண் – வைரலாகும் படம் !

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தலிபான்கள்  தரப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களால் மக்களுக்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக பல பெண்கள் களத்துக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இப்படி காபூல் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் அந்நாட்டுக் குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கும் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காபூல் போராட்டத்தின் போது தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், களத்தில் இருந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார். அதற்கு சற்றும் அசராமல் அந்தப் பெண், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். இது குறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக் டொலர் – 3 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கும் சீனா !

ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளையும், 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக் டொலர்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள ஏனைய நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.

இதன்போது அவர் தலிபான்களால் நிறுவப்பட்ட அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களிடம் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளும் கொவிட் -19 தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு உதவுதல், எல்லை துறைமுகங்களை திறந்து வைப்பது, அகதிகள் மீதான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தினார்.

அதேநேரம் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் தலிபான்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் பயங்கரவாதக் குழுக்களைக் கைது செய்து ஒழிக்க உளவுத்துறை பகிர்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துமாறும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் என்பதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முழு கடமையையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்.” – ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஸ்டாலின் மேலும் ஒரு நகர்வு !

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வமான உரிமையாகும். இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது.

அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 என்று பெயரிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளாக வருபவர்களைச் சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ அல்லது எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வதாக அமையாது. அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானதாகும்.

அதிலும், குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் எல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? என்றும் இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்னதான் நடக்கின்றது ஆப்கானிஸ்தானில்….(பகுதி 3) : சிவா முருகுப்பிள்ளை

சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிரசவித்து… பாலூட்டி… தாலாட்டி…. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் முஹாஜிதீன் என்று ஆரம்பித்து தலிபான் என்ற இணைப்பாக பெரு விருட்சமாக வளர்ந்து கோலோச்சி ஆட்சியும் அமைத்தது ஆப்கானிஸ்தானில் இது சோவியத் படைகளின் விலகலுக்கு முந்தைய, பிந்தய காலகட்ட வரலாறு.

தலிபான்கள் நம்பும் மத அடிப்படைவாதம்தான் அவர்களின் ஆட்சி மொழியாக இருந்தன….. இனியும் இருக்கும்…. இந்நிலையில் தன் விருப்பமான சொல் கேட்காது வளர்ந்துவிட்ட இந்த தீவிரவாதத்தை தறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு 911 என அறியப்பட்ட செப்ரம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் ஒரு காரணமாயிற்று.

தனது நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடாத்தியது கடும் சினத்தை மட்டும் அல்ல கௌரவப் பிரச்சனையும் ஆகியது அமெரிக்காவிற்கு. உண்மையில் இத் தாக்குதலின் பின்னணி என்ன…? யார்…? என்பது இன்றுவரை அவிளாத முடிசாக இருப்பதுவும் அதனைத் தவிர்த்து இங்கு கடந்து செல்லவும் முடியாது.
இதன் அடிப்படையில் ஒரு கல்லில் பல மாங்காய் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தனது கழுகுக் கால்களை விரித்துக் கொண்டது அமெரிக்கா. இதற்கு அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஒத்து பிடில் வாசித்தனர். இதற்குள் லிபியாவையும் இணைத்துக் கொண்டனர்.

அக்டோபர் 2001 இல், செப்டம்பர் 11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறிக் கொண்டு ஒசமா பின் லாடன் மற்றும் அவரது அல்-காய்தா இன் உறுப்பினர்களை அவர்கள் தலிபான்களின் விருந்தினர்கள் என்ற வகையில் தம்மிடம் ஒப்படைக்க மறுத்ததால் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.

இவர்களுடன் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து கொண்டன. ஆரம்ப படையெடுப்பின் போது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் அல்-காய்தா பயிற்சி முகாம்கள் மீது குண்டு வீசின, பின்னர் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட வடக்கு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டு தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மேலும் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் உலகின் பல நாடுகளிலும் மனிதாபிமான செயற்பாட்டை செய்தல்…. ஜனநாயகத்தை மீட்டல்… தீவிரவாதத்தை இல்லாமல் செய்வதில் தாங்களே உலகப் பொலிஸ்காரர்கள் வழிகாட்டிகள் என்பது போன்ற செயற்பாட்டில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் தமது ஆக்கிரமிப்பிற்கு நியாயங்களை காட்டி நின்றனர்.

முதலில் போரை தொடுப்பதற்காக நியாயங்கள் உள்ளது போன்ற பிரச்சாரங்களை தமக்கு சாதகமான பிரபல்ய ஊடகங்கள் மூலம் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு முன்பு மிக நேர்த்தியாக செய்ய ஆரம்பிப்பர்.
அமெரிக்க மக்களை ஏன் உலக மக்களை இது ஆக்கிரமிப்பு யுத்தம் அல்ல ஜனநாயகத்தை மீட்பதற்காக யுத்தம்… மனிதாபிமான யுத்தம்…. என்று எண்ணும் படியான கருத்தியலை ஓரளவிற்கு ஏற்படுத்துவதில் அமெரிக்கா ‘வெற்றிகரமாக’ செயற்பட்டனர் என்றே கூறவேண்டும்.

இதன் பின்பு அவர்களுக்கு சார்பான அந்தந்த நாடுகளின் உள்ளுர் தீவிரவாதிகளுக்கு பணம், ஆயுதம், ஆலோசனையை வழங்குதல்…. பின்பு போரைத் தொடங்குதல்… என்று ஆரம்பிப்பதே அமெரிக்க ‘மனிதாபிமான’ யுத்தங்கள் ஆகும்.

இதில் அதிகம் தரை மார்க்கமாக அமெரிக்க படைகள் நகருதலை சோமாலியாவில் அவர்களுக்கு கிடைத்து பாரிய இழப்பும்… அனுபவங்களும் கூடவே அமெரிக்க மக்களிடம் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகடிக்கப்படுகின்றார்கள் என்ற எதிர்ப்பு நிலையை சமாளிக்கும் முகமாக ஆகாய மார்க்கமாக தாக்குதலை அதிகம் செய்தல் மூலம் நாடுகளுக்கு எதிரான யுத்தங்களை செயற்படுத்தினர். இம்முறையையே ஆப்கானிஸ்தானிலும் 2001 அக்ரோபரில் நடைமுறைப்படுத்தினர்.

இங்கும் ஆகாயத் தாக்குதல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆகாய மார்க்க பிரச்சாராம் (Air campaign) என்பது போன்ற சொல்லாடலைப் பாவிப்பது என்பதுமாக ஆப்கானிஸ்தான் அமெரிக்க கூட்டமைப்பு படைகளிடம் 2001 இறுதியில் இல் வீழ்ந்து.

தலிபான்களின் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறைந்தும் கொண்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆப்கானிதானில் எல்லை பூராக தரையால் இணைக்கப்பட்டிருந்ததும் பெரும் உதவியாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமக்கு சார்பான ஒரு அரசை அங்கு நிறுவுவதற்கான தேர்தலை நடாத்துவது…. அமையும் பொம்மை அரசை தமது விருப்பத்திற்கு ஏற்ப நடாத்துவது என்ற ‘ஜனநாயக’ வழி முறையைத்தான் ஆப்பானிஸ்தானில் நடாத்தினர் அமெரிக்க கூட்டமைப்பினர்.

இதில் உள்ளுர் ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள், பணியாளர்கள் தமது நாட்டின் செயற்பாட்டில் பொதுப் போக்கில ஈடுபட்டனர். இவ்வாறு அரசு அமைப்பதுவும் நிர்வாகத்தில் பங்கு பற்றுவதற்கும் எதிர் நிலையாக அமெரிக்காவின் படையிடம் தமது ஆட்சியை இழந்த தலிபான்கள் துரோகிகளின் செயற்பாடாகவே கருதினர். அமெரிக்க படைகளின் பிரசன்ன காலமாகிய கடந்த 20 வருடங்களும் நிலமை இவ்வாறுதான் நகர்ந்தது.

தொடர் ஆயுத மோதல்களாக நகர்ந்த இருபது வருடங்களில் மற்றைய எந்த நாடுகளையும் விட ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு தலிபான தீவிரவாதிகளின் மறைவிடங்களை முழுமையாக எந்த நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு அடக்க, அழிக்க முடியவில்லை.

கூடவே அருகில் எல்லைகள் முழுவதும் பரந்திருக்கும் பாகிஸ்தானின் தரையால் உள்ள இணைப்பு இந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானை தமது மறைவிடமாக பாவிப்பதற்கு இருந்து ஏதுவான ‘தட்ப வெப்ப’ நிலமையும் இந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானில் ஆட்சியை தொடருதல் ஏன் உயிர்வாழுதல் என்பது கடினமானது என்ற ‘ஜனநாயகத்தை’ பாகிஸ்தான் கொண்டிருந்ததும் தலிபான்கள் ஆப்கனிஸ்தானில் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாகியது.

கூடவே தலிபான் தரப்பிலும் அமெரிக்க கூட்டமைப்பு படைகள் ஆப்கானிஸ்தான் அரசு என்று முத்தரப்பிலும் போதைவஸ்தில் உலக சந்தையில் பெருந்தொகை பணமீட்டல் என்பது இங்கு இந்த போர் தொடர வேண்டும் என்று முத்தரப்பினரும் விருப்பத்துடன் இருந்த துர்ப்பாக்கிய நிலமையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

அமெரிக்க கூட்டமைப்பு படைகளின் பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியாத ஆப்கான அரசின் செயற்பாடுகள் என்பன பொது மக்களை தலிபான், ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

உலக நவீன ஆயுதங்கள், பல லட்சம் பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கான அரசு படைகள் என்று யாராலும் வெல்லப்பட முடியாத அதே வேளை அமெரிக்க அதன் கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களை தின்று கொண்டிருந்த அவமானகரமான யுத்தமாக அமெரிக்க அரசினால் உணரப்பட்டது. ஆனாலும் உலகப் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கௌரவ பின்வாங்கல் அவர்களால் செய்ய முடியவில்லை. ஆனால் டொனால் ட்றம் போன்ற ஒரு ‘வித்தியாசமான’ அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானமே ஒரு கௌரவமான பின்வாங்கலை ஜோ பைடன் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுதியது.

சில வருடங்களுக்கு முன்பு தலிபான் சீனா இடையில் ஏற்பட்ட தொடர்பும் அதனைத் தொடர்ந்து சீனாவை தலிபான்களிடம் கோர்த்துவிட்டுக் கழட்டிக் கொள்ள நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளில் சீனா இராணுவ ரீதியில் சிக்கிக் கொள்ளாமல் ‘வெற்றி” கண்டது உலக செய்தி ஊடகங்களில் அதிகம் பேசப்படாவிட்டாலும் வரலாற்று உண்மைகள் இவை.

அமெரிக்கா ஆப்கானில் தங்கியிருந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே தேர்தலில் பங்குபற்றினர் என்பதற்கு உருவாகப் போகும் ஜனநாயக அரசியல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையீனங்களும் கூடவே தேர்தலில் பங்கு பற்றினால் தலிபான்களின் துப்பாக்கிக் கோவத்திற்கு ஆளாகலாம் எ ன்பதால் அதனைத் தவிர்த்த செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைந்தன.
இது ஒரு பொதுவான போக்குத்தான். நாம் இதனை 1989 ல் இந்தியப் படைகளின் பிரசன்ன காலத்தில் இலங்கையில் சிறப்பாக வடக்கு கிழக்கு மகாணங்களில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் கண்டோம்.

அமெரிக்க படைகளின் பிரசன்ன காலத்தில் ஹமீத் கர்சாய் 2001 முதல் 2014 வரை நாட்டின் தலைவராக இருந்தார். டிசம்பர் 2001 இல், தாலிபான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, ஹமீத் கர்சாயின் கீழ் ஆப்கான் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது. கர்சாய் நிர்வாகத்திற்கு உதவுவதற்கும் அடிப்படை பாதுகாப்பை வழங்குவதற்கும் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் நிறுவப்பட்டது.

2001 இற்கு முன்பு இரண்டு தசாப்த கால யுத்தம் மற்றும் கடுமையான பஞ்சத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் உலகின் மிக உயர்ந்த குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதங்களில் ஒன்றாக காணப்பட்டது.

குறைந்த ஆயுட்காலத்துடன் பெரும்பாலான மக்கள் பசியுடன் இருந்தனர், மற்றும் உள்கட்டமைப்புகள் யுத்தங்களால் இடிபாடுகளின் நடுவேயே காணப்பட்டன. பல வெளிநாட்டு நன்கொடையாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளணி உதவி மற்றும் பொருட்கள் உதவிகளை வழங்கத் தொடங்கினர். இதற்கு பின்னாலும் தகவலறியும் ஒரு உள்நோக்கங்களும் இருந்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

இதற்கிடையில், தலிபான் படைகள் பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கின, மேலும் அமெரிக்க கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து புனரமைப்பு செயல்முறைக்கு உதவின. ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்க தலிபான் கிளர்ச்சியை தொடங்கியது.

அடுத்த தசாப்தத்தில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை மற்றும் ஆப்கான் துருப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தின, ஆனால் அவற்றை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீடு இல்லாதது, அரசாங்க ஊழல் மற்றும் தலிபான் கிளர்ச்சி காரணமாக ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக பயணப்பட்டது.

இதற்கிடையில், கர்சாய் நாட்டின் மக்களை ஒன்றிணைக்க முயன்றார், மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சில ஜனநாயக கட்டமைப்புகளை உருவாக்க முடிந்தது, 2004 இல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு என்ற பெயரில் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது.

நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வெளிநாட்டு நன்கொடை நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கின.

2002 ஐத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் அகதிகளாக இருந்த ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்த நேட்டோ படைகளின் எண்ணிக்கை 2011 இல் 140,000 ஆக உயர்ந்தது, 2018 இல் சுமார் 16,000 ஆக குறைந்தது.

செப்டம்பர் 2014 இல் அஷ்ரப் கானி 2014 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியானார். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் முதன்முறையாக அதிகாரம் ஜனநாயக ரீதியாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து 28 டிசம்பர் 2014 அன்று, நேட்டோ ஆப்கானிஸ்தானில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் போர் நடவடிக்கைகளை முறையாக முடித்து, ஆப்கான் அரசு நாட்டின் முழு பாதுகாப்புப் பொறுப்பை பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டு இருந்தன. ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

2015 இல் மதிப்பீட்டின்படி ஆப்கானிஸ்தான் போரில் 2001 முதல் சுமார் 147,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 38,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள். ‘பாடி கவுன்ட்’ என்ற தலைப்பில், ஆப்கானிஸ்தானில் நடந்த மோதலில் 106,000 தொடக்கம் 170,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலும் தலிபான்கள் அமெரிக்க விருப்பு அரசுக்கு எதிரான செயற்பாடுகளை எஞ்சிய நிலையில் தங்கியருந்த நேட்டோ படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன.

தலிபான்களை தம்மால் வெற்றி கொள்ள முடியாது என்பதுவும் ஏழு ட்றில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கனிம வளங்களில் மிகச் சிறிய பகுதியையேனும் தம்மால் வறுக முடியவில்லை என்பதுவும் ஆனால் தினம் தினம் பணம் உயிர் விரயமாவதை உணர்ந்து நேட்டோ படைகள் ஒவ்வொன்றாக கழர தொடங்க அமெரிக்கா ‘மாயநிலை'(Virtual)யில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை உணர்ந்தது.

தோல்விகரமாக பின்வாங்குதல் என்பதில் இருந்து…. தம்மை விடுவித்துக் கொள்ளுதல் என்பதை தாம் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற ஜனநாயக மீட்பு மனிதாபிமான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் அரசை காத்துக் கொள்ள மூன்று இலட்சம் படைகள் தம்மால் பயிற்றுவிற்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்று கூறி கொண்டு 2021 ஆகஸ்ட் மாதம் 31 இற்குள் தமது முழுமையான விலகலை செய்வது என்று தலிபானுடன் ஏலவே நடைபெற்ற நீண்ட சந்திப்புகள் பேச்சு வார்ததைகள் உடன்பாடுகள் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2021 ல் படை விலகலை ஆரம்பித்தனர்.

மிகுதி அடுத்த பதிவில்…..

அறிவிக்கப்பட்டார் ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவர் – யார் இந்த முல்லா முகமது ஹசன் ..?

ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் புதிய அரசுக்கு முல்லா முகமது ஹசன் அகுந்த் கவுன்சில் அமைச்சர்களின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதித் தலைவராக முல்லா அப்துல் கானி செயற்படுவார் என தலிபான்களின் ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தாலிபன்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் தான் முல்லா முகமது ஹசன்.
முல்லா முகமது ஹசன் அகுந்த் தான் தற்போது தாலிபன்கள் இயக்கத்தில் உள்ள ரெஹ்பரி ஷுரா என்ற சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளார்.

ரெஹ்பரி ஷுரா (தலைமை கவுன்சில்) குழு தான் அனைத்து விவகாரங்களையும் நடத்தும் அரசாங்க அமைச்சரவை போல செயல்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் புதிய அரசாங்கத்தின் இடைக்கால தலைவராக முல்லா ஹாசனின் பெயரை தாலிபான்கள் இயக்க குழுவின் முன்னணி தலைவரான முல்லா ஹெபத்துல்லா இன்று முன்மொழிந்தார்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முந்தைய அரசாங்கத்தின் போது அவர் வெளியுறவு அமைச்சர் மற்றும் துணை பிரதமராக பணியாற்றி உள்ளார் முல்லா முகமது ஹசன் அகுந்த். அதனால் தான் இவரை தாலிபன்கள் புதிய இடைக்கால தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

தாலிபான்கள் நடத்திய கடந்த ஆட்சியில் ஒரு குறுகிய கால இடைவெளியை நிறுத்துவதைத் தவிர வேறு எந்த முக்கிய பதவிகளும் முல்லா ஹசனுக்கு வழங்கப்படவில்லை. இவர் தலைமையில் தான் மார்ச் 2001 இல் பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டன, ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக இன்னும் பட்டியலிடப்பட்டுள்ள நபர் தான் முல்லா முகமது ஹசன்.

ஆங்கிலப்படப்பாணியில் இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறையிலிருந்து தப்பித்து சென்ற பாலஸ்தீனப் போராளிகள் !

பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனப் போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர். அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் முன்னாள் தீவிரவாதியும் ஒருவர். திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி பலருக்கு கொரோனா பரவ காரணமான இளைஞருக்கு 05 ஆண்டுச்சிறை !

உலகம் முழுவதும் கொரோனா இன்னமும் மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் உவ்வொரு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.  முக்கியமாக பலநாடுகள்  தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மிகததீவிரமாக பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் வியட்னாம் அரசு கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றி மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கக் காரணமாக இருந்ததால் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

28 வயதான லே வான் ட்ரி என்ற இளைஞர் கா மவ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனாவின் ஹோ சி மின் நகரிலிருந்து தனது சொந்த ஊரான கா மவுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் அதைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார். இதனால், கா மவ் நகரில் கரோனா வேகமாகப் பரவியது. ஒருவர் உயிரிழந்தார்.

இது உறுதியான நிலையில் லே வான் ட்ரி என்ற அந்த இளைஞர்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியட்நாமில் இதுவரை 5,40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,000 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.