2021

2021

ஆப்கானிஸ்தானில் பெருகும் வறுமை – தொழிலாளர்களாக மாறியுள்ள குழந்தைகள் !

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறுமை காரணமாக 20 சதவீத சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன.

பெற்றோர் பலர் வேலை இழந்ததால், குடும்பத்தின் வறுமையை போக்க சிறுவர்கள் திண்பண்டங்கள் விற்றும், கார்களைத் துடைத்தும், ஷூ பாலிஷ் செய்தும், குப்பை கூளங்களில் இருந்து மறுசுழற்சிக்குத் தேவைப்படும் பொருட்களை சேகரித்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“பிரபாகரன் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழி தோண்டிவிட்டான்.” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் !

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.  மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னுற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும்கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்மந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன். அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம்.

உங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முன்னேறியது போல, தொடர்ச்சியாக மக்கள் இந்த சமுர்த்தி உதவி திட்டங்களில் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கால்களில் தங்கியிருக்க வேண்டும். பிரதமரின் பிறந்தநாள், ஜனாதிபதியின் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் இடம்பெற்ற மத நிகழ்வுகளை மக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

துரதிஸ்டவசமாக எங்களுடைய தமிழ் அரசியல் எங்களுடைய பிரதேசங்கள் எல்லாவற்றையும் சூனியமாக்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசுக்கும் உள்ள புரிந்துணர்வுக்கூடாகதான் இவ்வாறான வாய்ப்புக்களை உங்களிற்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் இவ்வாறான மக்கள் கடமைகளை முன்னெடுப்பதற்கு, நீங்கள் எனக்கு பக்க பலமாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும்.

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவன். என்னுடன் இருந்தவர்களை கொன்றவன். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவன், கடத்தியவன். அவன் இறந்த முறை சம்மந்தமாக எனக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. இவ்வாறு அவர் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழிதோண்டிவிட்டான் என பரிதாபம் ஏற்பட்டது.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே. நீங்கள் எல்லோரும் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக.மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய கலந்துரையாடலிற்கு சில உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை. அவர்கள் வருகை தராமைக்கான காரணத்தை விளக்கமாக பெற்று தர வேண்டும். எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம் மாற்ற வேண்டி வரும். இது எனது சட்டபூர்வமான மக்கள் கடமை.

பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. கோபத்தில் சும்மா கதைப்பதேயன்றி மற்றபடி எனக்கு அந்த நோக்கம் இல்லை. நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு முன்வந்து பங்களிக்கின்றீர்களோ, அந்தளவு தூரம் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு வரலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சோமாலியாவில் உணவு , நீரின்றி தவிக்கும் 20 இலட்சம் மக்கள்.” – ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சோமாலியாவில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அங்குள்ள நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

சுமார் ஒரு இலட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் சோமாலிய மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பெறுகிறார் கமலாஹாரிஸ் !

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலா ஹாரிசிடம் அதிபர் ஜோ பைடன் ஒப்படைக்க  உள்ளார் என்ற தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் தீ விபத்துக்குப் பலி!!!

நேற்றுமாலை (நவம்பர் 19) தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லி பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் இறந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று மாலை இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இத்தீபத்தை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வண்டிகளும் 40 தீயணைப்புப் படையினரும் முயற்சி எடுத்திருந்த போதும் அவர்களால் வீட்டினுள் தீயில் மாட்டியவர்களை காப்பாற்ற முடியவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அந்த வீட்டுக்கு குடிவந்த குடும்பத்தில் கணவர் கடையொன்றில் வேலை செய்பவர். அவருடைய தாயார் தனது பேரப் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக லண்டன் வந்திருந்தவர். அவரது பயண ஏற்பாட்டின்படி அவர் இன்று இலங்கைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்ட் வசமாக நேற்று நடந்த இத்தீவிபத்தில் பேத்தியார், மருமகள் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கீழே கடையில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் இயக்குநர் ஆர் புதியவனின் சகோதரரின் குடும்பத்திலும் மூன்று தலைமுறையினர் உயிரிழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று லண்டன் போன்ற நகர்களில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்துமே பெரும்பாலும் இலகுவில் எரிந்துவிடக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டே கட்டப்படுவதால் இவ்வாறான தீ விபத்துக்கள் ஏற்படும் போது தீ மிக விரைவில் கட்டிடத்தை ஆக்கிரமித்து விடுகின்றது.

இந்த விபத்தில் இருந்து இவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாமைக்கு இவர்கள் மேல் மாடியில் இருந்ததும் தீ கீழ்ப்பகுதியை ஆக்கிரமித்ததுவுமே காரணம். யோகன் என அறியப்பட்ட கணவர் வீட்டில் இருந்து 20 நிமிட தொலைவில் உள்ள கடையில் பணியாற்றுகின்றார். மனைவி போனில் “நெருப்பு, நெருப்பு எனக் கத்தியதாகவும் அதனால் அவர் உடனே தன்னுடைய வீட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். அதற்குள்ளாக எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இப்போது யோகன் அபேவூட்டில் உள்ள தனது சகோதரியுடன் தங்கியுள்ளார். தன்னுடைய மகளின் பெயரைச் சொல்லி அழுதபடியுள்ளார்.

2017 யூன் கிரீன்பீல் ரவர் தீக்கிரையாகி எண்பது கொல்லப்பட்டனர். அதன் பின் இடம்பெற்ற உயிர்ச் சேதம் அதிகமான தீ விபத்து இதுவாகவே உள்ளது.

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – 18 பேர் வரை சுட்டுக்கொலை செய்த இராணுவம் !

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.அதன்பிறகு இராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய ஆட்சியை அமைத்தது. அதன் பிரதமராக அப்துல்லா காம்டோக் இருந்து வந்தார்.
கடந்த மாதம் 25-ந்திகதி அந்த அரசையும் இராணுவம் கலைத்தது. நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு சூடான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டது. ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது.

லண்டனின் தென்கிழக்கில் தீப்பரவல் – இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நால்வர் பலி !

தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மரணித்தவர்கள் அராலி வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் திருகோணமலை மற்றும் லண்டனில் வாழ்வதாகவும் சில முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள  வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.

One of the windows has blackened glass in it while the other has been completely blown out during the horror blaze last night

அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் அலறுவதைக் கேட்டதாகவும், தீப்பிழம்பில் மூழ்கிய தனி மாடி வீட்டிற்கு வெளியே ஒரு கலக்கமடைந்த நிலையில் ஒருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது உண்மையிலேயே ஒரு பயங்கரமான சம்பவம், இது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் தங்கள் எண்ணங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் உள்ளன என LFB கமிஷனர் அண்டி ரோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தத் தீவிபத்தில் மரணமானவர்கள் அராலி வடக்கை பிறப்பிடமாகவும், திருகொணமலை மற்றும் லண்டன வதிவிடமாகக் கொண்டவர்கள் என சமூகவலைத்தளப்பதிவுகள் தெரிவித்துள்ளன. எனினும் தீயில் மரணித்தவர்கள் குறித்து லண்டன் காவற்துறையினர் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

எரிந்து கொண்டிருக்கும் உலகின் நுரையீரல் !

பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதையே, இந்த காடு அழிப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது.
அமேசன் காடுகளில் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடியின மக்கள் உள்ளனர். புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பிரேசிலின் அதிபராக போல்சனரோ பதவியேற்ற பிறகே இவ்வளவு அழிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மந்திரி ஜோகிம் லீட் கூறுகையில், இந்த தரவு நமக்கு முன் உள்ள சவாலை உணர்த்துவதாகவும், இந்த குற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், கடந்த சில மாதங்களின் நிலைமையை இந்த தரவு சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
போல்சனரோ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகளை அழிப்பது அதிகரித்துள்ளது. மழைக்காடுகளில் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை போல்சனரோ ஊக்குவிக்கிறார் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.