23

23

13ஆவதி திருத்தத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – இந்தியா உறுதி

இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில்  நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணிலை நாடாளுமன்றம் அனுப்ப முயற்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அதற்கான நபரை பெயரிடுவதில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. புதிய பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் பெயர், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினரை அறிவிக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் 7 நாள் அவகாசம் கோரியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப செயற்குழு உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.