இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:
இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

