20

20

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.