27

27

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.