மாத்தறை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையும் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் புதிய நீச்சல் தடாகமும் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.
மாத்தறை நகரில் சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் நேற்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த போதே ஜனாதிபதி மேற்படி இரு நிகழ்விலும் கலந்து கொண்டு பதினேழரைகோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்கள் வங்கிக் கிளையையும் ஒன்றரை கோடி ரூபா செலவிலான நீச்சல் தடாகத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நேற்றுக் காலை மாத்தறை நகர புதிய மக்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் வங்கித் தலைவர் டபிள்யூ. கருணா ஜீவ உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றதுடன் வங்கிக் கிளையைத் திறந்து வைத்த ஜனாதிபதி வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்து அதன் நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜீவன் குமாரதுங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாயாரின் நினைவாக நேற்று மாத்தறை பாலடுவ குணரத்ன வித்தியாலயத்தில் இடம்பெற்ற புண்ணியோற்சவ நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அங்கு பிரசன்னமாகியிருந்த 600 புத்தபிக்குகளுக்கும் அன்னதானம் வழங்கிச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.