October

October

தமிழ்ச் சங்கத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்

வாசிப்பு மாதத்தையொட்டி ஒக் டோபர் மாதம் முழுவதும் வாசி ப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் முழுவதும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் அறிவோர் ஒன்றுகூடல் மற்றும் படித்ததும் பிடித்ததும் நிகழ் வுகளில் வாசிப்பை ஊக்குவிப்ப தற்கான சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு தமிழ்ச் சங்க நூல் நிலையத்தை அங்கத்தவரல்லாதவர்களும் பாவிப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் அனுமதி வழங்கு வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நூலக அங்கத்தவர்களாகச் சேருபவர்களுக்கு அங்கத்துவப் பணத்தில் 50% கழிவு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிப்பதற்கென புதிய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெனவும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.

தமிழருவி மணியனின் ‘காந்திய அரசியல் இயக்கம்’ ஆரம்பம்

Maniyan_thamilaruvi‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்னற தமிழருவி மணியன் இன்று (02 ஒக்ரொபர் 2009) ஆரம்பித்து வைத்தள்ளார். காந்தியின் பிறந்த தினமான ஒக்ரோபர் 2 அன்று உலக அகிம்சை தினமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த நாளான இன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ தமிழருவி மணியனால் இன்று  சென்னை பிலிம்-செம்பரில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக மேற்குலக விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நாடுகளில் வதியும் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து வந்த தமிழருவி மணியன் இவ்வரசியல் இயக்க வேலைகளைக் கவனிப்பதற்காகவே அவசரமாக நாடு திரும்பியதாக தமிழருவி மணியனின் வருகையை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தமிழருவி மணியன் வன்னி அவலத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசு யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்கத் தவறியதற்காக தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும் தமிழருவி மணியன் துறந்தார்.

மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்து கூட்டங்களில் உரையாற்றிய தமிழருவி மணியன் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மீது கொண்ட நம்பிக்கையும் அவர்களின் அரசியல் பலவீனமுமே இந்த அவலநிலைக்குக் காரணம் எனத் தெரிவித்து வந்தார். எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது எனவும் தமிழருவி மணியன் தான் கலந்துகொண்ட ஒவ்வொரு மேடையிலும் தெரிவித்து உள்ளார்.

‘காந்திய அரசியல் இயக்கம்’ ஒரு அரசியல் இயக்கம் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். காந்திய அரசியல் இயக்கம் கட்சி அரசியல் செய்கின்ற இயக்கமல்ல என்ற வகையில் அவர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

புலமை பரிசில் பரீட்சையில் ஹம்பாந்தோட்டை முதலிடத்தில்

021009-dep-of-edu.jpgஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று நண்பகல் 12:00 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தூர இடங்களில் உள்ள பாடசாலைகள் கல்வியமைச்சின் http://www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின்படி ஹம்பந்தோட்டை ரு{ஹணு விஜயபா மகா வித்தியாலய மாணவர் ஜே.ஏ.பிரமோத் டில்ஷான் 196 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

சீனாவின் 60 ஆவது தேசிய தினம்

02china_festivalss.jpgசீனா அதன்  60வது தேசிய தினத்தை நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புடன் பல விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சீனாவில், 1949ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சீனாவின் மாபெரும் தலைவர் மா சேதுங்கின் புரட்சியை அடுத்து,  இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து,  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

சீனாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததன் 60வது ஆண்டு விழா,  நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பீஜிங் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க தினான்மென் சதுக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சீனாவின் பலத்தை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பில், சீனாவில் தயாரான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,  அணு குண்டுகளை ஏந்திச் சென்று,  மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணைகள்,  நவீன டாங்கிகள் ஆகியவை பங்கேற்றன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில்,  கண்கவர் வாண வேடிக்கையும் நிகழ்த்தி காட்டப்பட்டது. பிரம்மாண்ட அணிவகுப்பை சீன அதிபர் ஜிண்டவோ பார்வையிட்டார்.

குருநாகலில் குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உட்பட 13 பேர் காயம்

021009kurunagala.jpgகுருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று  நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தனிப்பட்ட  குரோதங்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது

மலையகத்தில் அடைமழை – மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்

011009rain-in-upcountry.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மத்திய மாகாணத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன்கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியில் ஆங்காங்கே சிறியளவான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்மணி அரங்க முருகையன் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

லண்டனில் எம்மிடையே நீண்டகாலமாக வாழ்ந்து அண்மையில் 13.09.2009 அன்று மறைந்துவிட்ட தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களை அறியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்களோ, கல்விசார் சமூக அமைப்புகளோ இருக்க முடியாது.

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பிறந்தவர். தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டவர். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். தன் கணவனுக்கு ஈடுகொடுக்கும் தமிழறிவு மிக்கவர். தமிழ்மணி அரங்க முருகையன் அவர்கள் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த மலாயா நண்பன் நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து, 1972இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் நித்திலம் என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த இலண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வந்தவர் மட்டுமல்ல அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவருடன் தொடர்புகொண்ட எவரும் இதனை எளிதிலேயே புரிந்துகொள்வார்கள். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். அவரது தமிழ் அபிமானம் தீவிரமானது.

ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அமரர் அரங்க முருகையன் பின்னாளில் 1978இல் லண்டன், கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும், மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற இவரது நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன. கோயில்கள் பழங்காலத்திலே இயங்கியதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலையாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங்கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.

அரங்க முருகையனின் நாவலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இவர் ஈழத்தமிழர்பாற்கொண்ட பற்றின் ஆழத்தை தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற தலைப்பில் இவர் 1980இல் கும்பகோணத்தில் எழுதி வெளியிட்ட முதலாவது நூலே சான்றாகும். சோழர் வெற்றி என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அமரர் அரங்க முருகையன் லண்டனில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டுழைத்துவந்தார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூலாக பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு என்ற நூல் அமைகின்றது. மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. தன் வாழ்விலும் கனவிலும் தமிழ் இனத்தையும், மொழியையும், அதன் சிறப்பையும் மட்டுமே உயிராகக்கொண்டு வாழ்ந்த அந்தப் பெருமனிதன் 13 செப்டெம்பர் 2009 அன்று தனக்கு ஏற்பட்ட முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் உலகத்தமிழ் அறிஞர்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.

டோங்காவில் மீண்டும் நிலநடுக்கம்- சுனாமி பலி 189 ஆக உயர்வு

300909samova_tsunamy.pngசமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.

சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

வெளிநாடு சென்றுள்ள எமது நிபுணர்களை தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு

290909mahinda.jpgஎத்தகைய தடைகள் வந்தாலும் அரசாங்கத்தின் பயணம் தொடரும். நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கல்விமான்கள், நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டுச் செலாவணியில் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொறியியலாளர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் மிக அவசியமானதெனவும் தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் 103வது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பி. தயாரத்ன, மனோ விஜேரத்ன மற்றும் பொறியியல்துறை நிபுணர்கள், கல்விமான்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டின் தீர்க்கமானதொரு காலகட்டத்தில் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தமது 103வது நிறைவைக் கொண்டாடுகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இந்நாட்டில் பொறியியலாளர்கள், கல்விமான்கள் மட்டுமன்றி சகல துறையினரையும் அச்சுறுத்திய யுகத்துக்கு அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது. துப்பாக்கியால் மீட்கப்பட்ட நாட்டை கலப்பையினால் பாதுகாத்துக் கட்டியெழுப்பும் யுகம் தற்போது உருவாகியுள்ளது.

நாம் இந்த நாட்டில் பில்லியன் கணக்கில் நிதியைச் செலவிட்டு வீடுகள், பாலங்கள் என நிர்மாணித்தாலும் பயங் கரவாதிகள் ஒருகுண்டை வெடிக்க வைத்து அவற்றை அழித்தனர். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அங்கு பாரிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அஞ்சிய காலகட்டமொன்று இருந்தது. அந்த யுகத்துக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. படையினர் இந்த நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்காக எம்மிடம் கையளித்துள்ளனர்.

அரசாங்கம் தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுக ளிலிருந்து அதற்குத் தேவையான இயந்திர உபகரணங்களும் இந்நாட்களில் கொள்வனவு செய்யப்படுகின்றன. மஹாவலி போன்ற திட்டங்கள் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு என எப்பக்கம் சென்றாலும் அபி விருத்தியும் பல்வேறு நிர்மாண நட வடிக்கைகளும் இடம் பெறுவதை நாம் நேரில் காணலாம். வரலாற்றில் முன் னொருபோதுமில்லாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எமது தாய்நாடு என்ற உரிமையும் உணர்வும் நாட்டு மக்களிடையே காணப்படுகிறது.

வருடந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியலாளர்கள் எமது பல்கலைக் கழகங்களினால் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் தொழில், பிள்ளைகளின் கல்வி என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.  சிலர் இந்த நாட்டில் இருப்பது வீண் என்று நினைக்கின்றார்கள்.

யுத்தம் எமது பொறியியலாளர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒரு சாபமாக அமைந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை சகல இன, மத மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நமது பொறியியலாளர்கள் நிபுணர்கள் கல்விமான்கள் நாட்டில் இருக்கவேண்டும். அந்நியசெலாவணியால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கல்விமான்கள் புத்திஜீவிகளின் சேவை மிக அவசியமாகிறது.

பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தனியாருக்குக் கையளிக்கப்படவிருந்த காலமொன்று இருந்தது.  அதற்காக சிலர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். திறமையான பொறியியலாளர்கள் ஒரு நாளில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அரசாங்கம் தேசிய நிர்மாணக் கொள்கை யொன்றை உருவாக்கியுள்ளது.  இத்துறையை மேலும் கட்டியெழுப்ப கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

நிர்மாணத்துறை ஒப்பந்தங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை நாம் வெகுவாகக் குறைத்துள்ளதுடன் நம் நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் செயற்பாடுகளுக்காக நாம் கடன்களைப் பெறுகிறோம்.

எனினும் எவ்வித நிபந்தனைக்கும் நாம் அடிபணிந்து அவற்றைப் பெறவில்லை. எமக்குக் கடன் கொடுக்க வேண்டாமெனவும், ஜீஎஸ்பி சலுகையை எமக்கு வழங்கக் கூடாதெனவும் சில சக்திகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.

பொறியியல் துறையில் நாட்டை நேசி க்கும் முன்னுதாரணமான பொறியியலாளர்கள் பற்றி நாம் குறிப்பிடவேண்டும். இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேறும் நீரை வாய்க்கால் மூலம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல எஸ். ஆறுமுகம் ஆலோசனை முன்வைத்தார். ஆறுகள் இல்லாத யாழ்ப்பாணத்துக்கு ஆற்றை வழங்க அவர் முயற்சித்தார்.

இது மனிதாபிமானமாக சிந்திக்கும் செயல். அவ்வாறு இடம்பெற்றால் யாழ்ப்பாணம் மறு மலர்ச்சிபெறும். பொறியியலாளர்களால் இனங்களுக்கிடையிலான பாலத்தை மட்டுமன்றி மனிதாபிமான பாலத்தை உருவாக்கவும் முடியும். இது நாட்டுக்கு என்ன செய்யலாம் என சிந்திக்கின்ற யுகம்.

அவ்வாறு சகலரும் சிந்தித்தால் நாடு பெறுமதியானவற்றை பெற்றுத் தருவது உறுதி என்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.