28

28

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் நீண்டநேரம் பேச்சு

krishna.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுமென்றும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பற்றுறுதியுடன் இலங்கை அரசு செயற்படுமென்றும் இந்தியாவிற்கு நேற்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். இதன் போது அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்காக நன்றி தெரிவித்தார்.

கர்நாடக முதலமைச்சராகவிருந்த எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைச்சர் போகொல்லாகம கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் அண்மைய இலங்கை விஜயம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு இதன் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கிருஷ்ணாவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, சகல சமூகங்களும் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படும் என்பதையும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள செயலீடுபாட்டையும் வலியுறுத்திக் கூறினார். மேலும், வட பகுதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கியுள்ளார்.

அதே நேரம், இடைத்தங்கல் நிலையங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள 180 நாள் திட்டம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான பொது நலனை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவைக் கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் சார்க் அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சார்க்கின் நோக்கங்களை அடைவதற்காக இணைந்து செயற்படுவதெனவும் இருநாடுகளினதும் பிரச்சினைகளை நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

நிவாரணக் கிராமங்களில் ஒசுசல மருந்தகங்கள்

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஐந்து அரசாங்க ஒசுசல மருந்தகங்கள் உடனடியாக நலன்புரி நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சுகாதார பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் நலன்புரி நிலையங்கள் அமையப் பெற்றிருக்கும் ஐந்து வலயங்களில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் ஸ்தாபிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவருக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

அதேநேரம் அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஐந்து, ஒசுசல மருந்தகங்களை அமைப்பதற்குப் பொருத்த மான இடங்களைப் பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை செட்டிக்குளம் பிரதேசத்தில் மருந்துப் பொருள் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவர் ரன்ஜித் மலிகஸ்பே ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை அமைச்சரிடம் நேற்று கையளித்தார்.

நாட்டில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை

mosquito_preventionss.jpgநாட்டின் பல பாகங்களிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதனால் பொது மக்கள் விழிப்புடன் இருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் இலங்கையில் 75 போர் மரணமாகியுள்ளதாகவும் 52000 பேருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கண்டி, கம்பளை, கேகாலை, குருநாகல், களுத்துறை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதுள்ள காலநிலை நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமாக உள்ளதால் பொது மக்கள் தமது சூழலை தூய்மையாக வைத்து நுளம்புப் பெருக்கத்தை தடுக்க உதவ வேண்டும் எனவும் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருமுறிகண்டி ஆலயம், ரயில் நிலையத்தை மீள் நிர்மாணிக்க விரிவான ஏற்பாடு

யுத்தத்தினால் சிதைவடைந்துள்ள யாழ். திருமுறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலையத்தை மீள நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளில் இளைஞர் விவகார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.

இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்போடு இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனையொட்டி நான்கு பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இப் பேரணிகள் ஊர்வலமாகச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளன.

மகரகம நகரிலிருந்து இரத்தினபுரி சமன் தேவாலயம் வரை ஒரு பேரணி ஊர்வலத்தை மேற்கொள்ளும். காலி, முன்னேஸ்வரம், குருநாகல் பகுதிகளிலும் இப் பேரணிகள் இடம்பெறுவதுடன் முறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலைய மறுசீரமைப்புக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் ஐம்பது இலட்சம் ரூபா நிதியினைத் திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் கொடி தினத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும் இந் நடவடிக்கைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்க்க ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் – கல்வி அமைச்சு தகவல்

students1.jpgஅரசாங்கப் பாடசாலைகளில் அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் ஜயவீர தெல்பகொட மேலும் குறிப்பிடுகையில், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் சிபாரிசுகளுக்கமைய திருத்தியமைக்கப்பட்டுள்ள இச்சுற்று நிருபத்தின்படி 6 வகையான தரங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் ஏனையோர் தாம் தெரிவு செய்த பாடசாலை அதிபர்களிடமும் உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நேர்முகப் பரீட்சை மூலம் 33 பிள்ளைகளும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் 7 பிள்ளைகளும் நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படாத 2 பிள்ளைகளுமாக மொத்தம் 42 பேர் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.