15

15

இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் : திருமாவளவன்

manig.jpgஉடனடியாக போர் நிறுத்தம் செய்ய இல‌ங்கை அரசை இ‌ந்‌திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உடனடியாக நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை : அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத் தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்?

அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நாகரீகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும்.

எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்து வலுப்படுத்தும் வகையிலும் ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் ‌திருமாவளவ‌ன் கூறியுள்ளார்

இலங்கைத் தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு : ஜெயலலிதா வலியுறுத்தல்

j-j-j.jpgஇலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர் களுக்கு போட இந்திய ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி தவிக்கின்றனர். இலங்கை அரசின் இந்த இனவெறித் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கடுமையாக கண்டித்துள்ளன. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது குண்டுகளை வீச வேண்டாம் என அமெரிக்க அதிபர் கூட இலங்கை அதிபரை வற்புறுத்தியிருக்கிறார்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். எத்தனையோ தலைமுறைகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் வகையில் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அந்தத் தீர்வு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும் என்ற உளப்பூர்வமான சிந்தனை கருணாநிதிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறிதும் இல்லை. இலங்கை அதிபரோ யார் சொன்னாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று கூறி வருகிறார்.

போரில் எவ்வளவு தமிழர்கள் மடிந்தார்களோ அதைவிட பல மடங்கு தமிழர்கள் பசியால், பட்டினியால் செத்து மடிவார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் விமானத்தில் இருந்து உணவுப் பொட்டலங்களைப் போட, இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவம் எவ்விதத் தயக்கமும் இன்றி, சமைத்த உணவையும், காய்கறிகளையும், பழங்களையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் ஏர் டிராப் செய்ய, அதாவது விமானம் மூலம் வானத்தில் இருந்து போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், எங்கள் சொந்த உறவான தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பட்டினிச் சாவிற்கு உள்ளாக நேரிடும்.

எனவே எனது இந்த வேண்டுகோளை புறந்தள்ளாமல், கால தாமதம் ஏதும் இன்றி நடவடிக்கை எடுத்து, தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும். இது நாள்வரை செய்த வரலாற்றுப் பிழைகளுக்கு ஒரு பிராயச்சித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை இந்திய ராணுவம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நீடிக்கும்: இலங்கை அரசாங்கம்- இலங்கை வெளியுறவுச் செயலர்

palitha_koahana.jpgஇலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளுடனான மோதலை நிறுத்த சர்வதேச அளவில் கோரிக்கைகள் வெளியாகியுள்ள போதிலும், புலிகளுக்கு எதிரான தமது இராணுவத் தாக்குதலை தொடர்ந்து நடத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனிதாபிமானப் பேரவலம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

vanni0002.jpgகற்பனை செய்ய முடியாத அளவில் மனிதாபிமானப் பேரவலத்தை இலங்கையில் உள்ள தமது ஊழியர்கள் கண்ணுற்று வருகிறார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணிகளின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக தமது பணிகள் தடைபட்டு நிற்பதை தங்களால் ஏற்கமுடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்க செயல் இயக்குநர் பியெர் கிராஹென்பூல் கூறினார்.

தடையின்றி சென்றுவருவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் தங்களுக்கு கிடைக்கும் என்றால் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் எழலாம்: பிரிட்டன் எச்சரிக்கை

mullivaikaal-01.jpgஇலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் விளைவாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என பி.பி.சி இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிவிலியன்கள் கொல்லப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார தடைகள் மற்றும் இதர தடைகளை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நிலைபாட்டை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த விவாதத்தின்போது அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியக் கடனை வழங்க இது தருணமல்ல: ஹிலாரி கிளின்டன்

obama-hilari.jpgசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு சரியான தீர்வு ஒன்று முன்னெடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையை வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரியளவிலான நிதி உதவியை தற்போது வழங்கக் கூடாது எனவும் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தை உடனடியாக நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை வழங்குவதில் அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவின் அனுமதியின்றி சர்வதேச நாணய நிதியம் எந்த ஒரு நாட்டுக்கும் கடன் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் மீட்பு

mullivaikaal-02.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை  விடுவிக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கையில் 3765 சிவிலியன்கள் நேற்று 14ஆம் திகதி மீட்கப்பட்டதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
 
நேற்றைய தினம் 59ஆம் படைப்பிரிவினரிடம்  3250 சிவிலியன்களும்,  58ஆம் படைப்பிரிவினரிடம்  206 சிவிலியன்களும் 53ஆம் படைப்பிரிவினரிடம்  309 சிவிலியன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை 122,128 சிவிலியன்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட 55 இலங்கையர் இந்தோனேஷியாவில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 55 இலங்கையர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வக்கு மாகாண கரைப்பகுதியான ஆச்சேயிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் சேதமடைந்த மரப்படகொன்றில் இவ் 55 பேரையும் மீனவர்கள் பார்த்துள்ளனர்.

மீட்கப்பட்ட 55 பேரும் இரு கிலோமீற்றர்கள் நீந்தி வந்தமையால் சோர்வடைந்து காணப்படுவதாக தெரிவித்த ஆசே நகன் ரயா பொலிஸ் தலைமை அதிகாரி அரிச பியான்டோ இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக அவர்கள் செல்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தர்.

இக்குழுவினர் இலங்கையை விட்டு மே மாதம் 2 ம் திகதி புறப்பட்டுள்ளனர். மே 8இல் மலேசியாவில் தங்கியுள்ளனர். கைதான 55 பேரும் சுமார் 25-30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தங்களுடன் வந்த சிலர் காணாமல் போய்விட்டதாக இந்த இலங்கையர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சர்

maithripalasirisena.jpgபதில் பாதுகாப்பு அமைச்சராக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநலசேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக அவரது அமைச்சு அறிவித்துள்ளது.

ஜேர்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நாட்டுக்கு திரும்பிவரும் வரையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமைபுரிவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

முதலாம் தரத்துக்கான மாணவர் அனுமதியில் மாற்றம்

susilpremjayanth.jpgஅடுத்த வருடம் முதல் அரசாங்கப்பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே சமர்பித்திருந்தார்.

கடந்த வருட புது மாணவர் அனுமதியின் போது பாடசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதையடுத்தே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அதன்படி விண்ணப்பிக்கும் பாடசாலைக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு 50 புள்ளிகள் பழைய மாணவரின் பிள்ளை என்றால் 25 புள்ளிகள் சகோதரர்கள் கற்கிறார்கள் என்றால்  15 புள்ளிகள் மற்றும் இடமாற்றம் பெற்ற அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அரச ஊழியர்கள்மற்றும் கல்வித்துறையைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் என்றால் 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.