உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத் தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்?
அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நாகரீகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும்.
எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்து வலுப்படுத்தும் வகையிலும் ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்