14

14

நலன்புரி நிலையங்களுக்கு ‘யூனிசெப்’ 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

unicef.jpgஅரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  ‘யுனிசெப்’ நிறுவனம் முன்வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று , அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு எஞ்சுகின்றவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

அமைச்சர் நிமல் ஜெனீவா பயணம்

nimal-siriiii.jpgஉலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது வருடாந்த மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (13ம் திகதி) ஜெனீவா பயணமானார். இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை பதிலமைச்சராக சுகாதார மேம்பாட்டு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

62வது உலக சுகாதார மாநாடு எதிர்வரும் 18ம் திகதி முதல் 27ம் திகதிவரையும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரையும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விசேட உரையாற்றவுள்ளார்.

சப்ரகமுவ ஆளுநர் மொஹான் எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் 16ஆம் திகதி

ellawala.jpgகாலஞ் சென்ற சப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி பலாங்கொடை நகரில் நடைபெறவுள்ளதாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.61 வயதான மொஹான் சாலிய எல்லாவெல சுகயீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம்  பகல் காலமானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான  இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெல 1991ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலாங்கொடை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

வாகன விபத்தில் ரூபவாஹினி தொ.நு. ஊழியர் இருவர் பலி

வாகன விபத்து ஒன்றில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பஸ்யால – மீரிகம வீதியிலுள்ள ஹங்வான எனும் இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனவான் மற்றொருவானுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வத்துபிட்டிவெல அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரூபவாஹினி தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களான ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம். குணவர்தன, ஹோமாகமையைச் சேர்ந்த டி.ஆர்.எம். ஹிரிபிட்டிய ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருவரது மரணச் சடங்குகளுக்கான செலவை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்றுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டாலும் வேறு வடிவத்தில் அது மீண்டும் கொண்டுவரப்படலாம்

batticaloa-sri-lanka.jpgஉள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது வேறொரு உருவில் மீண்டும் கொண்டு வரப்படலாமென எச்சரித்துள்ள இ.தொ.கா. சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர். யோகராஜன், இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக மு.கா. தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த யோகராஜன் மேலும் கூறியதாவது;

“கிழக்கு மாகாண சபை, உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இன்று முறியடித்திருக்கிறது. இம் மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., ஜே.வி.பி. கட்சிகளுக்கு அரசாங்கத்தை விட 2 ஆசனங்கள் குறைவாக 17 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் அரச தரப்பில் 2 பேர் இச்சட்டமூலத்தை எதிர்த்தால் அல்லது வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டால் சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். தானிருந்து வந்த அமைப்பைக் காட்டிக் கொடுத்து வந்தவர் என்று என்னால் விமர்சிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை முழுமையாக எதிர்த்ததினால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தென்னிலங்கையில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களையும் காப்பாற்றி இருக்கிறார். அதற்கு அவரை நான் பாராட்டாதிருக்க முடியாது.

கிழக்கு மாகாணஅபிவிருத்திக்காக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி

abdul-majeed.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்காக இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். சின்னக் கிண்ணியா கோப் சிற்றி திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எஸ்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜீ. ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்