வாகன விபத்து ஒன்றில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பஸ்யால – மீரிகம வீதியிலுள்ள ஹங்வான எனும் இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனவான் மற்றொருவானுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வத்துபிட்டிவெல அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரூபவாஹினி தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களான ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம். குணவர்தன, ஹோமாகமையைச் சேர்ந்த டி.ஆர்.எம். ஹிரிபிட்டிய ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருவரது மரணச் சடங்குகளுக்கான செலவை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்றுள்ளது.