வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுள்ளனர்
May
May
பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் வைக்கப்பட்டுள்ள ‘முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன;. குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
பக்கச்சார்பற்ற முறையில் – சுதந்திரமாகப் – படமாக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகளும் முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டர் நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.
புலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அக்கட்சியில் சிலர் அண்மைக் காலங்களாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறி இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகின்றனர். கனரக ஆயுதங்களைப் பாவிக்க வேண்டுமென அவர்கள் கூறுகிறார்களா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
வன்னித் தாக்குதலில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டு மெனவும் பாவிக்கக் கூடாதெனவும் இரு வேறு கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-
ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரங்கே பண்டார அண்மையில் கனரக ஆயுதங்களை உபயோகிக்க வேண்டுமென சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேவேளை அக்கட்சியின் சிரேஷ்ட எம். பி., ஜயலத் ஜயவர்த்தன இதுபற்றிய தமது கவலையை தமிழ் தினசரியொன்றில் தெரிவிக்கிறார்.
மொத்தத்தில் இவர்கள் என்ன கூறவருகிறார்கள் என்பது குழப்பமாகவுள்ளதுடன் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும் கேட்கத் தோன்றுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய தனியார் மருத்துவக் கல்லூரி ஸ்தாபிப்பதை ஆட்சேபித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
அனைத்து மருத்துவக் கல்லூரியையும் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நேற்று நண்பகல் பொரளையிலிருந்து ஊர்வலமாக சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வார்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுவரும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரியை நிராகரித்தே இவர்கள் நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். அமைக்கப்பட்டுவரும் புதிய பல்கலைக்கழகத்தில் 10 சதவீதமான இட ஒதுக்கீடு சமுர்த்தி குடும்பங்கள் மற்றும் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளுவதற்கு அவசியமான மருந்துப் பொருட்களும், முகமூடிகளும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கிணங்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் இவற்றை இறக்குமதி செய்துள்ளது. இதேநேரம், பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
நேற்று வரையும் சுமார் 1500 பேர் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபாபலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை, பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்களுக்கு 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட வேண்டிய ஒசெல்டமிவிர் என்ற மாத்திரைகள் 15 ஆயிரம், இந்நோய்க்குள்ளாகும் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாணி மருந்து 240 போத்தல்கள், முகமூடிகள் இரண்டாயிரம் என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று கூறினார்.
அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் நேற்று முன்தினமிரவு கொழும்புக்கு கொண்டுவந்த இப்பொருட்கள் நேற்று மாலை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
சுமார் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துப் பொருட்கள் தற்போது இலங்கை வசம் உள்ளன. மேலும், ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும், முகமூடிகளையும் இறக்குமதி செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
![]()
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று (செவ்வாய்) பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த இவர்கள் அங்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை அவதானித்ததுடன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்களின் பெரும்பாலானவர்கள் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.
வவுனியாவில் பாடசாலைகள் உட்பட 24 இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் அருவிதோட்டம், ஆனந்தகுமாரசாமி வலயம் 1, கதிர்காமர், அருணாசலம் வலயம் 3, செட்டிகுளம் மகா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, இராமநாதன் வலயம் 2 ஆகிய பகுதிகளில் 13 ஆயிரத்து 428 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 785 பேர் தங்கியுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. ஏனைய 39 ஆயிரத்து 182 பேரும் வவுனியாவில் உள்ள 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பிரபல நடிகையான ரோஷி சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் கட்சியின் உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
புதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.
புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.
புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.
புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனித நேயத் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை 5 கோடி டாலர்கள் அவசர உதவி கோரியுள்ளது.
இலங்கை அரசும், உதவி நிறுவனங்களும் பெருமளவில் இடம்பெயர்ந்தோர்களின் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதம் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வந்ததன் காரணமாக, முகாம்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து தொண்ணூறாயிரமாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.