வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமென்று அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின் கீழும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கே. பீ. என்பவர், புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி, போராட்டத்தைத் தொடர்வார் எனக் கூறப்படுகிறதே” என்று செய்தியாளர் கேட்டபோது,
“கே. பீ.யைப் பற்றித் தெரியாது அவர் அவசியமும் இல்லை புலிகள் இயக்கம் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கே. பீ.க்கும் பிடிவிறாந்து உள்ளது. இலங்கையில் தீவிரவாதம் தோன்றுவதற்கான மூலாதாரமே அழிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாட்டை முடக்குவது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். குற்றவாளிகளைப் பரிமாறும் நடைமுறையும் உண்டு. இனி எவ்வகையிலும் தீவிரவாதம் வளர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.