April

April

நோர்வேயில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது

norwy-slhc.jpgநோர்வேயில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை தூதரகத்தின் கதவுகள், சாளரங்களை அடித்து நொருக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது

ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.

பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் – நோர்வே அரசு கண்டனம்
 
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் நோர்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது – நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து சிறீலங்கா அரசாங்கம் நீக்கியது

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.

1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை

2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவில் நக்ஸலைட் தாக்குதல்: 11 காவலர்கள் பலி

ஒரிசா மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய அலுமினியத் தாது சுரங்கத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நேற்று நடத்தியத் தாக்குதலில், மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

கோரபுட் மாவட்டம் பஞ்ச்பட்மாலி என்ற இடத்தில் தேசிய அலுமினியம் கம்பெனிக்கு (நால்கோ) சொந்தமான பாக்ஸைட் சுரங்கம் உள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் 100 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து 80 தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள், பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டதாக காவல்துறை தலைவர் எம்.எம். ப்ரராஜ் தெரிவித்தார்.

சுமார் 10 மணி நேரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் அனைவரும் சுரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு தப்பியோடி விட்டதாகவும், இந்த மோதலில் சிஐஎஸ்எஃப் காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். 

போர் நிறுத்தம்: இலங்கையை அழுத்தி வருகிறோம்- ப.சிதம்பரம்

chidambaram1.jpgபிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசிடம் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடி அருகே வடகுடியில் நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையி்ல்,

இலங்கைப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் பேசியும், அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இதிலே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசைப் பொறுத்தவரை 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசுகள் இந்த பிரச்சனையில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.

இது நமது கொள்கை இந்த கொள்கையில் முன்னேற்றம் கொண்ட காலமும் உண்டு, பின்னடைவு ஏற்பட்டதும் உண்டு. தற்போதைய பின்னடைவு நமக்கு மிகுந்த வருத்தத்தையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தத்தினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகத் தான் இன்று இந்தியாவோடு சேர்ந்து உலக நாடுகளும், ஐநாவும் சேர்ந்து போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றன. நேற்று முன்தினம் கூட ஐநா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து சில அழுத்தமான கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். மிகுந்த அழுத்தத்தோடு வற்புறுத்தி தெரிவித்திருக்கிறோம். போர் நிறுத்தத்தினை கோரிக்கை, வேண்டுகோளாக இல்லாமல் அதற்கும் மேலான தேவையாகவே கூறியுள்ளோம்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் போர் நிறுத்தத்திற்காக வற்புறுத்தி வருகிறோம். இதற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை நம்ப வேண்டும், ஆதரிக்க வேண்டும். மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.

அமைச்சரவையில் நடைபெறும் விவாதங்கள் முடிவுகளை அனைத்து அமைச்சர்களும் அறிவார்கள். மாற்று கருத்து இருந்தால் அப்போது தெரிவித்து இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த நிமிடம் வரை போர் நிறுத்தத்திற்கான தேவையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

புத்தள பகுதியில் ஐந்து கிராமவாசிகள் படுகொலை

புத்தள – மொனராகல வீதியில் அமைந்துள்ள மஹாகொடயாய பிரதேசத்தில் ஐந்து கிராமவாசிகள் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஐந்துபேரும் வயலில் வேலை செய்து வருபவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியா நிவாரணக் கிராம மக்கள் உறவினர், நண்பர்களை சந்திக்க அனுமதி

badurdeen.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை வெளியில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கு நேற்று (12) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 65 ஆயிரம் பொதுமக்கள் வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களினால் இவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்-சிங்கள புத்தாண்டை தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த ஒழுங்குகளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. சகல நிவாரணக் கிராமங்களிலும் விசேட வரவேற்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு நண்பர்கள் உறவினர்களினரிடையே புதுவருட பரிசில்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் என்பன பரிமாறவும் இதனூடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டிகையை முன்னிட்டு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் இராணுவமும் இணைந்து அங்குள்ள சிறுவர்களுக்கு பரிசில்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை அன்பளிப்புச் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.

பல வருடங்களாக புலிகளின் பிடியில் இன்னல்களுக்கு மத்தியில் புதுவருட பண்டிகையை கொண்டாடிய மக்கள் இம்முறை முதற்தடவையாக தமது உறவினர்களுடன் நிம்மதியாக பண்டிகை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு பண்டிகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அதுவரை மக்கள் பொறுமைகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புலிகளின் கடைசி அகழி படையினரிடம் வீழ்ந்தது – பெருந்தொகையான ஆயுதங்களும் மீட்பு

army-attack.jpgமுல்லைத்தீவு, அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் உள்ள படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற புலிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசி அகழிகளையும் கைப்பற்றியுள்ளனர். புலிகளை இலக்கு வைத்து படையினர் நடத்திய கடுமையான பதில் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள அதேசமயம் புதுக்குடியிருப்பின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் கடுமையான தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மிதிவெடிகள் – 150, அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் – 14, கைக்குண்டுகள் – 150, வெடிமருந்துகள், குண்டுகள் – 08, கனரக ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைதான 34 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 34 இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இவர்கள் நேற்று முன்தினம் இந்திய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

34 மீனவர்களும் 7 படகுகளும் கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக கடற் படைப் பேச்சாளர் கப்டன் மகேஷ் கருணாரத்ன தெரிவித்தார். மேற்படி மீனவர்கள் நீர்கொழும்பு, தெவிநுவர போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சுமார் 108 மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித் திணைக்களம் கூறியது.

ஏனைய 74 பேரும் விரைவில் நாடு திரும்புவர் எனவும் அதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. இவர்கள் தெவிநுவர, திருகோணமலை, தங்கல்ல, கோட்டகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த படகொன்றை மடக்கிய கடலோர காவல் படையினர் அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும், தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த படகும் அதில் இருந்த 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு காசிமேடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் அடைமழையால் நோயாளிகள் பாதிப்பு

trico.gifஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலும் வட பகுதியிலும் கடந்த சில தினங்களாகவே அடை மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக  புதுமாத்தளனிலிருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்படும் நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு எந்த ஒரு கப்பலும் புல்மோட்டைக்கு வரவில்லை என்று அங்குள்ள மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்தார். மழை தொடர்ந்தால் நோயாளிகளை இறக்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார், அங்கு மேலும் பத்து அவசர ஊர்திகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்திய வெளியுறவுச் செயலருடன் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்?

tna-mp-22.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளியுறவுச் செயலரின் அழைப்பையேற்று பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று உறுப்பினர்களுடன் மாவை சேனாதிராஜா நேற்று தமிழகம் சென்று ஆலோசனை நடத்திய பின்னர்தான இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதே நேரம், இந்தியாவின் அழைப்பை கூட்டமைப்பு உறுப்பினாகள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.  குறிப்பாக  என்.ஸ்ரீகாந்தா, இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகின்றது என்றும் முதலில் இந்தியா போரை நிறுத்தட்டும். அதன்பின் நாம் அவர்களின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணியுங்கள்

india-election.jpgஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரவிக்கும் முகமாக பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழக மக்களிடம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர்களில் ஒருவரான கார்த்திக் கூறுகையில்;

இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்படும் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி கடந்த 5 மாதங்களாக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இலங்கையில் நடக்கும் போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி செய்து வருகின்றது. இதற்கு சாட்சியாக அங்கு நடக்கும் போரில் காயமடைந்த 125 இந்திய இராணுவ வீரர்கள் நந்தம்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இலங்கையில் நடக்கும் போரில் இந்திய அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகின்றோம் என்ற பெயரில் சில கட்சிகள் போராடி வருகின்றன. இவை வாக்குக் கட்சிகள் தான். வாக்குகளுக்காக வேஷம் போடுகின்றனர்.

எனவே, இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.