April

April

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட வைத்திய சேவை – கிழக்கிலிருந்து வைத்தியர் குழு விரைவு

puthumathalan.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கு விசேட வைத்திய சிகிச்சையை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார். புல்மோட்டை, செட்டிக்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு விசேட வைத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை வைத்தியசாலையில் இருந்து டாக்டர் அஜ்வத் தலைமையிலான 4 வைத்தியர்களும், 4 தாதியர்களும் செட்டிக்குளத்திற்கும், மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் அச்சுதன் தலைமையில் 4 வைத்தியர்களும் 5 தாதியர்களும், வவுனியா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புல்மோட்டையில் வைத்திய சிகிச்சை அளிக்க டாக்டர் டிக்சன் தலைமையில் 4 வைத்தியர்களும் 4 தாதியரும் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிக்க குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான சுகாதார வைத்திய அதி காரிகள், தொற்று நோயியல் நிபுணர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

குடிநீரை மாசுபடுத்தினால் இரட்டிப்புத் தண்டனை – விரைவில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம்

sri-lanka-parliament.jpgசட்ட விரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளுதல், குடிநீரை மாசுபடுத்தல், குளங்கள், ஓடைகளுக்கு கழிவுநீரை திறந்துவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

1974 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர்வழங்கல் சட்டம் 1992 ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இன்று 16 வருடங்கள் கடந்த நிலை யிலும் இதனையே அமைச்சு இன்னும் பின்பற்றி வருகிறது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அன்றையதை விட இன்று மிகக் கூடுதலான நீர்வழங்கல் திட்டங்களை பராமரித்துவருகிறது. எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவகையில் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதையடுத்தே அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீரை மாசடையச் செய்தல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றுக்குள் கழிவு நீரை திறந்து விடல், கழிவுகளை வீசுதல், குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நீர் மானியில் மோசடி செய்தல், சட்டவிரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை அறவிடப்பட்ட தண்டப்பணத்தை இரட்டிப்பாக்குவதும் சட்டதிருத்தத்தில் பிரதானமாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமாக குடிநீரைப் பெறுவதையும் நீரை வீண் விரயம் செய்வதையும், தடுக்கும் நோக்குடனேயே இச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

பர்மா மீதான ஐரோப்பிய தண்டனைத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.

பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ள பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு கோரல்

jaffna-map.jpgநீதிமன்றம், அரச அதிபர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடனேயே யாழ்.குடாநாட்டில் பொலிஸார் போக்குவரத்துக் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். இவற்றின் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கும் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றையும் பொலிஸாரின் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் பொலிஸாரினால் அமுல் படுத்தப்படுகின்ற வீதிக்கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்;

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி யாழ்.குடாநாட்டில் பொலிஸாரால் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக வீதிக் காண்காணிப்பு நடைமுறைப் படுத்தப்படாமையால் மக்களை அவற்றுக்குப் பழக்கப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவர்களுக்கான வீதிப் போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கிவருகின்றோம்.

குடாநாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தினமும் யாழ்நகருக்கு வருகைதருகின்றனர். யாழ்நகரில் அமுல்படுத்தப்படுகின்ற வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனை அவர்கள் தங்கள் பிரதேசங்களிலும் கடைபிடிக்கின்ற போது விபத்துகள் குறைகின்றன. இதனாலேயே வீதிக் கண்காணிப்பு நடைமுறையில் நகர்ப்புறத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ் வீதிக் கண்காணிப்பின் போது மோட்டார் சைக்கிள்களில் இருவர் பயணித்தால் அவர்கள் இருவரும் தலைக் கவசம் அணிவது முக்கியமானதாகும். அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் வாகன வரி அனுமதிப்பத்திரம் என்பனவும் பரிசீலிக்கப்படுகின்றன. அத்தோடு துவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாகச் செல்வோரும் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இவ் வீதிக் கண்காணிப்பின்போது உரிய ஆவணங்கள் இல்லாதோர் மற்றும் விதிகளை மீறுவோருக்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து தண்டம் விதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது பாடசாலை மாணவர்களுக்கும் வீதிப்போக்குவரத்து தொடர்பான விபரங்கள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கிறது.

இவற்றோடு யாழ்.குடாநாட்டில் மக்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்கின்ற பொலிஸார் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் கூறினார்.

நிலநடுக்க பாதிப்பு விபரங்களை தெரிவிக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் கோரிக்கை

alert_towers1.jpg அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை காலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கோரியுள்ளார். கரையோரப் பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், லகுகலை ஆகிய பத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தே இது தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

அதிகளவில் பொத்துவில், லகுகலை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் அதிகமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய கரையோரப் பகுதிகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

கடல்கோள் போன்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடிய கருவிகள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அமைப்பது போன்று நிலநடுக்கம் தொடர்பாக முன்னறிவித்தல் சமிக்ஞை நிலையங்களும் கரையோரத்தில் மூன்று இடங்களில் அமைக்கவிருப்பதாகவும் அவற்றில் ஒன்று பாணமைப் பகுதியிலும் அமைக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியிலுள்ள மக்கள் கடல்கோள், நிலநடுக்கம் காரணமாக இந்தப் பீதி அச்சத்துடனும் இருப்பதாக பரவலாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னோடியாக மழையும் காற்றும் இடி மின்னலும் காணப்படுவதே பீதிக்குக் காரணமென சொல்லப்படுகிறது.

விரல் அடையாளப் பதிவுமுறையை நடைமுறைப்படுத்த விசேட நடவடிக்கை

அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போதுள்ள நேரப்பதிவு முறைக்குப் பதிலாக விரல் அடையாளப் பதிவு முறையைத் துரிதமாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளதுடன் விரல் அடையாளப் பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில துறைகளில் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உத்தியோகபூர்வமாக இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே மேற்படி சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட் டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்படி குறிப்பிட்ட 09/2009ம் இலக்க சுற்றுநிருபம் நாடளாவிய சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் பொருத்தப்படும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் சகல அரச நிறுவனங்களிலும் இச் செயற்திட்டம் நடைமுறைக்கு வருமென தெரிவித்த அவர், சகல அரச அதிகாரிகள் ஊழியர்களும் தமது உள்வருகை மற்றும் வெளிச்செல்கையை விரல் அடையாளப் பதிவு செய்தல் மூலமே உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல்: சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன

mexico_flu_.jpgபன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது

மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.

இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.

நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறிய வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட 600 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அரிசி உட்பட அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்த குற்றங்களுக்காகவே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் தமக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இதன் ஒரு அம்சமாக விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அரசாங்கம் ஏற்கனவே வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை வர்த்தகர்களுக்கு வழங்கியிருந்தது. எனினும் நிர்ணய விலையை மீறி சில வர்த்தகர்கள் அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இத்தகையோரே கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரவுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.