Multiple Page/Post

உலகத் தமிழர் பிரகடனம் – ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்

tamil-nadu.jpgஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
 
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு

1.  ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2.  தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.  தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.  இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.  உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.  அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: 

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்?  முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை.  ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும். 

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.                                                                                                

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது: 

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். 

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார். 

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என  கூறப்படுகிறது.

பிரதமரிடம் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டதால் சபையில் சர்ச்சை – 30 நிமிட நேரம் இருதரப்பும் வாத பிரதி வாதம்

26parliament.jpgபிரதமரால் ஏற்கனவே சபையில் பதில் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நேற்று (20) மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டதால் ஆளுந்தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சுமார் 30 நிமிட நேரம் சர்ச்சை நிலவியது.

எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்திருந்த ஒரு கேள்வி ஏற்கனவே பிரதமரால் பதில் அளிக்கப்பட்டது எனவும். அதேநேரம் அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டிருந்ததுடன் ஜோசப் மைக்கல் பெரேராவின் கையொப்பத்தைக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் கூறி அதனை மீண்டும் எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய கேள்வியை மீண்டும் கேட்பதற்கு அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் மறுத்துவிட்டார். ஜோசப் மைக்கல் பெரேரா, கட்சித் தலைவரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.

‘கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சபைக்கு வருகை தராததால் அவர் சார்பில் கேள்வி எழுப்ப உங்களை நியமிப்பதாகக் கூறியதால் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தினமும் சபையில் கேள்வி கேட்டு நாடகம் ஆடுகிர்கள்.

நாட்டைத் தவறாக வழிநடத்தி குழப்பப் பார்க்கிர்கள். இப்படித் தொடர்ந்தால் கட்சித் தலைவர் மாத்திரம் கேள்வி கேட்கலாம் என்ற விதியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் நாம் தள்ளப்படலாம் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

எனினும் இதனை மறுத்த ஜோசப் மைக்கல் பெரேரா இல்லை நான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் முழுமையான பதிலை அளிக்கவில்லை என்றார்.

அப்படியாயின் ஏன் நேருக்கு நேர் பிரதமரிடம் மறுத்துக் கேட்கவில்லை? என்று திருப்பிக் கேட்டார் சபாநாயகர்.

விவாதம் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதே.

சரி மீண்டும் எஎனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் அனுமதி தருகிறேன்.’

என்ற சபாநாயகர் டபிள்யூ ஜே. எம். லொக்குபண்டார, 17வது திருத்தச் சட்டத்தைத் தவிர்த்து வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி கேளுங்கள். அதற்குப் பிரதமர் அன்றே பதில் அளித்துவிட்டார். அன்று (18) எழுப்பிய கேள்விகளை மீண்டும் கேட்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். கேள்வி கேட்கப்படாமல் இந்தச் சர்ச்சையே சுமார் 30 நிமிடம் நீடித்தது.

மாலபே மாணவன் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை, அங்குலானவில் இரு இளைஞர்கள் கொலையுண்டமை இவற்றுக்கு காரணம் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை என்ற கருத்துப்பட கடந்த செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளையே ஜோசப் மைக்கல் பெரேரா மீண்டும் கேட்கவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

00jaffnabus.gif
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு வழிபடுவதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  பேருந்துகளில் புறப்பட்டு வந்த இவர்கள், வவுனியாவுக்கு வடக்கே ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பயண அனுமதி மறுக்கப்பட்ட தாங்கள் தங்குமிட வசதிகளின்றி சிரமப்பட்டதாக அந்த யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வந்திருந்தவர்களில் சுமார் 400 பேர் வரையில் வவுனியா மடுக்கந்தை பெளத்த விகாரையில் நேற்றிரவு தங்கியிருந்தார்கள். ஏ9 வீதி ஊடாக பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வரலாம் என ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையடுத்தே தாங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காகப் புறப்பட்டு வந்ததாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தார்கள்.

நாட்டின் தென்பகுதியில் இருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து கெப்பிட்டிகொல்லாவ, ஹொரவப்பத்தானை வழியாக வவுனியாவை வந்தடைந்ததாக இந்த யாத்திரிகர்களை ஏற்றிவந்த பேருந்துகளின் சாரதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது என ஓமந்தையில் வைத்து திருப்பிவிடப்பட்டதை அடுத்து, மடுக்கந்தை விகாரையில் நேற்று முன்தினம் இரவைக் கழித்துவிட்டு, மதவாச்சி ஊடாக அனுராதபுரத்தி்ற்குச் செல்வதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் இதனால் வவுனியாவில் இருந்து தாங்கள் மீண்டும் திருகோணமலை வீதிவழியாகவே செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கிய குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rajanikanth.jpgரஜினி காந்தின் திரைப்படங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி வழங்கியதாக இலங்கையின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணையத்தளம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள தமிழர் ஒருவரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் ரஜினிகாந்தின் படங்களை தயாரிப்பதற்கு நிதி வழங்கியதாக அவர் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் குசேலன் மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற எந்திரன் ஆகிய படங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரிசாட் பதியுதீன் லண்டன் தமிழர் என குறிப்பிட்டிருந்த லண்டன் கருணாஸ் ஐங்கரன் நிறுவனத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் குசேலன் திரைப்படம் கே. பாலசந்தர் அஸ்வின் டட் மற்றும் ஜீ. பீ. விஜயகுமார் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பிலேயே உருவாகியிருந்தமையை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ரோபோ என்று முன்னர் பெயரிட்பட்டு பின்னர் எந்திரன் என பெயர் மாற்றப்பட்ட ரஜினிகாந்தின் அடுத்தப் படமும் சன் டீவியினால் தயாரிக்கப்பட்டுவருகிறது. அது ஐங்கரன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படவிருந்தாலும் பின்னர் அது கைமாறி தற்போது சன் டீ வி நிறுவனத்தின் கைகளில் தயாரிப்பில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குற்றச் சாட்டு ஆதரமற்றது என டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

சயீட் அன்வரின் சாதனையை சமன்செய்த கொவென்ட்ரி தரவரிசையில் முன்னேற்றம்

17-charles-coventry222.jpgஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சயீட் அன்வரின் சாதனையை சமன் செய்த சிம்பாப்வே வீரர் சால்ஸ் கொவென்ட்ரி ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பங்களாதேஷடனான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 194 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்த 26 வயதான கொவென்ட்ரி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் முன்னேறினார். இதன்படி 103 ஆவது இடத்தில் இருந்த கொவென்ட்ரி 83 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இது தவிர, பங்களாதேஷடனான ஒருநாள் தொடரில் சோபித்த சீன் வில்லியம்ஸ், எல்டன் சிகும்புரா ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் சீன் வில்லியம்ஸ் 9 இடங்கள் முன்னேறி 47 ஆவது இடத்தையும் சிகும்புரா 6 இடங்கள் உயர்ந்து 50 ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த இருவரும் மாத்திரமே ஐ.சி.சி. ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் சிம்பாப்வே வீரர்களாவர்.

அதேபோன்று சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இரண்டு இடங்கள் முன்னேறி 36 ஆவது இடத்தை பிடித்தார்.

இதனிடையே ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தை இழந்தார். சிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய ஷகீப் அல் ஹஸன் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இதனால் நியூஸிலாந்து வீரர்களான கைல் மில்ஸ் மற்றும் டானியல் விட்டோரி ஆகியோர் முறையே 2, 3 ஆவது இடங்களுக்கும் முன்னேற்றம் கண்டனர்.

சர்ச்சையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க வீராங்கணை ஆணா பெண்ணா?

0000semenyabesar.jpgஜெர்ம னியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில் மகளிர் பிரிவின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யாவிடம் அந்தப் பதக்கம் தங்கியிருக்குமா என்பது குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவரிடம் நடத்தப்படவுள்ள பாலியல் பரிசோதனையில் அவர் பெண் அல்ல என்று கண்டறியப்படால் அவர் பதக்கம் இழக்க நேரிடும். பெர்லினில் நடைபெற்று வரும் போட்டிகளில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்டன் செமென்யா எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அற்புதமான அவரது சாதனையும் அவரது உடல் தோற்றமும் பெரிய அளவில் சர்ச்சையை ஈர்த்துள்ளன. போட்டியில் பங்கு பெறும் வீரர்களும், போட்டி அதிகாரிகளும் அவர் ஒரு பெண் தான் என்பதனை நிரூபிக்குமாறு கோரியுள்ளனர். எனவே 18 வயதான இந்த தென் ஆப்பிரிக்கர் சிக்கலான பல பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

பொது மருத்துவ வல்லுநர், மகப்பேற்று மருத்துவ வல்லுநர், ஒரு உளவில் நிபுணர் மற்றும் பாலியல் சோதனை வல்லுநர் ஆகியோர் அந்த வீராங்கணையை சோதித்து அறிக்கை வழங்குவார்கள்.  எனினும் இது தொடர்பிலான முடிவு வருவதற்கு பல வாரங்களாகும். மேலும் இந்தப் பிரச்சினையில் தற்போது அரசியல் கலப்பும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா- யாழ் ரயில் மீளமைப்புக்கு 42 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது

26parliament.jpgவவுனியா விற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் நிலையங்களை மீளமைப்பதற்காக 42 கோடி ரூபா உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘உதுரு மிதுரு’ திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ‘உதுருமிதுரு’ திட்டத்திற்கான பிரசாரப் பணிகளுக்கு ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டதாக ஜே.வி.பி. எம்.பி.

ஒருவர் பாராளுமன்றத்தலி பொய்யான தகவலொன்றை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பிரசாரப் பணிகளுக்கு ரயில் திணைக்களத்தினூடாக 10 இலட்சம் ரூபா கூட செலவிடப்படவில்லை. எனது நேரடிக் கண்காணிப்பின் கீழே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தவறான செய்திகளை பரப்பி சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்த வேண்டாமென கோருகிறேன்.

மோதல் காரணமாக சேதமான ரயில் நிலையங்களை மீளமைக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நிதியமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ரயில் பாதைகளை மீளமைக்க 42 கோடி ரூபா அனுசரணை கிடைத்துள்ளது என்றார்.

262 கோடி செலவில் ரயில் பெட்டிகள்

மற்றொரு வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் என்பன கொள்வனவு செய்வதற்கு 262 கோடி ரூபா செலவிடப்பட்ட தாகவும் இந்தக் காலப்பகுதியில் 100 ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் மற்றும் சிற்றுண்டி கூட பெட்டிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதில் 57 மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் 24 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் 6 சிற்றுண்டி கூட பெட்டிகளும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

ஊவா முதல்வராக சசீந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர குமார ராஜபக்ஷ, நேற்று ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சசீந்திர குமார ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரக்கன் நிற சால்வை ஒன்றையும் அணிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதே நேரம் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் இவ் வைபவத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கூட்டாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.

*  சசீந்திர குமார ராஜபக்ஷ முதலமைச்சர், நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி மன்றங்கள், கலாசார விவகாரம், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* செந்தில் தொண்டமான் – இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமூக சேவைகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்சக்தி, எரி சக்தி, புடவைக் கைத்தொழில், சிறு கைத் தொழில்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஏ.எம். புத்ததாச – சுகாதாரம், உண்ணாட்டு வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, நன்நடத்தை, மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* அனுர ரவீந்திர விதான கமகே – விவசாயம், கமநல அபிவிருத்தி, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீனவ கைத்தொழில், சுற்றாடல் மற்றும் சுற்றுலா ஆகியதுறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்.

* ஆர்.எம். குமாரசிறி ரத்நாயக்கா – நெடுஞ் சாலை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், நுகர்வோர் விவகார, கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர்.

இதேவேளை மாகாண சபை உறுப்பினர்களான டாக்டர் ரோகண புஷ்பகுமாரவை சபைத் தலைவராகவும், சாலிய சுமேதவை உப தலைவராகவும், ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ராஜா பந்துசேனவையும், சபை முதல்வராக விஜித பேருகொடவையும் மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ் வைபவத்தின் போது ஆலோசனை முன் வைத்தார்.

வன்முறைகளுக்கு நடுவே ஆப்கான் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன

vote000.jpgஆப்கானிஸ் தானில் கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்ததிருப்பதை அந்நாட்டின் அததிபர் ஹமீத் கர்சாய் பாராட்டியுள்ளார். வாக்குபதிவு தினமான வியாழனன்று மட்டும் எழுபது தாக்குதல்கள் நடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கர்சாய் அவர்களின் முக்கியப் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்ரஃப் கனி, நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே வந்திருப்பதாக ஆப்கானிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தபடியால், வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு கடைசியாக நடந்த அதிபர் தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது என காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் மூன்று மாதத்தினுள் மீள்குடியேற்றம்

26parliament.jpgதிருகோண மலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மூன்று மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத், சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் கூறினார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வை.எம்.நவரட்ன பண்டா எழுப்பிய, வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பில் பா.உ.நவரட்ன பண்டா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத், இந்த ஆண்டில் 2,88,938 பேர் இடம்பெயர்ந்ததாகவும், இதுவரை 59,600 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் 98% நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மட்டக்களப்பில் 35,766 குடும்பங்களும், திருகோணமலையில் 22,068 குடும்பங்களும், மன்னாரில் 669 குடும்பங்களும் அம்பாறையில் 51 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் 1054 குடும்பங்களும் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30ற்கு வழமைக்கு மாறாகப் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்னவின் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார சபா பீடத்திற்கு வருகை தந்தார்.

அமைச்சரின் பதிலுக்குப் பின்னர், துணைக் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, ‘சம்பூரில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்விடத்தில் மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் தொடர்ந்து இரண்டு வருடமாக ஐந்து முகாம்களில் உள்ளனர்” என்றார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வேறு இடங்களில் குடியமர மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சொந்த இடங்களுக்குச் செல்வதானால், பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நானறிந்தவரை சம்பூர் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை” என்றதுடன்,

அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கு நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.