ஜனாதிபதி யின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் (கபூரி) 57ஆவது வயதில் இன்று காலை காலமானார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத், கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.
பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்துக்காக பாடுபட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.தேசகீர்த்தி, தேசமான்ய, கீர்த்திஸ்ரீ, சாம மான்ய, தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.