Multiple Page/Post

இந்தியா – இலங்கை இன்று மோதல் : யுவராஜ்சிங் உடல் தகுதி

randiv.gifஇந்தியா,  இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை 4 ஆட்டம் முடிந்துள்ளன. அதன்படி நியூசிலாந்து 7 புள்ளியுடனும், இலங்கை 6 புள்ளியுடனும், இந்தியா 5 புள்ளியுடனும் உள்ளன.

5-வது “லீக்” ஆட்டம் தம்புள்ளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடும்.

கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத யுவராஜ்சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். அவர் இடம் பெறும் பட்சத்தில் வீரட் கோக்லி அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.

நாடு முழுவதும் இன்று இடியுடன் கடும் மழை – பலத்த காற்று; மின்னல் தாக்கம்:

rain0000.jpgதென் மேற்கு பருவ காலநிலை தீவிர மடைந்திருப்பதால் நாட்டின் பல பகுதி களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதென காலநிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது. சில இடங்களில் இன்று 100 மி.மீற்றருக்கும் கூடுதலான மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக் கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மேற்கு, சப்ர கமுவ, மத்திய மாகாணங்களில் பரவலான மழை பெய்யும். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதேநேரம், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் மழை பெய்யும்.

மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்குமென காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 90.6 மி.மீ மழை பெய்துள்ளது.

மலையகத்தில் நீரேந்து பகுதிகளிலும் கூடுதலான மழை பெய்துள்ளது. இதன்படி, லக்ஷபானவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 141.8 மி.மீ மழை பெய்துள்ளது. நோட்டன் பிறிட்ஜில் 138 மி.மீ மழையும் கென்யனில் 112 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதற்கிடையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 139.9 மி.மீ மழை கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வைத்தியர்களின் இலவச வைத்திய முகாம் நிறைவுபெறுகிறது

இலங்கை யிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையில் புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அமெரிக்க வைத்தியர்களின் இலவச வைத்திய முகாம் இன்று நிறைவுபெறுகிறது

சிறைக்கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்

இன்று காலை போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கைதி சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்த வேளை சிறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மேர்வின் சில்வாவுக்கு எதிராக நேரடி முறைப்பாடு எதுவும் இல்லை”

mervyn.jpgமேர்வின் சில்வாவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் போது ஊடகங்கள் சாட்சியமாக பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நேரடியான முறைப்பாடுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. ஆயினும் ஊடகங்கள் சாட்சியமாக செயற்பட்டிருந்தன. ஒழுக்காற்று விசாரணையின் போது இவை பரிசீலனைக்கு எடுக்கப்படும். விசாரணையின் போது என்ன தீர்மானம் எடுக்கப்படுமோ அச்சமயம் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவை முக்கியவிடயமாகக் கவனத்திற்கு எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லையென்ற குற்றச்சாட்டில் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்துடன் முன்னாள் பிரதியமைச்சர் கட்டிவைத்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியை இழந்ததுடன், சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது – கிளிநொச்சி அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மையான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார்.

தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார். கடந்த சமாதான முன்னெடுப்பு காலத்தில் காணிகளை விற்றவர்கள், அதற்கான உரிமை மாற்றத்தைக் காணி உறுதிகளில் மேற்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு சிக்கல்களை எதிர் நோக்குபவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரச அதிபர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் முகாமில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், அவர்கள் என்ன காரணத்தினால் மீளக்குடியமர முடியாதுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முழுமைப் படுத்தப்படாமையினாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் சில குடும்பங்கள் மீளக்குடியமர்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தவிரவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் தற்போது வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து மீளவும் வருபவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கரைச்சி பகுதியில் 70 குடும்பங்கள் மீளக் குடியேறியதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தற்போது சொந்த இடம் திரும்பி வருவதாகவும் அவர் சொன்னார்.

கிழக்கில் மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 42.3 மில். ஒதுக்கீடு

karuna.jpgகிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.

அமைச்சர் முரளிதரனின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இணை யாக அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த 42.3 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சேதத்துக்குள்ளான 482 வீடுகளை மீண்டும் புதுப்பிப்பதற்காக 27.3 மில்லியன் ரூபாவும் குழாய்நீர் கிணறுகள், மற்றும் குடிநீர்க் கிணறுகளுக்கென 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது என்றும் கருணா அம்மான் தெரிவித்தார்.

கல்குடா, வாகரை வடக்கு மற்றும் வாகரைமத்தி போன்ற பகுதிகளில் வீடுகளை புனரமைக்கும் திட்டத்துக்கும் போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முணை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு போன்ற பகுதிகளில் கிணறுகள், குழாய்க்கிணறுகள் திட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிடப் பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார். இதே போன்று கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் இவ் வாறான திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் 66 விபத்துகள் – 2009 இல் 20பேர் பலி;

நாடு பூராவும் பாதுகாப்புக் கடவைகள் அற்ற 569 ரயில்வே கடவைகளும் மூங்கில் தண்டுப் படலைகளுடனான 147 புகையிரத கடவைகளும் காணப்படுகின்றன. பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 2009 ஆம் ஆண்டில் 66 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.

2009 இல் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம் பெற்ற விபத்துக்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பான புகையிரதக் கடவை வழிகளை அமைப்பதற்கான பல திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புகை யிரதக் கடவைகளில் மின்சார மணிகள் அல்லது தன்னியக்க தடைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. பிரதானரயில் பாதையில் 11 உம் வடக்கு பாதையில் 7 உம் கரையோரப் பாதையில் 16 உம் புத்தளப் பாதையில் 17 உம் களனிவலி பாதையில் 11 உம் அமைக்கப்படுகின்றன.

வட பகுதியில் தலைமன்னாருக்கான பாதையை மீளமைக்கும் திட்டம், மாத்தறை-பெலியத்த ரயில் பாதை திட்டம் என்பவற்றின் போதும் பாதுகாப்பு கடவை களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழை நாடகம் – வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்

Mazhaiலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.

இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm

._._._._._.

Mazhaiமிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL  Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.

Mazhaiநிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.

தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.

Mazhaiபுரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.

டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.

அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.

Indira_Parthasarathyவாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.

இறைவனிடம் முறையீடு…

anoma.jpgபாராளு மன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று கொழும்பு முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபட்டார். இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் கலந்து கொண்டனர்.