Multiple Page/Post

முகாம்களிலும் சிறுவர் இல்லங்களிலும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.. மதபோதகர் தலைமறைவு!

மன்னார் சிறுவர் இல்லமொன்றில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சிறுவர் இல்லம் நேற்று புதன் கிழமை மூடப்பட்டது.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள ‘என் இரட்சகர்’ என்ற சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் பராமரிக்கப்பட்டு வந்தனர். மதபோதகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது 45) என்பவர் இதனை நடத்தி வந்தார்.  பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக மதபோதகர் அழைத்துச் செல்வதுண்டாம்.  இந்நிலையிலேயே சிறுமிகள் மீதான துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரு சிறுமிகளையும் வைத்தியப் பரிசோதனைகளுக்குட்படுத்துமாறும், குறித்த சிறுவர் இல்லத்தை முடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை நீதவான் இவ்வாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. மதபோதகர் தலைமறைவாகியுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Constantine_Tஇலங்கையில் இருந்து தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன்:

இச்சம்பவம் தொடர்பாக தற்போது இலங்கையில் உள்ள தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன் தகவல் அளிக்கையில் வடமாகாணத்தில் கிறிஸ்தவச் செல்வாக்குள்ள மன்னார் மாவட்டத்தில் எழுந்தமானமாக சில கிறிஸ்தவ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு புகலிடம் வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை துஸ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வறுமையும் சமூகக்கட்டுமானமும் சீரழிந்துள்ள சூழலில் இவ்வாறான தவறான சக்திகள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். வறுமை காரணமாக பல பெற்றோர் இவ்வாறான இல்லங்கள் பற்றிய எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை போலியான இல்லங்களில் ஒப்படைக்கின்றனர் எனத் தெரிவித்தார் ரி கொன்ஸ்ரன்ரைன். தாய் தலைமறைவான நிலையில் இரட்டைகளாகப் பிறந்த குழந்தைகளை வைத்தியசாலையில் இருந்து கிறிஸ்தவ சகோதரிகளால் முறையாகப் பராமரிக்கப்படும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்த காட்சியைத் தான் நேரில் பார்த்ததாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

இடப்பெயர்வுகள் முகாம் வாழ்வுகள் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ரி கொன்ஸ்ரன்ரைன் தற்போதுள்ள வவுனியா முகாமில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் அதகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வயது குறைந்த பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் முகாம்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும்பாலும் முகாம்களில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் சுட்டிக்காட்டினார். மேலும் பல பெண்களுடனான பாலியல் உறவுகளும் முகாம்களில் அதிகரித்துள்ளதாகவும் இவை மிகுந்த சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கட்டுப்படுத்த முகாம்களில் சைவ குருக்களை அழைத்து வந்து மத போதணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை இந்தச் சைவக் குருக்கள் மூலம் உபதேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான முகாம்கள் மூடப்பட்டுள்ள போதும் இறுதி யுத்தம் நடந்த பகுதிகளில் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களைச் சேர்ந்த மக்களும் எப்போதுமே தமக்கு நிரந்தர வாழ்விடத்தையும் நிரந்தர தொழில்வாய்ப்பையும் கொண்டிராத மக்களும் இன்னமும் முகாம்களில் தங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முகாம் வாழ்வுமுறை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல் – மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

pro.jpgருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

விடு தலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ள அரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள், வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதில்களிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. கே.பி. கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட அடிப்படை விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை விசாரணைகள் முடிவடையும் வரை கே.பி. பாதுகாப்புத் தரப்பின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கே.பி. அண்மைய தினமொன்றில் வன்னி பிரதேசத்துக்கான விஜயமொன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, அடிப்படை விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்து கொள்வதற்கென அவர் வன்னிப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.

”போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை” யாழ். வந்த ஐரோப்பிய பிரதிநிதிகள்

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவுற்றாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என நேற்று புதன் கிழமை  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்தள்ளனர். இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ். அரசாங்க அதிபர் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை யாழ். அரச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் நேரடியாக அவதானித்த வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் குறித்து தமக்கு திருப்தி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான் ஆனால், போர் முடிவுற்ற போதும் மக்களால் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியாத நிலை உள்ளது எனவும், பயங்கவரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் எனபன தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையே இத்றகுக் காரணம் எனவும்,  இந்நிலை நீடிக்குமானால் திட்டமிட்ட- கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் தோன்றா விட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பிரதிநிகளிடம் கலந்துரையாடலின் போது  சுட்டிக்காட்டினர்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களும் பிணையில் விடுவிப்பு.

விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான குற்றச்சட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவச்சிப்பாய்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருமதி கொஸ்வத்த பிணைமனு ஒன்றை கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.  இம்மனுவை ஆட்சேபித்து பாதிக்கப்ட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் வாதாடியிருந்தார். வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில்  20ஆம் திகதி பிணைமனு மீதான தீர்ப்பினை வழங்குவதாக நீதவான் பெ.சிவகுமார் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று 20ஆம் திகதி புதன்கிழமை குறித்த நான்கு சிப்பாய்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். இச்சிப்பாய்கள் 25 அயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒவ்வொருவரும் மூன்று பேரின் ஐந்து இலட்ச ருபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்த நீதவான் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாவதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

மன்னாரில் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பம். ஞாபகார்த்த விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ச் செம்மொழி மாநாடு மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழியல் துறையில் அரும்பணியாற்றிய பெரியோர்களின் பெயரில் ஞாபகார்த் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது பெறும் பதினைந்து பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தூது தனிநாயகம் விருதை ஜின்னா சரிபுதீன், அறுமுகநாவலர் விருதை பேராசிரியர் சிவலிங்கராஜா, சுவாமி விபுலானந்தர் விருதை பேராசியரியர் அ.சண்முகதாஸ், சோமசுந்தரப்புலவர் விருதை கவிஞர் மேமன்கவி, வித்துவான் ரகுமான் விருதை திருமதி ந.சிறீதேவி, சுவாமி ஞானப்பிரகாசர் விருதை பேராசிரியர் எம்.ஏ.நுஹ{மான், கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருதை வை.சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி), சின்னத்தம்பி புலவர் விருதை வே. இறைபிள்ளை, முதுதமிழ் புலவர் நல்லதம்பி விருதை அகளங்கன், அறிஞர் சித்திலெப்பை விருதை நா.யோகேந்திரநாதன், தாவீது அடிகள் விருதை டொமினிக் ஜீவா, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி விருதை திருமதி லீலாம்பிகை செல்வராஜா, ஈழகேசரி பொன்னையா விருதை பத்திரிகையாளர் கானமயில்நாதன், இசைப்புலவர் ந.சண்முகரட்ணடம் விருதை திருமதி விஜயகுமாரி, சிரித்திரன் சிவஞானசந்தரம் விருதை ச.யோகரத்தினம் ஆகியோர் பெறுகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் காயம்.

கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சி பாரதிபுரத்தில் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்த போது குண்டு ஒன்று பெரும் அதிர்வுடன் வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சியில் தினமும்  குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டு வருகின்றன. போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை துப்புரவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வெடிபொருட்கள் மீடக்கப்பட்டு அவை செயலிழக்கப்படுவதாலும் தற்செயலாக நிகழும் பல குண்டுகள் வெடிப்புக்களாலும் இச்சத்தங்கள் கேட்டுவருகின்றன. இக்குண்டு வெடிப்பினால் பொதுமக்கள், துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனவர்கள் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்பட்டள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

due-00000.jpgபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பெண்கள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர  நேற்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடீவுற்ற நிலையில் 11,696  புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. ஓகஸ்ட் மாதம் வரை இவர்களில் 4,485 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,881 ஆண்களும் 1,604 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வெண்ணிக்கையில் 594 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் பெண்கள் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இம்மாத இறுதியில் 500 பெண்கள் விடுவிக்கப்பட்டால் 27 பெண்கள் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் எஞ்சியிருப்பர் எனவும் அவர் குறிப்பட்டார்.

கர்தினாலாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை

copy.gifபரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் 24 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார். கொழும்பு மறைமாவட்ட ஆயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருக்கு இரண்டாம் இடத்தை வகிக்கும் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளார். 16 ஆவது பரிசுத்தப் பாப்பரசரினால் வத்திக்கானில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.45 மணியளவில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா,லத்தீன் அமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்காவுக்கான முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் கர்தினால்களில் அதிக எண்ணிக்கையானோர் இத்தாலியர்களாகும். 2 அமெரிக்கர்களும் இதில் அடங்கியுள்ளனர். புதிய கர்தினால்களில் வாஷிங்டன் டி.சி.யின் பேராயர் டொனால்ட் வூர்ல்,பேராயர் ஜேமன்ட் பர்க் ஆகியோர் அமெரிக்கர்களாவர்.  பேராயர் ரேமன்ட் பேர்க் வத்திக்கான் நீதிமன்றுக்கு தலைமை தாங்குகிறார். கருச்சிதைவுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் கட்சியை இவர் கடுமையாக விமர்சிப்பவராவார். இந்த அறிவிப்பை பாப்பரசர் புதன்கிழமை விடுத்திருக்கிறார். வார்சோ, மூளிக், கின்சாசா,  குயிற்றோ,  லூசாக்கா, சம்பியா, இலங்கை ஆகியவற்றுக்கு புதிய கர்தினால்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

Mareeni_ManuelpillaiDr_LittleAidஇலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். செப்ரம்பர் 17 இல் இடம்பெற்ற ஆண்டுக் கூட்டத்தில் லிற்றில் எய்ட் உறுப்பினர்கள் இவரை ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.

உதவித் திட்டங்கள் 
மே 18 2009 ல் பிரித்தாகனிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் இதுவரை 20க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. தமிழ் அமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவர்கள் இந்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தனர்.

லண்டன் அகிலன் பவுண்டேசன், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், தேசம், தீவக மேம்பாட்டு சமூகம் ஆகிய தமிழ் அமைப்புகள் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மனித நேயத் திட்டங்களை முன்னெடுக்கின்றன.

Medicine Without Border, Global Medical Aid, Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவிகளை மேற்கொள்கின்றன. Medicine Without Border, Global Medical Aid ஆகியவற்றின் உதவியுடன் லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் பவுண்ட் பெறுமதியான மருத்துவ உதவிகளைப் (பெரும்பாலும் மருந்துப் பொருட்கள்) பெற்று பெரும்பாலும் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவ மனைகளுக்கு விநியோகித்தது. அரசுசாரா நிறுவம் ஒன்று இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களை இலங்கையில் பெற்று விநியோகித்தது இதுவே முதற் தடவையாகும்.

எதிர்காலம்
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் ஆரம்ப காலங்களில் முகாம்களில் இருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை மேற்கொண்டது. மரக்கறி வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகளை வழங்கியது.

மேற்கொண்டு இடைக்கால நீண்டகாலத் திட்டங்களையே லிற்றில் எய்ட் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, ஆங்கலக் கல்விக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் திட்டமிட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புக் அப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 20 வரையான கணணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவையும் இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்படும். லிற்றில் எய்ட்க்கு முதலாவது காசோலையை  வழங்கிய எம் சூரியசேகரம் லண்டனில் இருந்து யாழ் சென்று மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கு வழக்கு
புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புகளில் லிற்றில் எய்ட் அமைப்பு தனது கணக்கு கோவைகளை திறந்ததாகவும் வெளிப்படையாகவும் வைத்தள்ளது.

www.littleaid.org.uk என்ற இணையத்தளத்தில் கணக்கு வழக்குகளைப் பார்வையிட முடியும். இது ஏனைய அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ரஸ்டிகள் – உறுப்பினர்கள்
லிற்றில் எய்ட் இன் தலைவி: டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை, செயளாயினி: சர்மிளா பெர்னான்டோ. பொறுப்பான இரு பதிவிகளையும் பெண்களே வகிக்கின்றனர். தனாதிகாரி: சிறில் அல்பிரட், திட்ட இணைப்பாளர்கள்: சண் ராசையா, நிஸ்தார் மொகமட், ஜெயபாலன் தம்பிராஜா, ரரின் கொன்ஸ்ரன்ரைன். இவர்கள் இலங்கையின் பல்கலாச்சாரத்தன்மையை பிரதிபலிக்கும் வைகயில் அமையப் பெற்றுள்ளனர்.

‘ரஸ்டிஸ் வீக்’ இணையச் சஞ்சிகை லிற்றில் எய்ட் தலைவி மரினி மனுவேற்பிள்ளையை ஒரு வாரத்திற்கான ரஸ்டியாக தெரிந்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:

தற்போது இலங்கை சென்றுள்ள ரிற்றில் எயட் திட்ட இணைப்பாளர்களில் ஒருவரான ரி கொன்ஸ்ரன்ரைன் அங்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். அவை பற்றிய விபரம் பின்னர் பதிவிடப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்