Multiple Page/Post

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

வன்னிப் பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள்.

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதோடு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் கல்வியை மேம்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளில் கூட ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரின்பின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் நிலையில் வன்னிப்பகுதி பாடசாலைகளில் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தினமும் யாழப்பாணத்திலிருந்தே வன்னிப்பகுதிக்கு கடமைக்கு பஸ்ஸில் வந்து செல்வதாகவும் இதனால் இவர்களின் கற்பித்தல் பங்களிப்பு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சிப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை!

தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் தெற்கு, வடக்கு. கரம்பகம், தனங்கிளப்பு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளதால் தங்களை விரைவில் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட இப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற பாதுகாப்புத்தரப்பினர் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மீன்குடியேற்றப்பட்ட மக்களில் ஊனமுற்றவர்களின் விபரங்கள் சமூகசேவைகள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.

பிரதேசச் செயலர் பிரிவுகள் தோறும் மக்களின் பிறப்பு, விபத்து, வன்செயல், நோய் போன்றவற்றினால் பாதிப்படைந்த ஊனமுற்றோர்களின் விபரங்கள் தற்போது திரட்டபட்டு வருகின்றன. நான்கு பக்க படிவங்கள் நிரப்பப்பட்டு ஊனமுற்றவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகின்றதோடு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ஆறு வகை அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இதன்மூலம் ஊனமுற்றோர் பல நன்மைகளை அடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிப் போராளிகளிகளுக்காக 40 இலட்சம் ரூபா செலவு.

போரின் போது சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் பேராளிகளிகளின் புனர்வாழ்வுக்கென ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் 40 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டன.

வடக்கில் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக வன்னிப்பகுதிகளில் மீள்குடியேற்றபட்ட மக்கள் அமைதியான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

போர் நடவடிக்கைகளின் போது தங்கள் உறவுகளை இழந்தவர்கள் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவில்லை. வன்னியிலுள்ள புடவைக் கடைகளில் தீபாவளி வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

158 முன்னாள் புலிகள் நேற்று விடுதலை.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 158 பேர் நேற்று வெள்ளிக்கிழமை தீபாவளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம், ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் வைக்கபட்டிருந்தவர்கள் அந்தந்த முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இலங்கையை நோக்கி நகர்கிறது ‘ஜல்’ சூறாவளி

jal.jpgதிரு கோணமலையிலிருந்து 750 கிலோ மீட்டருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணி ப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்று தெரிவித்தார். இச்சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.

இச்சூறாவளி குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திருமலையிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த 3ம் திகதி இத்தாழமுக்கம் உருவானது. இது நேற்று முதல் சூறாவளியாக மாறி நகர ஆரம்பித்திருக்கிறது. இச் சூறாவளிக்கு ‘ஜல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இச்சூறாவளி மணித்தியாலத்திற்கு 15 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர்களாக உள்ளது. இச்சூறாவளி இன்று 6ம் திகதி இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதாவது, திருமலையிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்குள் இச் சூறாவளி வந்து சேரும். அச்சமயம் இச்சூறாவளி தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் இன்று ஊடகங்களில் வளிமண்டலத் திணைக்களத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இச் சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்டியபடி கடலில் பயணம் செய்யும் என்பதால் அதன் தாக்கத்தை அப்பகுதி மக்களால் அதிகம் உணரக் கூடியதாக இருக்கும். அப்பிரதேசங்களில் இடி,மின்னலுடன் தொடர் மழை வீழ்ச்சி காணப்படும். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். இச்சூறாவளி காரணமாக அதிகரித்த காற்று, இடி, மின்னல் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இச்சூறாவளி காரணமாகவே கடல் கொந்தளிப்பாக உள்ளது. அதனால் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இச் சூறாவளியின் விளைவாகவே காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அப்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிய காரணத்தினால் அவரது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து அவர் சாட்சியமளித்துள்ளதோடு ஆணைக்குழவின் விசாரணைகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் முல்லத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றபோது, இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தஞ்சமடைந்திருந்ததாகவும் அவர்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19-01-2009 அன்று முல்லை மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கும்படி படையினர் தமக்கு தொலைநகல் முலம் அறிவித்ததாகவும், தான் இதன்படி சகல கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை எனவும் புலிகளுக்குத் தெரியாமலேயே அவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவ்வாறு செல்ல முற்படுகையில் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றப் போரில் பல அப்பாவிப் பொதுமக்கள் இறக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவில் இருந்த மக்கள் புலிகளினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலேயே இருந்தனர். புலிகள் மக்களோடு மக்களாக இருந்து படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதால் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சினாலும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களினாலும் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகள் எற்பட்டன. போர் கடுமையாக இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து வெளியே பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிபரான தான் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டச்செயலக ஊழியர்கள் சிலரும் உயிரிழந்தனர். பொதுமக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 20 வீதமானவற்றை புலிகள் கொண்டு சென்றனர். புலிகளின் தடையையும் மீறி போர் நடைபெற்ற பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளோடு சென்று படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சென்ற மக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. இன்னும் உயிருடனிருக்கும் பலரிடம் இது குறித்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்”

-இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.