‘இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அப்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிய காரணத்தினால் அவரது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து அவர் சாட்சியமளித்துள்ளதோடு ஆணைக்குழவின் விசாரணைகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் முல்லத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றபோது, இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தஞ்சமடைந்திருந்ததாகவும் அவர்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19-01-2009 அன்று முல்லை மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கும்படி படையினர் தமக்கு தொலைநகல் முலம் அறிவித்ததாகவும், தான் இதன்படி சகல கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை எனவும் புலிகளுக்குத் தெரியாமலேயே அவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவ்வாறு செல்ல முற்படுகையில் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றப் போரில் பல அப்பாவிப் பொதுமக்கள் இறக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவில் இருந்த மக்கள் புலிகளினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலேயே இருந்தனர். புலிகள் மக்களோடு மக்களாக இருந்து படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதால் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சினாலும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களினாலும் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகள் எற்பட்டன. போர் கடுமையாக இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து வெளியே பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிபரான தான் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டச்செயலக ஊழியர்கள் சிலரும் உயிரிழந்தனர். பொதுமக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 20 வீதமானவற்றை புலிகள் கொண்டு சென்றனர். புலிகளின் தடையையும் மீறி போர் நடைபெற்ற பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளோடு சென்று படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சென்ற மக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. இன்னும் உயிருடனிருக்கும் பலரிடம் இது குறித்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்”

-இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *