பாது காப்புப் படையினரால் தற்போது மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான பொது மக்களை தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள அதேசமயம், மருத்துவ நிபுணர்கள், மின்சார சபை அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசேட குழுக்கள் நேற்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக வந்துள்ள மக்களின் நிலைமைகளை விசேடமாக அவதானிக்கவென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினமும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று மற்றுமொரு குழுவுடன் சென்றுள்ளதுடன் இன்று இன்னுமொரு குழு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-
மீட்டெடுக்கப்பட்ட மக்களை நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கவென மேலதிகமாக 154 பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 58 ஆயிரம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் 6700 கூடாரங்களும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அருணாச்சலம், கதிர்காமர், வலயம் – 01 ஆகிய மூன்று நிவாரணக் கிராமங்களிலும், தாண்டிக்குளம், புதுக்குளம், ஓமந்தை, ஆண்டி புளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய ஐந்து பாடசாலைகளிலும் இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் 30 ஆயிரத்திற்கும், 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட மக்களே எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் வருகைதரவுள்ள மக்களையும் எந்த பாதிப்புக்களுமின்றி தங்க வைக்கவென ஆயிரம் ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரயான்குளத்தில் – 600 ஏக்கர், மெனிக்பாம் – செட்டிக்குளம் பகுதிகளில் – 200 ஏக்கர், மதவாச்சி – செட்டிக்குளம் பகுதிகளில் 200 ஏக்கர் காணிகள் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.