வவுனியா கற்குழி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்னால் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிபுணரின் கொலையைக் கண்டித்தும், அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தும் வவுனியாவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு வெள்ளை கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன் கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பொலிஸ், இராணுவ தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை நடவடிக்கைகளும் சில இடங்களில் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளத்தி்ல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் மொகமட் சுல்தான் மீரா மொகிதீனின் (52) உடலுக்குப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை ஊழியர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.