Multiple Page/Post

மெனிக்பார்ம் முகாமுக்கு ஜோன் ஹோல்ம்ஸ் விஜயம்!

john_holmes.jpgஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர்  ஜோன் ஹோல்ம்ஸ் இன்று வவுனியாவில் இடம்பெயந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த்hர்.

இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் இடம் பெயர்ந்தோர் நலன் பேண 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார்.

ஒபாமாவின் சரியான முன்னெடுப்பை எதிர்பார்க்கிறேன்: 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன்

parames.jpgஇலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, “இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்பினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களும், சர்வதேச கண்காணிப்பு இன்றி அல்லற்படுகின்றனர். இந்த நிலையிலேனும் அமெரிக்கா ஒரு சரியான, காத்திரமான முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

தமக்குச் சரியான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை எவராலும் தடுக்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதான ஊடக செய்திக்கு அரசு மறுப்பு

sri-lanka-flags.jpgயுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம்

ind-h-c.jpgஇலங்கை பிரச்சினை குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டினைக் கண்டித்து இன்று லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாடம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய தூதரகத்தின் வீசா வழங்கும் பகுதி கட்டிடத்தினுள் ஆர்ப்பாட்டகாரர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கையில் இராணுவ நடடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

வன்னி மோதல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இலங்கை அகதிகள்

mullaitheevu.jpgஇலங் கையின் மோதல் வலயத்திலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதர ஆரம்பித்திருப்பதாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த அகதிகளை முகாம்களுக்கு அனுமதிக்க முன்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர். தினமும் சராசரியாக மூன்று, நான்கு அகதிகள் தமிழக கரையில் படகு மூலம் வந்து இறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் அநேகமானோர் மோதல் வலயத்திலிருந்தே வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இதுவரை வரவில்லை. 45 – 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும் 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே வந்துள்ளனர். நாகபட்டினம் பகுதியிலேயே தற்போது அதிகமானோர் வந்திறங்குகின்றனர் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அகதிகளென்ற போர்வையில் புலி உறுப்பினர்கள் ஊடுருவுவதை தடுக்க தமிழக கரையோர நிர்வாகம் அதிக விழிப்புடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த அகதிகள் கூறுவது துன்பங்கள் , மரணங்கள் பற்றியதாகவே உள்ளது. சண்டையில் ஏற்படும் துன்பங்களுக்கு அப்பால் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவோ குடிக்க நீரோ இல்லை என்று அவர்கள் கூறுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் நலன்பேண சீனா 20 லட்சம் ரூபா அவசர நிவாரண உதவி

chinese-flag.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் பொது மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்கவென 20 இலட்சம் ரூபாவை இலங்கை அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்க இலங்கையிலுள்ள சீன தூதரகம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் யங் க்ஸியுபிங் இவ்விடயம் தொடர்பாக வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். குறுகிய காலப் பகுதிக்குள் எதிர்பாராத அளவுக்கு பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்து வந்திருப்பதனால் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக கடந்த 23 ஆம் திகதி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அமைச்சர் போகொல்லாகம அளித்த விளக்கத்தில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த அன்பளிப்பை வழங்க முன்வந்ததாக சீன தூதுவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அன்பளிப்பானது அரசாங்கத்தின் நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்குமென்று நம்புவதாகவும் சீன தூதுவர் யங் க்ஸியுபிங் தெரிவித்திருக்கிறார்

இடம்பெயர்ந்த சிவிலியன்களின் நலன்பேனும் விசேட குழுவின் பணிகள் ஆரம்பம்!

Wanni_War_Welfare_Campபுலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம்,  பொலன்நறுவை மற்றும் கண்டி ஆகிய 3 மவாட்டங்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இக்குழுவினர்,  இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள வவுனியா மாவட்ட செயலாளர்களுக்கு உதவி வருகின்றனர். இக்குழுவினர் அரசாங்க நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஜோன் ஹோல்ம்ஸ் – ஜனாதிபதி சந்திப்பு

john_holmes.jpgஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின்,  மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர்  ஜோன் ஹோல்ம்ஸ் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடவுள்ளார். இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்த ஜோன் ஹோல்ம்ஸ் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றிக் கலந்துறையாடியுள்ளார்.

இதேவேளை,  இவர் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களைச் சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் – சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpg சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் நடைபெற்று வரும் போரில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 17 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 35 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய உயர்நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இலங்கை சென்று திரும்பியது. அக்குழு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. குழு திரும்பி சென்றவுடன் 22 தடவை விமான குண்டு வீச்சுகளும், பீரங்கி தாக்குதல்களும், முப்படைத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து இனி இலங்கைத் தமிழர்களால் ஒரே நாட்டில் வாழ முடியாது. தமிழ் ஈழம்தான் இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என ஜெயலலிதா கூறியதற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு உலகம் முழுதும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் கடிதங்கள், மின்னஞ்சல் உள்ளிட்டவை மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவின் இந்த முடிவு இலங்கை அரசு பேரதிர்ச்சி கொடுக்கும். இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.