Multiple Page/Post

மேல் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்; பிரசன்ன ரணதுங்க முதலமைச்சர்

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடங்கலான மேல் மாகாண அமைச்சர்கள் இன்று (04) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். அலரி மாளிகையில் நடைபெறும் இந்த வைபவத்தில் அமைச்சர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சராக நியமிக்க ஐ. ம. சு. முன்னணி தீர்மானித்துள்ளதோடு நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களி லிருந்து தலா ஒருவரும் கொழும்பு மாவட்டத்திலி ருந்து இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் புதியவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

புலிகளின் மற்றுமொரு மண்அணை தகர்ப்பு – 4 1/2 சதுர கி.மீ. புலிகள் முடக்கம்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்துக்குற்பட்ட பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண்அணை நேற்றுக் காலை படையினரால் தகர்க்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஏனைய சிவிலியன்களும் படையினரை நோக்கி வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக்கடல் கடனீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையே நேற்றுக் காலை இராணுவத்தின் 53ஆம் படையணியினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நான்கரை சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு க்குள்ளேயே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. வலைஞர்மடத்தின் தெற்கிலும் தென்கிழக்கிலும் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றது. இதில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. மோதல்களின்போது நாளுக்குநாள் சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வரும் அதேவேளை பெரும் எண்ணிக்கையான புலிகளும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்தின் 53ஆம் 57ஆம் 58ஆம் மற்றும் மூன்றாம் படையணியினர் முல்லைத்தீவில் சிவிலியன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை 500 மீற்றர் நீளமான மண்அணையை தகர்த்ததன் மூலம் மேலும் பெருமளவிலான சிவிலியன்கள் வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிபுரிவது தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று கொழும்பில்

mahinda-samarasinha.jpgவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று (4) இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஐ. நா. வுடன் இணைந்து நடத்தப்படும் இந்த மாநாட்டில் இணைத் தலைமைத்துவ நாடுகள், உதவி வழங்கும் நாடுகள், தொண்டு நிறுவனங்கள் என்பன பங்கேற்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு நேற்று கூறியது.

வன்னியில் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு மேலும் பல வசதிகள் அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு அவர்களின் தேவைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் அடங்கிய பட்டியல் இன்று உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டினூடாக இலங்கைக்கு கூடுதல் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ. நா. தொண்டு நிறுவனங்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

வன்னியில் இருந்து வந்துள்ள மக்களில் சுமார் 1,67,330 பேர் வவுனியாவில் உள்ள 24 நலன்புரி நிலையங்களிலும் யாழ்ப்பாணத்தில் 11,150 பேரும் திருகோணமலையில் 4 ஆயிரம் பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக ஐ.நா. தொண்டு நிறுவனங்களும் உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.

இவர்களின் உதவிகளை கிரமமான முறையில் பெற அரசு திட்டமிட்டுள்ளதோடு ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திடம் இருந்தும் எத்தகைய உதவிகளை பெறுவது என்பது குறித்தும் இன்று ஆராயப்பட உள்ளன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ. நா. மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ¤டனும் வன்னி மக்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே மேற்படி உதவி வழங்கும் மாநாடு கூட்டப்படுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளது தெரிந்ததே.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கு விடுதலைப் புலிகள் ‘பாராட்டு’

pr-con.jpgபிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சென்ற வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தொடர்பில் விடுதலைப் புலிகள் அவர்களைப் பாராட்டியுள்ளனர். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்று இருதரபினரிடமும் அமைச்சர்கள் தமது பயணத்தின்போது வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அக்கறை காட்டியமைக்காக வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போர்நிறுத்தம் செய்வதையே தாங்களும் விரும்புவதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

islam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும் ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நடாத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிரமப்படுவோருக்கு உதவுமாறு இலங்கை முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தனது குத்பா பேருரையில், இஸ்லாம் பிறருக்கு உதவுவதை பெரிதும் வரவேற்கிறது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசமும் இதில் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் உயிர் சிரமப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகத்தெளிவாக எமக்கு கற்றுத் தருகின்றன. எனவே நாம் கஷ்டப்படுவோருக்கு துன்ப துயரத்திலிருப்போருக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அது உடலால், பொருளால், பணத்தால், ஆலோசனையால் எந்த தோற்றத்திலிருந்த போதிலும் பிற சகோதரனின் துன்பம் துடைப்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

எனவே நாம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உங்களால். முடிந்தவைகளை கொடுத்து உதவுங்கள் இஸ்லாம் கொடையை மிகவும் நேசிக்கின்றது. கஞ்சத்தனத்தை வெறுக்கின்றது.

இன்று முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி உண்டாகலாம். எமது முஸ்லிம் சகோதரர்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஈவிரக்கமின்றி உடுத்திருந்த ஆடையோடு வடக்கிலுள்ளவர்கள் விரட்டியடித்தார்கள் எமது சமூகம் அவர்களால் அகதிகளாக்கப்பட்டது. சொல்லொணாத் துன்ப துயரங்களை முன்னோக்கியது. இப்பொழுது நாம் உதவி செய்வதா?

எமது சகோதரர்களை விரட்டியவர்கள் இந்த அப்பாவிப் பொது மக்கள் அல்ல. இஸ்லாம் பழிக்குப்பழி வாங்குவதை கற்றுத்தரவில்லை. மாறாக அநியாயம் செய்தவர்களோடும் உபகாரம் செய்து வாழுமாறு எம்மை பணித்திருக்கின்றது. நபி(ஸல்) அவர்களை குறைஷிக் காபிர்கள் மக்காவிலிருந்து விரட்டியடித்தார்கள். எனினும் மக்கா வெற்றி கிடைத்தபோது நபியவர்கள் அவர்களனைவரையும் மன்னித்து விட்டார்கள். நாமும் அந்த உத்தம நபியின் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் இன்று இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று இன்று திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் – தங்காலையில் மூடப்பட்டிருந்த 8 பாடசாலைகளும் இன்று திறப்பு

schools_stu.jpgடெங்கு காய்ச்சல் தீவிர நிலை காரணமாக சுமார் ஒரு வார காலமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தங்காலைப் பிரதேச எட்டுப் பாடசாலைகளும்இன்று (4ம் திகதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். இந்த எட்டுப் பாடசாலைகளினதும் சுற்றாடல், சுத்தம் தொடர்பான கண்காணிப்பு இன்று முதல் நான்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிர நிலைமை காரணமாக தங்காலை வலயக் கல்விப் பணியகத்திற்கு உட்பட்ட எட்டு பாடசாலைகள் கடந்த 28ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டன.

தங்காலை மகளிர் வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசியப்பாடசாலை, தங்காலை ராகுல வித்தியாலயம், தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆரம்பப் பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டன.

தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பெறும் ஒரு மாணவியும், ஒரு மாணவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்தே இப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதேநேரம் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவும், டெங்கு ஒழிப்பு பிரிவும் இணைந்து தங்காலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளையும் துரிதப்படுத்தினர்.

‘டெங்கு காய்ச்சல் பரவுகை கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதத்திற்கு அமைய இந்த எட்டுப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவ தாகவும் தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ காங்கிரஸை சங்கடப்படுத்தும் சி.டி.

IDP_Camp_Injured_Manகுண்டு வெடிப்புக் காட்சிகள், அகோர மரணங்கள், அழுது புலம்பும் பெண்கள், கால்நடைகள் போன்று நீண்ட தூரம் காணப்படும் அகதிகள் என்பனவற்றின் பின்னணியிலான பாடல் அடங்கிய சி.டி.யானது இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ என்பது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சி.டி.யின் தலையங்கமாகும். இப்போது இச் சி.டி. பரந்தளவுக்கு சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இந்த சி.டி.யில் விடுக்கப்பட்டுள்ளது.

16 நிமிடங்கள் அடங்கிய இச் சி.டி.யானது பார்ப்பவர்களின் அபிப்பிராயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிக்கும் ஒரு செயல்

இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பௌத்தர்களின் எதிர்ப்புக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிப்பதுடன் இந்து மதத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இரத்தினபுரி மாவட்ட இனணப்பதிகாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.டி இராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலய பரிபாலனசபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டமை இறக்குவானை பிரதேச மக்கள் மத்தியில் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரா பௌர்ணமி தினத்தில் பதுளை, அட்டன் போன்ற பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் இரதபவனி இடம்பெற்று வருகிறது. ஆனால் இறக்குவானைப் பிரதேசத்தில் மாத்திரமே பௌத்தர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரியவர்களுடன் கலந்துரையாடி சாதகமான முடிவை பெற்றுத்தர வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்: தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை

era_thurairatnam.jpg மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடித்ததில்;

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமமான கெவுளியாமடு கிராமசேவையாளர் பிரிவு இல.135, கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது அங்கு குடியிருந்த 106 குடும்பங்கள் இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் அநேகமானோர் வேளாண்மை, மீன்பிடி, மேட்டுநிலப்பயிர்செய்கை, வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வந்ததோடு விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களுக்கும் மேட்டு நிலங்களுக்கும் உரித்துள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர்.

சுமார் 18 வருடகாலமாகியும் அப்பிரதேசத்தில் இருந்து வந்த யுத்த சூழ்நிலை காரணமாக உயிருக்குப்பயந்து மீண்டும் சொந்த இடம்போக முடியாமல் எப்போது சொந்த இடத்திற்குப் போவதென எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்த போது அனைத்து பொருளாதார வளங்களையும் இழந்தனர்.

தற்போது இப்பகுதியிலுள்ள வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் காடாக காட்சியளிப்பதோடு சில வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டும் சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டும் ஒருசில நிறுவனங்களினால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டும் ஓரிரு குடும்பங்கள் வாழ்ந்தும் வருகின்றன.

இவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. கடந்தவாரம் இப்பகுதிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில் பார்வையிடச்சென்றபோது அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அரசாங்கம் தமிழ்மக்கள் வாழ்ந்த கெவுளியாமடு கிராமத்தில் நடக்கின்ற அத்துமீறிய குடியேற்றத் திட்டத்தை நிறுத்த வேண்டும்.இந்தக் குடியேற்றத்தை தற்காலிக மேற்பார்வை செய்வதற்காக இக்கிராம சேவையாளர் பிரிவு உகணைப் பிரதேசசெயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதோடு இப்பிரதேசமக்கள் மேற்படி பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தங்களது விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும் இதைத் தொடர்ந்து இவர்களுக்குரிய காணாமல் போன கால்நடைகளுக்குப் பதிலாக கால்நடைகளை வழங்கி மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதற்கும் சம்பந்தப்பட்டோர் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தில் வசிப்பதற்கும் வீட்டுத்திட்டத்தை ஒரே இடத்தில் கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.