Multiple Page/Post

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம் !

வடமேல் மாகாணத்தில் ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றும் 138 அதிபர்களை மே மாதம்  20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு வடமேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள அதிபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தைத் தவிர்ந்து வேறு எந்த காரணத்திற்காகவும் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட மாட்டாது என வடமேல் மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

யாழ் மாநாகர சபைக்கும் போக்குவரத்தை கண்காணிக்க CCTV கெமராக்கள் வரவுள்ளது ! 4000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

யாழ் மாநாகர சபைக்கும் போக்குவரத்தை கண்காணிக்க CCTV கெமராக்கள் வரவுள்ளது ! 4000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள CCTV கெமராக்கள் மூலம் வாகன விதிமீறல்களைக் கண்டறியும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவ்வப்பகுதி நகர சபைகளாலும் மாநகர சபைகளாலும் தத்தம் பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவ்வப் பிரதேசங்களுக்கான நிதிமூலமாகவும் அமையும்.

இதன் அடிப்படையில் மாநாகரசபையும் வீதிப் போக்குவரத்து மற்றும் நகரின் பாதுகாப்பைக் கண்காணிக்க சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. கள்ளமண் ஏற்றுவது, கனியவளங்களைக் களவாடுவதைத் தடுப்பதிலும் இக்கமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே யாழ் மாநகரசபை குப்பைகளைப் அதற்கான இடங்களில் போடாமல் வேறு பிரதேசங்களில் கொட்டுபவர்களைக் கண்டறிய சிசிரிவி கமராக்கள் மயன்படுத்தப்படுவது பற்றி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உரிய முறையில் உரிமை மாற்றப்படாத 241 வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் விற்பனை செய்யப்படும்போது, உரிமை மாற்றம் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 724  வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களால் 764 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 1,535 கடுமையான விபத்துக்களும், 2,699 சிறிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சங்கின் வேட்புமனுக்களை ஏற்க நீதிமன்றம் உத்தரவு !

சங்கின் வேட்புமனுக்களை ஏற்க நீதிமன்றம் உத்தரவு !

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நீராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தேர்தல் கூட்டணி சார்பில் நேற்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் என்பிபி அரசாங்கம் அதாவது ஜனாதிபதி உட்பட்ட அமைச்சர்கள் அடிக்கடி வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து தமக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலே பிரயோசனமாக இருக்கும். ஏனெனில் என்பிபி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வெற்றி பெறும் சபைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்து மறைமுக அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன். இவ்வாறான அச்சுறுத்தல் தேர்தல் விதிமீறலாக இருந்தும் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமலும் இருக்கிறது என புகார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் உள்ளூராட்சி சபைகள் மாகாண சபைகளுக்குட்பட்டவை. ஆகவே இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் மாகாண சபைகளுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என்றார்.

அத்துடன் ஜனாதிபதி அநுர தனது சகோதரனும் காணாமலாக்கப்பட்டுள்ளார். அந்த வலியை நாங்களும் அனுபவித்துள்ளோம் என்று கூறுகிறார். அதேநேரம் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் அனுர அரசாங்கம் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

ஆனால் சமீபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கிலேயே பிள்ளையான் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படு பிரதான குற்றவாளியாக ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளார். ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதைதான் சுரேஸ்ஸின் பேட்டி என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

போராளி துரோகியானதும், போராளி பயங்கரவாதியானதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு ! பிள்ளையான், கருணா, சுரேஸ், சித்தார்த்தன், டக்ளஸ் கைது செய்யப்படலாம் !

போராளி துரோகியானதும், போராளி பயங்கரவாதியானதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு ! பிள்ளையான், கருணா, சுரேஸ், சித்தார்த்தன், டக்ளஸ் கைது செய்யப்படலாம் !

மண்டையன் குழு தலைவராக செயற்பட்ட என்று குற்றம்சாட்டப்பட்ட ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐபிகேஎப் காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக கைதாகலாம் என என்பிபி யாழ் எம்பிகள் மூலம் தகவல்களை கசிய விட்டுள்ளனர். அத்துடன் ஈபிடிபி தலைவர் டக்களஸ் தேவாநந்தா சட்டவிரோத கட்டிடங்களை கையகப்படுத்தியமை தொடர்பிலும், மகேஸ்வரி நிதியத்தின் மூலமான மண் ஊழல் மற்றும் ஊடகவியலாளர்கள் நிமலராஜன் மயில்வாகனம் கொலை வழக்கிலும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது. கிழக்கில் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பிள்ளையான் கைதாகியது போன்று வடக்கிலும் கைதுகள் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

யார் இந்த மண்டையன் குழு என்றால் இந்திய இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய ஒரு துணை இராணுவக் குழுவாகும். இந்தக் குழுவுக்கு தற்போதைய ஈபிஆர்எல்எப் தலைவராக இருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எனக் கூறப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் அல்லது அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் மண்டையன் குழுவால் கடத்தப்பட்டார்கள். அசோக்கா ஹோட்டலில் வைத்து கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். மண்டையன் குழுவிடம் சிக்கியவர்களை அவர்கள் கொலை செய்யும் பாணி மிகக் கொடூரமானது எனக் கூறப்படுகிறது. உடம்பில் இருந்து தலையை துண்டித்து, தலைவேறாக முண்டம் வேறாக வீதிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அக்காலத்தில் யாழ் நகரத்திற்கு தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது தலை அறுக்கப்பட்ட முண்டங்களையும் தலைகளையும் வீதிகளில் கண்டு தாம் வேதனையும் கோபமும் கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு தலையை துண்டித்து கொலை செய்யும் பாணியை கடைப்பிடித்ததாலேயே இவர்கள் மண்டையன் குழு என அழைக்கப்பட்டார்கள். மற்றும் மண்டையன் குழுவினர் பேனாக்குச்சிகளை காதுகளில் அடைத்தும், சோடாப்போத்தல்களை மலவாசல் ஊடாக செலுத்தியும் சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது .

இவ்வாறான ஒரு சித்திரவதையில் உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் வயிற்றுப் பகுதியிலிருந்து சோடாப்போத்தல் ஒன்று அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை 1988 களில் பெரும் பேசு பொருளாக இருந்தது. இந்த சம்பவத்தை முரசொலி பத்திரிகையில் அதன் ஆசிரியர் திருச்செல்வம் எழுதியிருந்தார். அதனால் ஆத்திரமடைந்த மண்டையன் குழுவினர் நல்லூரில் இருந்த பத்திரிகையாசிரியர் திருச்செல்வத்தின் மகனான கடத்திச் சென்றனர். சென் ஜோன்ஸ் மாணவனான அகிலன் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இன்று வரை இந்த வழக்கால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான பயணத்தடையை கனேடிய அரசாங்கம் விதித்துள்ளது. ஏனெனில் கொலை செய்யப்பட்ட அகிலனின் குடும்பம் அதாவது தந்தையான திருச்செல்வம் கனடாவில் தான் வாழ்கிறார். அகிலனின் தந்தை தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டு தற்போது வரை போராடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மண்டையன் குழு ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. குறிப்பாக உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கி எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதை விடவும் மண்டையன் குழு கட்டாய ஆட்ச்சேர்ப்பிலும் ஈடுபட்டனர். மேலும் 1989 ஆண்டு காலப்பகுதியில் யாழில் வர்த்தகர்களிடம் இவர்கள் மிரட்டி கப்பம் கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தந்தையை கொலை செய்ய முயன்றதாகவும், தந்தை தலைமறைவாக, தனது மூத்த இரு சகோதர்களை கடத்தி அசோக்கா ஹோட்டலில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக எம்பி இராமநாதன் அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு நேற்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இது வெறுமனே தனிநபர் தாக்குதல் என்றார். என்பிபி அரசாங்கம் தன்னை நோக்கி கேள்வி கேட்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் மீது சேறு பூசவென சில ஊடகங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கியுள்ளது. அவர்கள் ஊடாக தமிழ் மக்களிற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள் மீது சேறு பூசல்கள் நடப்பதாக கூறி மறைமுகமாக இது ஒரு அரசியல் என்று கடந்து சென்றார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் போன்றே ஈபிஆர்எல்எப் இலிருந்து பிரிந்த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவாநந்தா மீதும் கடத்தல், கப்பம், காணமல் ஆக்கப்படல், சட்டவிரோத கட்டட அபகரிப்பு, ஊழல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவரும் விரைவில் கைதாகலாம் என என்பிபி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்.

மண்டையன் குழுவாக இந்திய இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கியது சுரேஸ் பிரேமச்சந்திரன் அல்ல ராசிக் குழுவென்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் பழி சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது வீழ்ந்துவிட்டது. ராசிக் குழுவினர் பின்னர் இலங்கை இராணுவத்தின் அங்கமாக மாறி, படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை இராணுவத்தின் மேஜராக மரணித்தார். இதே வரலாறு புளொட் மோகன் என்பவருக்கும் உண்டு.

அதேபோன்று டக்ளஸ் தேவாநந்தாவின் ஈபிடிபி, புளொட், பிள்ளையான் மற்றும் கருணா குழுவில் இருந்தவர்களில் சிலர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக இயங்கினர். இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவாக வெவ்வேறு காலகட்டங்களில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. பிரபாகரன் உயிருடனிருந்திருந்தால் அவர் இலங்கையில் அல்லது இந்தியாவில் சிறையில் தான் இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்பதே யதார்த்தம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் கடத்தில், கப்பம், படுகொலை, சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டவர்களே. இவர்கள் அனைவரது கரங்களிலும் இரத்தக் கறைகள் உள்ளது. பிரபாகரனும் விதிவிலக்கல்ல. ஒரு தரப்பின் போராளிகள் மற்றைய தரப்பின் துரோகிகள். பயங்கரவாதிகள். இந்த முரணுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை.

1986 மே ரெலோ தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் மொத்த குத்தகைக்கு எடுக்கப்பட்டது. ஏனைய போராளிக் குழுக்கள் தேடி அழிக்கப்பட்ட போது அவர்கள் எதிரியான சிறிலங்கா இராணுவத்தினரிடமே சரணடைந்தனர். பழிவாங்கல்களில் ஈடுபட்டனர். 2009 இல் ஏனைய இயக்கங்கள் போல் புலிகளின் தலைமையும் அவர்களோடு அப்பாவி மக்களும் பேரழிவைச் சந்தித்தனர். முதல் கோணல் முற்றிலும் கோணலாகியது.

கடந்த காலத்து அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அது வெற்று அரசியல் கோஷமாக இல்லாமல் பழிக்குப் பழிவாங்கும் மனோநிலையைக் கடந்து நிரந்தர சமாதானத்துக்கான வாயில்களைத் திறக்க வேண்டும். கடந்த காலத் தலைவர்கள் காலாவதியாகி நீண்டகாலமாகி விட்டது. அவர்கள் உண்மைகளை வெளிப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுங்குவதே மேல். இது ஆயுதமேந்திய தமிழ் தமிழ் தலைமைகளுக்கு மட்டுமல்ல ஆயுதமே ஏந்தாத மக்கள் மீது எவ்வித கரசரனயுமமற்ற இந்த ஆயுதமேந்தியவர்களின் மீது சவாரி செய்யும் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பொருந்தும். உங்களுடைய பருப்புகள் இனி வேகாது. இனி புதிய விதி செய்ய வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமுறை உருவாக வேண்டும்.

 

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

‘50501’ என்ற போராட்டக்குழுவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் மக்கள் வீதிகளில் திரண்டு ஜனாதிபதி ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்பிரல் 5 ஆம் திகதி மற்றும் 19 களில் நியுயோர்க் நகரம் மற்றும் வெள்ளைமாளிகை முன் திரண்ட மக்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷமிட்டனர். ‘50501’ அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது. 50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘50501’ என இப்போராட்டக்குழுவுக்கு பெயரிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் குடிவரவு கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரச ஊழியர்களின் ஆட்குறைப்பு போன்ற அடாவடியான கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்றனர்.

“அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை“ பதாதைகளை தாங்கிக் கொண்டு கோஷமிடுகின்றனர். ட்ரம்ப் கிட்லர் போன்று செயற்படுவதாகவும் விமர்சிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

இந்தியாவின் மத்திய ரிசேர்வ் படையினரின் தொடர் தாக்குதல்களில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீப காலங்களில் பல நக்சல் போராளிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் லுகு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த நக்கசல் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசேர்வ் படை அறிவித்துள்ளது. அத்துடன் தமது தரப்பில் யாரும் காயமுறவில்லை எனவும் கூறியுள்ளது. நக்சல் போராளிகளிடமிருந்த துவக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

பிள்ளையானால் பாதிக்கப்பட்ட தங்கள் தாய் உதயகலாவை மீட்டுத்தர ஜனாதிபதியிடம் மகள் கோரிக்கை !

பிள்ளையானால் பாதிக்கப்பட்ட தங்கள் தாய் உதயகலாவை மீட்டுத்தர ஜனாதிபதியிடம் மகள் கோரிக்கை !

யாழ்ப்பாண சிறையிலிருக்கும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா தயாபராஜ்யை விடுதலை செய்யும்படி அவரது மகள் நேற்றைய தினம் யாழ் ஊடகமையத்தில் அளித்த பேட்டியில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று 4 மாதங்களுக்கு முதல் உதயகலாவின் கணவர் தயாபரராஜ் சிறையில் தனது மனைவிக்கு கொடுமைகள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். பதினொட்டு வயதிற்கு குறைந்த உதயகலாவின் மகள் தனது மூன்று சகோதரர்களுடன் அம்மம்மாவின் வழிகாட்டுதலில் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்துள்ளார்.

தனது தாயார் மட்டக்களப்பில் அரசியல் கட்சி தொடங்கி செயற்பட்டது பிடிக்காமல் சூழ்ச்சி செய்து பிள்ளையான் தனது தாயாரை சிறையிலடைத்துள்ளதாக கூறினார். மேலும் பிள்ளையானால் தனது தாய்க்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் அச்சிறுமி தானும் தனது சகோதரர்களும் அம்மம்மாவின் பராமரிப்பில் பல அசொளகரியங்களுடன் வாழ்வதாகவும் தெரிவித்தார். தனது தாயார் சிறையில் மிகுந்த மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளுடன் அவதிப்படுவதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

பெண் வேடமிட்டு கோவிலில் திருடிய ஆண் ! நால்வர் இணுவிலில் கைது !

பெண் வேடமிட்டு கோவிலில் திருடிய ஆண் ! நால்வர் இணுவிலில் கைது !

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு !

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு !

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை 846,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாட்களில் 123,945 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான 24,776 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,060 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,873 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,387 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,404 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 5,719 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

வெளிவந்தது போலி நாணயத்தாள் !

வெளிவந்தது போலி நாணயத்தாள் !

ஏப்ரல் 21 அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ஒலுவில் – 02 ம் பிரிவில் உள்ள சிறிய சில்லறை கடையில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனவே கடை உரிமையாளர்கள், பொது மக்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான நாணயங்கள், இருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குங்கள் என போலிசார் தெரிவித்துள்ளனர்.