Multiple Page/Post

தோட்டப்புற தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை

பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம்

chals_.jpgவவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது. வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங்களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம், எலிக் காய்ச்சல் டெங்கு அதிகரிப்பு * டெங்கு – மூவர் பலி; 515 பாதிப்பு * எலிக் காய்ச்சல் – இருவர் பலி; 263 பாதிப்பு

aedes_aegypti.jpgமாத்தளை மாவட்டத்தில் டெங்கு, மற்றும் எலிக் காய் ச்சல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன. இது வரை டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட மூவரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட இருவரும் உயிரிழந்துள்ளதாக மாத் தளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இம்மாவட்டத் தில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 515 பேரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட 263 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் உக்குவளை பிரதே சத்திலேயே மிகக் கூடுதலான எண்ணிக் கையானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் 161 பேர் இந் நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். அதே சம யம் எலிக் காய்ச்சல் இம் மாவட்டத்தில் இறத்தோட்டை, பள்ளேபொள, யடவத்த, தம்புள்ள, ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமாக பரவி வருகின்றது.

தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மேற்படி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

‘பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்’ – சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார். அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐபிசி மற்றும் புலி ஊடக ‘அரசியல் ஆய்வாளர்கள்’ : ஆர் யூட்

ibc_logoஅண்மைக் காலமாக ஐபிசி அரசியல் ஆய்வாளர்கள் புதிய அரசியல் கண்டுபிடிப்பொன்றைச் செய்துள்ளனர். அதுதான் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் மூளப் போகிறதாம். இந்தப் போரைத் தடுப்பதாயின் இந்தியா இலங்கைத் தமிழரோடு நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்துவிட்டதாகவும் இதை ஈழத் தமிழர்களே தடுக்க முடியும் என்பது போல ஓர் புரளியை கிளப்பிய வண்ணம் உள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த உடன்படிக்கை இந்திய நலன்சார்ந்த ஒன்று என்றும் இதில் ஈழத் தமிழர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்றும் இவர்கள் போன்ற புலி ஆய்வாளர்கள் அன்று கூறினார்கள். அதில் ஓரளவு உண்மையும் உண்டு. அப்படியானால் தமிழ் மக்களுக்கு அதனிலும் சிறந்த தீர்வை வென்றெடுக்கும் அரசியல் தகுதி புலிகளிடம் இருந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக சிறிலங்கா நீதிமன்றம் முடிவெடுத்து விட்டது என்று இதே புலி ஆய்வாளர்கள் ஒப்பாரி வைத்தார்கள். இலங்கை நீதிமன்றம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வடக்கு கிழக்கை யார் இணைத்தது?

1987ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு இணைவுக்கு வழி அமைத்தது. இதே ஒப்பந்தத்தைத்தானே ஈழத்தமிழருக்கு ஒன்றுமில்லாத ஒப்பந்தம் என்று அன்று சொன்னார்கள். இன்று அதே ஆய்வாளர்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூழப்போகிறது என்று புதுக்கதை விடுகிறார்கள்.

13 ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் கடந்த ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றி நாட்டையே ஆட்சி செய்தார்கள். அதில் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக இன்னும் போராடுகிறார்கள். வேறுபட்ட வழிகளில். அவர்களுடைய போராட்டத்திற்கு அமெரிக்க – இந்திய – சீன ஆகிய நாடுகளின் நலன்கள் தடையாக இருக்கவில்லையா? ஈழப்போராட்டத்திற்கு மட்டும் தான் இவைகள் எல்லாம் தடைகளா? அல்லது நேபாளம் என்ன அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலா இருக்கின்றது?

கொலம்பியாவில் எத்தனை ஆண்டுகள் FARC எனும் கொரில்லா அமைப்பு அந்த அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. அவர்களை ஏன் எந்த ஏகாதிபத்தியமும் அழிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு அந்த அமைப்பின் பிரதித் தலைவரை கொலம்பிய இராணுவம் எல்லை கடந்து சென்று பொலிவிய மண்ணில் வைத்துக் கொலை செய்த போது தென் அமெரிக்கப் பிராந்தியமே கொலம்பிய நாட்டுக்கு எதிராக அணி திரண்டதைப் பார்க்கவில்லையா? அதற்கு என்ன காரணம்?

புலிகளின் உண்மையான அரசியல் வங்குரோத்தை மூடிமறைத்தக் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டம் தோற்றுப் போனதற்கு ஏதோ வல்லரசுகளின் சதி என்றும் பிராந்திய நலன்சார்ந்த அரசியல் பொருளாதார காரணிகளே காரணம் என்றும் இன்றும் கூட உண்மையை மறைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்லி இந்திய மண்ணில் கால் பதித்த போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் அவர்களுக்கு பின்னால் நின்றவர்களும் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டு தான் அந்த மண்ணுக்கு அறிமுகமானார்கள். அன்றே எம்முடைய அரசியல் உலகுக்கு தெரியவந்துவிட்டது. அன்றே எமது உரிமைப் போர் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டது. அத்துடன் ஈழத்தமிழர்களுடைய அரசியல் வங்குரோத்து வெளிச்சத்திற்கு வந்தது. அன்றிலிருந்து வெள்ளை முள்ளிவாய்க்கால் வரை ஒன்றா இரண்டா எத்தனை சகோதரப் படுகொலைகளும் துரோகங்களும் இந்தப் போராட்டத்தில் நடந்தேறின. எதிரியால் அல்லவே.

இலட்சக்கணக்காண இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ள இந்திய மண்ணில் இன்றும் எத்தனை போராடுகின்ற அமைப்புகள் ஆயுதப் போரட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழிக்க முடியாத இந்திய அரசும் அந்த இராணுவ இயந்திரமும் கடல் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழித்து விட்டதாம். இது இந்திய பலத்தைக் காட்டுகிறதா? அல்லது புலிகளின் அரசியல் வங்குரோத்தைக் காட்டுகிறதா?

கொலை செய்வதும் பணம் சேர்ப்பதும் தான் போராட்டம் என்றும் உண்மையான போராட்டத்தை வியாபார மயப்படுத்தி (பல போராளிகளைப் பலிகொடுத்து நிலங்களைப் பிடிப்பதும். பின் தேர்தல் காலங்களில் கொழும்பு பண மூட்டைக்காக பிடித்த நிலத்தை இராணுவத்திடம் விட்டுக்கொடுப்பதும் நாம் அறியாத ஒன்றல்ல.) கடந்த 30 ஆண்டுகாலம் தர்பார் ஆட்சி நடத்திய புலிகளையும் அவர்கள் செய்து முடித்த விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தின் உண்மையான காரணங்களையும் கண்டறியாது மீண்டும் மீண்டும் ஆய்வாளர் அரசியல் நிபுணர் என்று ஏதேதோ பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களையும் இந்த ஊடகங்களையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தவது உண்மையாக மக்களை நேசிப்பவர்களுடைய கடமையாகும்.

எந்தவொரு நாடும் குறிப்பாக வல்லரசுகள் தமது நலன்சார்ந்த அரசியலையே முன்னெடுக்கிறார்கள் என்பதை அறிய அரசியல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோர்ஜியா மீது ரஸ்யா படையெடுத்ததும் பின் சவுத் ஒசெற்றியா அப்ஹாசியாவை தனி நாடாக அங்கிகரித்ததும் அந்த இரு நாட்டு மக்களின் நலன்சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மேற்கு நாடுகள் கொசோவோவை தனிநாடாக அங்கிகரிக்க முடிவெடுக்கப்பட்டதும் கொசோவோவின் நலன்சார்ந்து அல்ல. (ஆனால் அங்கு சவுத் ஒசெற்றியா, அப்ஹாசியா, கொசோவோ மக்கள் நலன் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.)

சீனாவினுடைய பொருளாதார விஸ்தரிப்பு வாதம் இந்திய பொருளாதாரத்தில் ஆளுமையுள்ள அமெரிக்காவையே விழுங்கிவிடுவது போன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திரத்தில் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று ஆய்வுசெய்வது சரியான ரூமச். இலங்கையிலே உருவாகி உள்ள சீனாவினுடைய ஆளுமை இந்திய நலனுக்கு ஆபத்தாக இருந்தால் அதை இந்தியாவும் றோவும் பார்த்துக் கொள்ளட்டும். தங்களது சொந்த மக்களையும் புலிகளின் தலைமையையும் ஆய்வு செய்தே கொன்றொழித்த இந்த ஐபிசி ஆய்வாளர்கள் இந்தியாவிற்காக ஆய்வு செய்து இந்தியாவை அழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. புலிகளின் புலனாய்வு அளவிற்கு றோவை குறைத்து மதிப்பிட முடியாது. நடந்த சம்பவங்கள் அப்படி இருக்கிறது.

எத்தினை பெரிய தியாகங்களைச் செய்து வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டத்தை காப்பாற்ற வக்கில்லாத புலிகளுக்கும் புலி ஆய்வாளர்களுக்கும் இந்திய நலன்களை எப்படிக் காப்பாற்றுவது என்று ராஜதந்திரம் தெரித்திருக்கிறது என்றால் அது எவ்வளவு நகைப்பிற்குரியது. இதற்குள் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஐபிசியில் அட்வைஸ் வேறு. புலிகளிடமும் இந்த ஆய்வாளர்களிடமும் ஒரு தடவை இந்தியாவை ஆட்சி செய்யுங்கள் என்று ஆட்சியை ஒப்படைத்திருந்தால் ஆறு மாதத்தில் அந்த மண்ணில் சிறுபான்மை இனங்களே இருந்திராது. அத்தனை சிறுபான்மையினரும் சீனாவில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பார்கள். முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கும் பங்களாதேசுக்கும் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார்கள். இதற்குள் ராஜதந்திர ஆய்வு செய்கிறார்கள்.

அமெரிக்கா சத்தம் போடாமல் இருக்கவே ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலிகளும் அவர்களின் பக்த கோடிகளும் ஒரு பேச்சுக்கு தமிழீழத்துக்கு நாங்கள் ஆதரவு என்று யாராவது ஒரு அமெரிக்க அதிகாரி சொல்லியிருந்தாலே அமெரிக்கா போலந்திலும் செக்குடியரசிலும் நிறுவவுள்ள ஏவுகணை எதிர்ப்பு ராடர்கருவிகளை காங்கேசந்துறையில் பூட்டி இந்தியாவை மட்டுமல்ல அதற்கு மேலேயள்ள சீனாவையும் ஒரு கை பாருங்கள் என்று வெள்ளைத் தாளில் கையொப்பமிட்டு கொடுத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுடைய ஆய்வும் ஆவியும்.

யாழ். இரவுநேர பஸ் சேவையில் மாற்றம்

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில் இப்போது  மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து யாழ். குடா நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இறுதி பஸ் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய நேரப்படி இந்த பஸ் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் என வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் பதில் பொது முகாமையாளர் எஸ். சிவனேந்திரன் அறிவித்தள்ளார்.

இரவு 9.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்குச் சட்டம் தற்போது 11.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.   இதனால், யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களாக இரவில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த நிலைமை மாறி,பொது மக்கள் இரவு நேரத்திலும் படிப்படியாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.

வர்த்தக நிலையங்களும் இரவு 7.00 மணிவரை திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தக் கூடிய நிலையும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 2ஆவது சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராமயில் நிர்மானம்

இலங்கையின் இரண்டாவது  சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த உடமத்தலாவப் பகுதியில் நிர்மானிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தின் பெயர் தகஷின் லங்கா சர்வதேச விமான நிலையம்  என்பதாகும்

இதன் நிர்மானப்பணிகள் இரண்டு கட்டமாக இடம் பெறவுள்ளதுடன் 3ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  முதலாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 2000 கோடி செலவிடப்படவிருக்கிறது.

கோரம் இன்றி சபை ஒத்திவைப்பு

26parliament.jpgகோரம் இன்மையால் இன்று பிற்பகல் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான குறை மதிப்பீட்டு விவாதம் சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சபையில் போதிய கோரம் இல்லை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு அழைக்கும் மணி ஒலிக்கப்பட்டது.

02:05 மணி முதல் 02:10 மணிவiரை மணி ஒலித்தபோதும் மொத்தம் 8 உறுப்பினர்களே அங்கு ஒன்று கூடினர். சபையை தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 21 உறுப்பினர்கள் தேவை என்பதால் கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி நிருவாகத் தலைவர் அறிவித்தார்.

கிழக்கு மாகாணக் கட்டடங்களில் புலிகளின் பெயர்கள் : உடன் அகற்றுமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்,

“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில்,

“கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும்.பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர்,வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன் வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையால் உலகையே ஆட்டிப் படைத்த மைக்கல் ஜாக்ஸன் இன்று காலமானார்!

25michael_jackson.jpg
பிரபல பொப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜக்சன் லொஸ் ஏஞ்சலில் இன்று தனது 50வது வயதில் காலமானார்.

ஜக்சனின் சுவாசம் நிறுத்தப்பட்டவிட்டதாக வியாழன் நள்ளிரவு அவசர மருத்துவப்பிரிவினர் லொஸ் ஏஞ்சலில் உள்ள அவருடைய பெவர்ல் கில் இல்லத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின்னர் இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர் இசைநிகழ்வுகளை நடத்ததுவதற்காக யூலை 13ல் லண்டனுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்ததது.

Michael Jackson’s Website/Blog:
http://www.michaeljackson.com/