Multiple Page/Post

தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பொதிமுறை அறிமுகம்

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கமைய இதற்கான கலக ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிஹேவா நேற்று தெரிவித்தார்.

இந்த புதிய பொதிமுறைக்கு வேலையற்றவர்களுக்கான சேமநலன் காப்புறுதி திட்டம்  என பெயரிடப்பட்டுள்ளது. தொழில் இழந்தவர்களுக்கு மாதாந்த நஷ்டஈடு கொடுப்பனவு ஒன்று இந்த பொதிமுறைக்கமைய வழங்கப்படும்.

இந்த புதிய பொதிமுறை தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சர் அதாவுத செனவிரட்னவுக்கு வழங்கியுள்ளதுடன், விஷேட குழுவொன்றையும் நியமித்துள்ளார். நிதி, தொழில் உறவுகள், கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள், மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச் சபை, ஊழியர், சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இக்குழுவில் அடங்குவர்.

இந்த பொதிமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை தனது தலைமையில் கூடி ஆலோசனை செய்து, ஆரம்பக்கட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். தொழில் இழந்தவர்களுக்கு இந்த புதிய பொதிமுறைக்கமைய மாதாந்தம் நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. தொழி லிழக்கும்போது ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்து 50 வீத கொடுப்பனவு சுமார் ஒருவருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.

திரும்ப தொழில் கிடைக்கும் வரை அல்லது இழந்த தொழில் மீண்டும் நியமிக்கப்படும் வரை இந்த தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் இது மீளாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரது தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி அவசர யோசனை முன்வைத்ததை அடுத்து தொழில் அமைச்சர் குறுகிய காலத்தில் இதற்கான திட்ட வரைபை தயாரித்து வருகின்றார். உலக பொருளாதார நெருக்கடியை அடுத்து கைத்தொழில் துறையைச் சேர்ந்த 6.5 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் தொழில்களை இழந்தனர்.

இந்நிலையில் உலக வங்கியின் அண்மைக்கால அறிக்கையின் படி மிகவும் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் ஏற்றுமதி துறை சிறிய பாதிப்புக்குள்ளான போதிலும், தற்பொழுது அது சீராகிவருகின்றது என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1994-1997 ஆம் ஆண்டு காலத்தில் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற நெருக்கடிக்கு ‘சிரம வாசனா’ என்ற நிதியத்தை ஆரம்பித்து உரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். இந்த திட்டம் புதிய பொதிமுறைக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்தேவி ரயிலில் தீப்பிடிப்பு: இரு பெட்டிகள் முற்றாக சேதம்

train.jpgயாழ்தேவி ரயில் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றிக்கொண்டது.

கொழும்பிலிருந்து நேற்றுக் காலை தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற யாழ்தேவி ரயிலிலே காலை 10.40 மணியவில் தீப்பிடித்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யாழ்தேவி ரயில் அநுராதபுரம் சாலியபுரம் ரயில்வே நிலையத்தை அடையும் தறுவாயிலேயே ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பரவியதாக அநுராதபுரம் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர் கூறினார்.

ரயிலின் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள பெட்டியிலேயே முதலில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் இத்தீ வேகமாக இரண்டாவது பெட்டிக்கும் பரவியுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தினால் அல்லோலகல்லோலம் அடைந்ததையடுத்து ரயில் திறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத் தீப்பிடிப்பு சம்பவத்தினால் பயணிகள் எவரும் பாதிப்படையவில்லையெனவும் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தினால் யாழ்தேவியின் ரயிலின் ஒரு பெட்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றைய ரயில் பெட்டியும் பெருமளவு சேதமாகியுள்ளது. சிற்றுண்டிச்சாலை அமைத்துள்ள பகுதியிலேயே தீ ஏற்பட்டதனால் சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென்ற சந்தேகம் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாளர், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வாகனங்களில் இருக்கைப்பட்டி அணியாமல் பயணம் செய்தால் 2 ஆயிரம் ரூபா அபராதம்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனங்களில் பயணம் செய்வோருக்கு இருக்கை பட்டி (Seat belt)கட்டாயப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் வாகன பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் வாகன விபத்துகளை கருத்திற் கொள்ளும் போது வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகள் இருக்கைப் பட்டி அணியாமையினாலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பழைய வாகனங்கள் உட்பட சகல வாகனங்களிலும் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கமைய முதற் தடவையாக இருக்கைப்பட்டி அணியாமல் பிடிபடுபவர்களுக்கு 1000 ரூபா முதல் 2000 ரூபா வரைக்கும், இரண்டாவது தடவைக்கு 2000 ரூபா முதல் 3000 ரூபா வரைக்கும், மூன்றாவது தடவைக்கு 3000 ரூபா முதல் 4000 ரூபா வரைக்கும் அபராதம் அறவிடப்படவுள்ளது. அத்துடன் வாகன சாரதியின் அனுமதி பத்திரமும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றம்

யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாகக் குடியிருக்கும் குடும்பங்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.  திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ. அழகரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்சிராங்குடாவைச் சேர்ந்த 125 குடும்பங்களும் சாகாமத்தைச் சேர்ந்த 141 குடும்பங்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வட,கிழக்கு அபிவிருத்தியில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த பிரதமர் யோசனை

ratnasri-wickramanayake.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, காட்டுத் தர்பாருக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கோ இனிமேல் இடமளிக்கப்படாதெனவும் கூறினார்.

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற பயிற்சி முடித்து வெளியேறும் படை வீரர்களுக்கான நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த நாட்டிலுள்ள ஒருபகுதி மக்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களை படுகொலை செய்யும் இராணுவம் எம்மிடம் இல்லை.  இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலும் காட்டுத் தர்பார் அதிகாரம் செலுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். அதே போன்றே ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டது. தற்போது எம் முன்னால் உள்ளது அபிவிருத்தி யுத்தமே. இதனையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அபிவிருத்தி திட்டமொன்றை முடிக்க ஒப்பந்தக் காரர்கள் மூன்று வருடங்கள் கோரினால் அதனை எமது படைவீரர்கள் சில தினங்களில் முடித்து விடுவார்கள்.

நீண்டகால வரலாறு கொண்ட எமது தாய்நாட்டை, அதன் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது படையினரின் பொறுப்பு. எமது படைவீரர்கள் உலகிலேயே சிறந்த வீரர்களாகவும் மிகவும் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர்.  எந்தவொரு சமூகத்திற்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அப்படியான சமூகமே முன்னேறும். ஒழுக்கமுடையவர்களால் ஒருபோதும் சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாது. இளைஞர்கள் அனைவருக்கும் எமது படைவீரர்களின் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் அனைவரையும் படையில் சேருமாறு நான் கூறுவதாக நினைக்கக் கூடாது.

பிரபாகரனின் செயற்பாடுகளினால் எமது நாடு 30 வருடங்கள் பின் தங்கிவிட்டது. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்ட கலிங்க மகான் என்ற மன்னருக்கு அடுத்த படியாக மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர் பிரபாகரன். உலகில் நிகழும் கொடூரமானவராக இருந்த அவரின் பயங்கரவாதத்திற்கு எம்மால் முடிவுகட்ட முடிந்திருக்கின்றது. இதற்கு படைவீரர்களின் அர்ப்பணிப்பே காரணமாகும்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்ட 281 படைவீரர்கள் நேற்று அங்கிருந்து வெளியேறினர். இவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம்பெற்றது.

நாளை நாடளாவிய ரீதியில் அரச மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் டாக்டர்கள் நாளை செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமாகியுள்ளதாகவும் பொது மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை, மருத்துவம் தொடர்பாக தமது சங்கம் தெரிவிக்கும் ஆலோசனைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்றுக்கொண்டாலும் சுகாதார அமைச்சர் அதனை ஏற்பதில்லை எனவும் இச் சங்கத்தின் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் உள்ளக நியமனங்கள், இடமாற்றங்கள் என்பன அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, நாட்டிற்கு சிறந்த மருத்துவ சேவை இடம்பெற வேண்டுமானால் சுகாதார அமைச்சர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் மேலும் தெரிவித்தது.

நாளை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் காசல் வைத்தியசாலை, லேடி றிச்வே ஆஸ்பத்திரி, மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் டாக்டர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1 கோடி 20 இலட்சம் ரூபா கொள்ளை தொடர்பான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது

_arrested.jpgமாதம்பை யிலுள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை தொடர்பில் பிரதான சந்தேக நபரான ஆனமடு பிரதேசசபை உறுப்பினரொருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன்போது அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவையும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வான்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் கொஸ்வத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மாதம்பை நகரிலுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான இரும்புத் தொழிற்சாலைக்கு கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 1 கோடி 20 இலட்சம் ரூபா சம்பளப் பணம் லுணுவில பாலத்தில் வைத்து பொலிஸ் சீருடையணிந்த சிலரால் கொள்ளையடிக்கப்பட்டது.

இக் கொள்ளையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை கொஸ்வத்தை பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரதான சந்தேக நபராக ஆனமடு பிரதேசசபை உறுப்பினர் இருப்பதாக சிலாபம் விசேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இனங்கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்பு படைப் பிரிவு கட்டளைத் தளபதி விஜயம்

வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு நிலையங்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேசங்களிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் நிலைமைகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் படைப் பிரிவைச் சேர்ந்தார்களும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றன.இரு புனர்வாழ்வு நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட வன்னி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வன்னி பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியுடன் இராணுவத்தின் 211வது படையணியின் கட்டளைத் தளபதி லெப்டினன்ற் கேர்ணல் ஜகத் ரத்நாயக்க, யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். இந்துவிலிருந்து 93 மாணவர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு

jaffna-hindu-college.jpgயாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பொறியியல் பீடத்திற்கு 25 பேரும் மருத்துவபீடத்திற்கு 12 பேரும் உட்பட 93 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி அதிபர் வி.கணேசராஜா தெரிவித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான “Z”வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே இம்மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் கணிதப் பிரிவிலிருந்து பொறியியல்  20, பொறியியல், பொறியியல் 1, கணிய அளவையியல் 2, கணினி விஞ்ஞானம் 4, அளவையியல் விஞ்ஞானம் 1, தகவல் தொழில்நுட்பம்8, பௌதீக விஞ்ஞானம் 5, கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்4 என்ற அடிப்படையில் 49 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

விஞ்ஞான பிரிவிலிருந்து மருத்துவம் 12, மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் 1, உணவு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் 1, உணவு விஞ்ஞானமும் போசாக்கும் 1, விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடியும்1, விவசாயம்7, பிரயோக விஞ்ஞானம்1, உயிரியல் விஞ்ஞானம் 3, யுனானி மருத்துவமும் அறுவை சிகிச்சையும் 1, நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்1, சித்த மருத்துவம் 3 என்ற அடிப்படையில் 32 பேர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் வர்த்தக பிரிவிலிருந்து சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் 1, வணிகவியல் 1 என்ற அடிப்படையில் 2 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். மேலும் கலைப்பிரிவிலிருந்து கலை2, கலை (வெகுஜன ஊடகம்) 4, கலை (அரங்கக்கலை) 4 என்ற அடிப்படையில் 10 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

யாழ், வவுனியா மற்றும் ஊவா தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டை 15இல் அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்ப ஏற்பாடு

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கும், ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்குமான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் எதிர்வரும 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக யாழ். மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற 473 விண்ணப்பங்களுள் 335 ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்தார்.

சரியான தகவல்களை சமர்ப்பிக்காத காரணத்தினால்138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தபால்மூல வாக்களிப்பை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி யாழ். கச்சேரியில் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவிருப் பதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை வவுனியா நகரசபைத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்காக கிடைக்கப்பெற்றுள்ள 197 விண்ணப்பங்களுள் 183 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சரியான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்14 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

வவுனியா நகரசபைத் தேர்தலுக்காக சுமார் 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்களும் நடாத்தப்படவுள்ளன.  எதிர்வரும் 07ஆம் திகதி சிரேஷ்ட தலைமை அலுவலகர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். 8ஆம் திகதி கிராம அலுவலகர்கள் மற்றும் அஞ்சல் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான பயிற் சிகள் நடத்தப்படுமெனவும் 09ஆம் திகதி பிரதம கணக்கீட்டு மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான பயிற் சிகள் வழங்கப்படுமெனவும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.

மேலும் பதுளை மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற 17 ஆயிரத்து 418 விண்ணப்பங்களுள் 16 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் உதவித் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.