யாழ்தேவி ரயில் நேற்றுக் காலை திடீரென தீப்பற்றிக்கொண்டது.
கொழும்பிலிருந்து நேற்றுக் காலை தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற யாழ்தேவி ரயிலிலே காலை 10.40 மணியவில் தீப்பிடித்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யாழ்தேவி ரயில் அநுராதபுரம் சாலியபுரம் ரயில்வே நிலையத்தை அடையும் தறுவாயிலேயே ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பரவியதாக அநுராதபுரம் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர் கூறினார்.
ரயிலின் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள பெட்டியிலேயே முதலில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் இத்தீ வேகமாக இரண்டாவது பெட்டிக்கும் பரவியுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தினால் அல்லோலகல்லோலம் அடைந்ததையடுத்து ரயில் திறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத் தீப்பிடிப்பு சம்பவத்தினால் பயணிகள் எவரும் பாதிப்படையவில்லையெனவும் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால் யாழ்தேவியின் ரயிலின் ஒரு பெட்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றைய ரயில் பெட்டியும் பெருமளவு சேதமாகியுள்ளது. சிற்றுண்டிச்சாலை அமைத்துள்ள பகுதியிலேயே தீ ஏற்பட்டதனால் சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாமென்ற சந்தேகம் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டாளர், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.