நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் டாக்டர்கள் நாளை செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமாகியுள்ளதாகவும் பொது மக்களுக்கு உரிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை, மருத்துவம் தொடர்பாக தமது சங்கம் தெரிவிக்கும் ஆலோசனைகளை சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்றுக்கொண்டாலும் சுகாதார அமைச்சர் அதனை ஏற்பதில்லை எனவும் இச் சங்கத்தின் பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் உள்ளக நியமனங்கள், இடமாற்றங்கள் என்பன அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, நாட்டிற்கு சிறந்த மருத்துவ சேவை இடம்பெற வேண்டுமானால் சுகாதார அமைச்சர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் மேலும் தெரிவித்தது.
நாளை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் காசல் வைத்தியசாலை, லேடி றிச்வே ஆஸ்பத்திரி, மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் டாக்டர்களும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.