21

21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாகவரும் முதலிடத்தில் பின்லாந்து – இலங்கைக்கு எத்தனையாவது இடம்..?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது முறையாக மீண்டும் ‘பின்லாந்து’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நோர்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

 

இதில் இலங்கை 128ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தரவரிசையில் ஒருபடி கீழே உள்ளது.

 

இந்தியா இந்த வருடமும் 126வது இடத்திலும், சீனா 60வது இடத்திலும், நேபாளம் 93வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், மியான்மர் 118வது இடத்திலும், பங்களாதேஷ் 129வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 137வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ‘Sustainable Development Solutions Network’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20) உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆய்வு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கையைத் தேர்வு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, அநீதிகள் மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது நாடாக இலங்கை !

காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கான அணுகுமுறை திட்டத்தின் பணிப்பாளர் பந்துல சிறிமல் தெரிவித்துள்ளார்.

 

இத்திட்டத்தின் கீழ், அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னறிவிப்புத் தரவுகளை விரைவாக வழங்குவதற்காக வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமைப்புகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

 

முன்கூட்டியே முன்னறிவிப்பு தரவுகளை வழங்குவதன் மூலம் மனித உயிர்களை மட்டுமல்லாது சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என்றார்.

 

இந்நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களுக்காக வருடமொன்றுக்கு 238 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதாகவும், நீர்த்தேக்கங்கள் தொடர்பான அனர்த்த நிலைமைகளைத் தடுப்பதற்கு 152 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

அனர்த்த நிலைமைகளைத் தணிப்பதற்காக இலங்கையில் ஒரு குடும்பம் பதினெட்டாயிரம் (18,000) ரூபாவையும், ஒருவர் வருடத்திற்கு நான்காயிரம் (4,000) ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .